Monday, March 21, 2005

வாருங்கள் மருமகனே!

வாருங்கள் மருமகனே! வாழ்த்தி வரவேற்கிறேன்!

ஈழத்தின் சுழற்பந்து எம் வீட்டு மதிமலரை மணந்தது. முரளியாரே! இனி நீர், ஆடு களத்தில் மட்டும் பந்தை வீசிக் கொண்டிருக்க மட்டீர்கள். கிடைத்திருப்பது மலர் அல்லவா? அதிலும் வெறும் மலரா? மதி நிறைந்த மலரல்லவா? வாழ்க்கை களத்தில் நறுமணமும் வீசிக் கொண்டிருப்பீர்கள்.

வாழிய நலனே!

தமது குடும்ப நண்பர்கள் என்பதால் இணைத்து வைத்த சகோதரர் சந்திரசேகர் (திரைப்பட நடிகர்) சிறந்த செயல் புரிந்துள்ளார். எம் பாராட்டுகளும் நன்றிகளும். பாராட்டு சரி நன்றி எதற்கு? அவர் இணைத்து வைத்துள்ளது இரண்டு குடும்பங்களாக மட்டும் நான் காண வில்லை. உறவால், உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றிய எம் இரு நாட்டை இணைத்துள்ளார். ஈழநாடு, தமிழ்நாடு. எனவேதான் நன்றிகள்.

தமிழர்தம் உயர்வுக்கு பாரதியும், அவன் தாசன் பா தாசன் - பாரதிதாசனும் கண்ட கனவுகளின் மிச்சத்தையும் சொச்சத்தையும் இன்று நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். என்ன கனவு அது? உலகெலாம் பரவி நிற்கும் தமிழர்தம் தொப்புள் கொடி உறவுகள் மீண்டும் மீண்டும் இரண்டறக் கலந்து நாட்டு கொடியோடு போட்டியிட்டுப் பறக்க வேண்டும்.

தமிழன் தனியாளாய் எந்த தளத்திலும் நிற்கா நிலை வேண்டும்.

இத்தருணத்தில் ஒரு சிறு கேள்வியும் ஏனோ என் சிந்தையை தொலைக்கிறதே ஏன்?

நம் நாட்டில் நடந்த இத்திருமணத்தில் நமது இந்திய வீரர்கள் கலந்துகொள்ள வில்லையே ஏன்? சீப்புகள் ஒழிந்துவிடுவதால் திருமணங்கள் நிற்பதில்லைதான். இருப்பினும் கலந்துகொள்ளா காரணம் என்ன?

எனக்கு விடை பிடி படவில்லை. தெரிந்த வகையில் சமாதானம் செய்து கொள்கிறேன். போட்டிகள் நடப்பதால் அவகாசம் கிடைக்கவில்லையோ?

காரணம் எதுவெனினும் முக்கிய சிலரேனும் கலந்து கொண்டிருப்பின் அது நம்மை போற்றியதாகவும் ஆகும். நம் வீரர்களும் சமுதாய குடிமக்களே என்பதை நிறுவியதாகவும் ஆகும். எனக்கு என்னவோ அவர்கள் வானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எதிர் வரும் காலங்களிலாவது அவர்கள் பூமியிலும் வாழ பழகட்டும்.

நண்பர்களே! இது தனியான என்னுடைய வாழ்த்தல்ல, நம் அனைவரின் வாழ்த்துக்கள்தானே!


அன்புடன்
மன்னை மாதேவன்

No comments: