Sunday, February 27, 2005

சாட்டைகள் மேலும் சொடுக்கப்படட்டும்!

- மன்னை மாதேவன்

பேருந்து எரிப்பு வழக்கில் நீதிபதி கனகராஜ் சொடுக்கிய சாட்டை அரசையும், காவல்துறையையும், தொடர்புடைய குற்றவாளிகளையும் எரிச்சலடைய வைத்ததோ என்னவோ, வேதனையில் துடித்த என் எழுதுகோலுக்கு சற்று ஆறுதல் ஒத்தடம் கொடுத்திருக்கிறது. ஆம் “தொலைந்தது கோப்பா, நிர்வாக கட்டுக்கோப்பா?” என்ற என் கட்டுரையில் என் ஆதங்கத்தை கொட்டியிருந்தேன். “பயிர் மேயும் வேலிகள் நீதித்துறையிலுமா?” என்ற என் கட்டுரையும் நீதித்துறையையே தொட்டுநின்றது.

இந்நிலையில், இப் பேருந்து எரிப்பு வழக்கில் இதுவரை வழங்கப்பட்டு வரும் இடைநிலைத் தீர்ப்புகள், நீதித்துறையின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழக்க அவசியமில்லை என்னும் செய்தியை விளம்பிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக நம் போன்ற மக்கள் மீதும் ஒரு குறை கூறப்படுவதுண்டு. எந்த வழக்கிலும் ஆரம்பத்தில் உணர்ச்சி வயப்பட்டு அதிக அக்கரைக் காட்டுவது, பின்னர் கால ஓட்டத்தில் அதனை மறந்து அடுத்த சமீபத்திய வழக்கில் ஈடுபாட்டை இடமாற்றிக் கொள்வது என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் அதிகபட்ச உண்மை இருக்கிறது. நகர்வாலா வழக்கில் தொடங்கி ஷர்ஸத்மேதா வழக்கு ஈறாக சமீபத்திய பல வழக்குகளிலும் நம் அணுகுமுறை இதுவாகத்தான் இருந்து வருகிறது. இது சில சமயங்களில் குற்றவாளிகள் பயனடைய வாய்ப்பளித்து விடுகிறது. எனவே கணினியில் உலவும் நாமாவது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இவ் வழக்கை தொடர்ந்து கண்காணித்து பிறருக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

Wednesday, February 23, 2005

வந்து கடைத் திறவுங்கள்

- மன்னை மாதேவன்

வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!
உண்மை மதமுரைக்கும் உயர்மாட்சி தெளிந்திலதால்
எல்லையின்றி ஏமாற, ஏகம்பேர் காத்திருப்போம்.
“பகல்நேர பக்தி”- இவ் வேடமிட்டு விடம் விதைக்க,
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

தூய பக்திசெய்து, துயர்நீங்கி இறையடைய - இயந்திர
வாழ்வெமக்கு! இயலவில்லை, பொழுதுமில்லை.
காவி உடையணிந்த கறைபடிந்த “இடைத்தரகர்”
ஆயிரமாய் தேவையிங்கே – அயராது
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

மற்றிங்கே பெருளீட்ட, மா முதல்கள் தேவையுற,
ஒற்றைச் சல்லியின்றி, உதட்டளவில் பக்திசெல்லி
ஊரை அடித்தும் உலை வாயில் இடுதற்கு - இம் மடத்
தொழிலன்றி மற்றெவைதான்? நீர் செய்ய?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எங்கள் தலைவரெலாம், உம்மிடத்தில் ஓடிவந்து,
மகிழ்ந்து, நெகிழ்ந்து, மண்டியிட்டுத் தெண்டனிட்டு – உமது
கடைச் சரக்கு, கடைய ரெமக் கிடைப்பதற்கு,
நல்ல விளம்பரத்தை நல்கிடுவர் இலவசமாய்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

“முறறும் துறப்பது” அக்காலம், “முத்தமளிப்பது” இக்காலம்.
கொஞ்சுமொழி வஞ்சியர்கள் மஞ்சமதில் கொட்டுமிழ் நீர்,
காட்டிக் கொடுக்காமல் உம் காவியுடை தான் மறைக்கும.
கட்டில் சுகமளிக்கும் உம் காட்டில் மழை பொழியும்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

கள்ள பணமதிலே கடவுளர்க்கும் ஓர் பங்கை,
அள்ளி வழங்கிடவே அழுக்கான ஓர் கூட்டம்.
கட்டளை இடு தலைவா! “அறக் கட்டளைகள்” அமைத்திங்கு,
வட்டியுடன் முதலடித்து, வகையாய் நாம் வாழ்ந்திடலாம்.
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எனக்கு தெரிந்தொருவன், ஏழு கொலை செய்தனவன்.
நல்ல தொழிலாளி, நாணயஸ்தன் - வந்துமக்கு
துணையிருப்பன், வகையாய் எதிரழிப்பன் - உம்
வழியில் குறுக்கிடத்தான் இனி எவர் துணிவர்?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

அய்யகோ!
“இன்னது செய்கின்றோம்” – என்றரிந்தே செய்கின்றார்.
இவரிட மிருந்துநல் லிறையமுதை காப்பதற்கு
வந்துதிப்போர் எவருளரோ? – என
நொந்தே எழுதிவிட்டேன்.

உண்மை பக்திமார் உளமாற மன்னிப்பீர்!

Tuesday, February 22, 2005

தொலைந்தது கோப்பா? நிர்வாகக் கட்டுக்கோப்பா?

- மன்னை மாதேவன்

நான் இங்கு எழுத விழைவது அரசியல் விமர்சனமா? இல்லை. இன்றைய அரசியல் விமர்சனங்களே பலப்பல விமர்சனங்களுக்கு தளம் அமைத்து கொடுத்து விடுகிறது. காரணம் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து நின்று, பிறிதொன்றை விமர்சித்து, அதன் வழி உருவாக்கப்படும் கருத்தோட்டம், சமுதாயத்திற்கு பயன்படுவதைக் காட்டிலும், பங்காளி கட்சிகளுக்கான இலவச உதவியாக மாறிவிடுகிறது. கட்சிகள் விமர்சனங்களைக் கொண்டு தன்னை சீர்படுத்திக்கொள்ளும் காலங்கள் மலையேறிவிட்டன. விமர்சகர் தான் சார்ந்த கட்சி, இதே தவறை செய்யாது என உறுதியாய் நம்பிக்கை கொள்ள இயலாத அளவு அரசியல் தளம் தரம் தாழ்ந்து விட்டது. இந்த தத்துவங்களால் அரசியல் விமர்சனங்களே கூடாது என்பதல்ல என் முடிபு, மாறாக விமர்சிக்கும் தகுதியை விமர்சனங்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். எனது இந்த விமர்சனம் மனித உணர்வுகள் சம்மந்தப்பட்டது.

தன் பிள்ளைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு, நீண்ட நெடிய கனவுகளோடு உலவும் சாதாரண பெற்றோர்கள் இதயத்தில் அக்கினியை எரிமலையாய் கொட்டும் சம்பவங்கள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. இதனை கண்டிக்காத எழுதுகோல்
பிறவற்றை எழுதி தன் பிறவிப் பயனை அடைந்துவிட போவதில்லை என்ற வேதனையில்தான் இதனை எழுதுகிறேன்.

நம் அரசியல் இழிவின் உச்ச கட்ட அவலம் சில ஆண்டின் முன் நடந்தேரியதை நாடு மறந்திருக்காது. அதன் மிச்ச சொச்சத்தையும் மீண்டும் அரங்கேற்ற துடிக்கும் நிலை எண்ணி நெஞ்சம் கொதிக்கிறது. அன்று அரசியல், அப்பாவியாய் கல்லூரியில் பயின்றுவந்த இன்னுயிர்ச் செல்வங்கள் மூவரை உயிரோடு பேருந்தில் வைத்து கொளுத்தி தனது அகோர பசியை தீர்த்துக்கொண்டது. அவர்கள் செய்த பாவம் என்ன? அற்ப பதர்கள் வாழும் அதே பூமியில் பிறந்ததையன்றி வேறு என்ன தவறை செய்துவிட்டார்கள். இதை செய்தவர்கள் அரசியல்வாதிகளா இல்லை கேடு கெட்ட தீவிரவாதிகளா? இரண்டுமில்லை நாற்றமெடுத்த வாந்திகள். அன்றுமுதல் தாழ்ந்தே இருக்க வேண்டிய நம் அரசியல்வாதிகளில், "அந்த நாயினும் கீழோன் நானில்லை” என நெஞ்சுயர்த்தி எவர் தனக்குத்தானே கூறிக்கொள்ள முடிந்தவர்களோ அவர்களை மட்டும் உண்மை அரசியலாளர்களாக உயர்ந்த அரசியலாளர்களாக நாம் உளமாற ஏற்போமாக. சரி இது நடந்த கொடுமைக்கு நீதியாகி விடுமா? ஆகா அதற்குத்தான் வழக்கு வந்ததே!

நீதி தேவதையின் சிரசில் மற்றுமொரு கிரீடத்தை ஏற்ற இந்த வழக்கும் தேவதையின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. அன்று நம்மை ஆண்ட ஆங்கிலேயருக்கு “பிரித்தாளும் சூழ்ச்சி” இன்று நம்மை ஆள்வோருக்கு “இயன்றவரை தாமதப்படுத்து சூழ்ச்சி”. வழக்குகளின் தீர்வுக்கான காலத்தை நிர்ணயிக்க எந்த காலதேவனை அழைப்பது? வழக்குகளையே வழக்காக்கி விடும் அதி நவீன மனிதர்களல்லவா நாம். மருத்துவக் கல்வி மாணவன் நாவுக்கரசனை நினைவிருக்கிறதா? இங்கு நினைவு படுத்தியமைக்காக அந்த அமைதி பிள்ளையின் பெற்றோரின் மன்னிப்பை கோருகிறேன்.

தருமபுரியில் தீயிடப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை திரு வீராசாமி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடந்த முறைகளை பற்றியோ அல்லது ஏற்பட்ட கால தாமதம் குறித்தோ (அல்ல அல்ல ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் குறித்தோ) நான் எழுத எண்ணவில்லை. காரணம் இவைகளெல்லாம் வழக்குகளின் அனுமதிக்கபட்ட மரபுகளாகிவிட்டன. ஆனால் அதையும் தாண்டி இந்த வழக்கு அடிப்படையையே அசைத்து விட்டது. அரசின் பாதுகாப்பில், பொறுப்பில் இருந்த கோப்பு மாயமாய் மந்திரமாய் மறைந்தே விட்டதாம். பாவிகளே உங்கள் உண்மை நிறம்தான் என்ன? நீங்கள் கடமையே கண்ணாகிய அதிகாரிகளாக, அதிகார இமயத்தையே கையில் தாங்கிடும் அரசியல்வாதியாக, வேறு எவராகத்தான் இருந்துவிட்டு போங்களேன். அடிப்படையில் நீங்களும் மனிதரல்லவா? இந்த வழக்கின் கோப்பு தொலைந்து விட்டது என்று கூறிய அந்த ஒரு நொடியை எண்ணிப்பாருங்கள். கருகிய அந்த பிஞ்சுகளின் பெற்றாரின், உற்றார் உறவினர்களின் உயிர் துடிப்பைக்கூட உணர முடியாத இதயமற்ற இயந்திரங்களாக உங்களால் எப்படி மாறிவிட முடிகிறது?

நீங்கள் தொலைந்துவிட்டது என்று கூறியது வழக்குக்கான கோப்பையா? அல்லது மனித நாகரீகத்தின் முகவரியையே தொலைத்து விட்டடீர்களா? சற்று உங்கள் அதிகார தோலை உரித்து உதறிவிட்டு இந்த காட்சியை உங்கள் மனத்திரையில் இடுங்கள். எதிலும் தான் சம்மந்தபடாமல் மூன்றாமவராக பாவித்து காணுகின்றபொழுதுதான் பல பேருண்மைகளின் நிதர்சன தரிசனம் கிடைக்கும். கோப்பு தொலைந்தது என்று நாகூசாமல் பொய் கூறியவர்களே. உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சாம்ராஜ்யங்கள் முழமையையும் விற்று அதில் நீங்கள் சுய ஜீவனம் செய்யும்பொழுது, அதற்கான ஆவணங்களை தெலைத்துவிட்டு அப்படி தொலைப்பதுகூட உங்கள் உரிமையாக காட்டுங்கள். கவலையில்லை. அதில் முடக்கப்படுவது வெறும் பொருளியல் தத்துவம்தான். இவைகள் ஊனோடும் உயிரோடும் உறவானவை. நீங்கள் தொலைத்துவிட்டதாக கூறிய அந்த கோப்புகளில் இருந்தது வெறும் காகிதங்கள் இல்லை துடித்துடித்து இறந்த விலைமதிக்க முடியாத அந்த மூன்று உயிர்கள்.

நான் சற்று உணர்ச்சிகளுக்கு ஓய்வு கெடுத்துவிட்டு, தார்மீக நெறிகளுக்கும் தாழிட்டு விடுகிறேன். சம்மந்தப்பட்ட நீங்கள் யாராயினும், உங்களை விரல் நீட்டியே கேட்கிறேன். இப்பொழுதேனும் கூறுங்கள் உங்கள் கூற்று சரியனதுதானா? இப்படிப்பட்ட மனித பரிமாணங்கள் தொடர்புடைய ஒரு வழக்கின் ஆவணம் தொலைந்துவிட்டது என இந்த கணினியின் யுகத்தில் கூறி, நீதிமன்றத்தின் சாடலுக்கு பின் தொலைந்த கோப்புகள் வானிலிருந்து தேவதைகளால் பூமிக்கு கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றபொழுது, குடிமக்களாகிய எங்களைப்பற்றிய உங்கள் கணிப்புதான் என்ன? மன்னர்கள் நீங்கள் “வெள்ளை காக்கை” என கூறுமுன் “மல்லாக்க இரண்டு குப்புற இரண்டு” என நாங்கள் கூறினால் நல்ல குடிபடைகள் ஆவோமா? கூறுங்கள் அய்யா நாங்கள் திருத்திக்கொள்கிறோம் அல்லது திருந்திவிடுகிறோம். “நிர்வாகத்திறன்” இந்த சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமாவது பாவப்பட்ட குடிபடைகள் எங்களுக்கு விளக்குவீர்களா?

இறுதியாக ஒன்றை மட்டும் உங்கள் நிரந்தர நினைவுக்கு விடுகிறேன். நீங்கள் அனுபவிக்கும் எந்த வானளாவிய கோட்டைகளும் கொத்தளங்களும் மக்களுக்காக கட்டப்பட்டவை மட்டுமல்ல, மக்களாளேயே கட்டப்பட்டது. இந்த சாம்ராஜ்யங்கள் சரியும்போது எச்சங்களாக மானுடம் மட்டுமே நிற்கின்றன. மனிதம் மட்டும்தான் நிரந்தரம் என்பதைதான் சரித்திரங்கள் பறைசாற்றி நிற்கின்றன என்பதை இனியேனும் உணரமுற்படுங்கள்.

Monday, February 21, 2005

பயிர் மேயும் வேலிகள் - நீதித்துறையிலுமா?

- மன்னை மாதேவன்

ஓர் வேதனைச் செய்தி. தர்மபுரி முதன்மைச் சார்பு நீதிமன்றத் துணை நீதிபதி, அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன் “மூவர் கூட்டணி” அமைத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்ததால் “பணி இடை நீக்கம்” செய்யப்பட்டுள்ளார். தர்மபுரியில் வாழ்ந்த இவர் தர்மம் புரியாததால், தர்மம் இவருக்கு சிலவற்றைப் புரிய வைத்திருக்கிறது. புரையோடும் ஊழல் வேர்கள் புதிதாய்ப் புக எந்தத் துறைதான் இனி எஞ்சியிருக்கிறது எனும் வேதனை வினா நம் இதயத்தில் “சுனாமி” ஆகிறது. இதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கூற இயலவில்லை. எங்ஙனம் இயலும்? தூய்மையும், நேர்மையும் கோலோச்ச வேண்டிய நீதித்துறையில், “வேலிகள் பயிர் மேயும்” வேதனையின், தொடக்கமா இது? நிச்சயமாக இல்லை. எங்கோ எவரோ எதிலோ தொடங்கிய தொடர்காட்சியில் ஒரு அங்கம்தான் இது. இருட்டில் அரங்கேறும் இதுபோன்ற காட்சிகள் மீது இப்பொழுதுதான் சற்று வெளிச்சக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

தனிமனிதர்களை விமர்சிக்கும் போக்கை நாம் தரம்கெட்டதாகவே கொள்ளலாம், அந்த தனிமனிதர்கள் செயல் சமுதாய சீர்கேடாய்த் தலைதூக்காத வரை. நீதிகாக்க, தமிழன் இதுவரை தந்திருக்கும் விலை எத்தகையது என்பது என் எண்ணத்தில் திரையாடுவதால்தான், இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். “சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு” அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்னும் நெறிமுறை மற்றெந்த துறையினருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நீதித்துறைக்குக் கட்டாயம் பொருந்தியாக வேண்டும்.

இந்திய நாட்டின் அரசியல் சாசனக் கோட்பாட்டின்படி, நீதித்துறை நாட்டைத் தாங்கி நிற்கிற நான்கு தூண்களில் தலையாயது. ஏனைய தூண்களான சட்டமியற்றுத்துறை, நிர்வாகத்துறை, பத்திரிக்கைத்துறை முதலிய துறைகளில் நிலவும் தூய்மை பற்றி நாம் நன்கறிவோம். இந்தத் துறைகளில் அவ்வப்போது ஏற்படும், நாட்டையும் மக்களையும் பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வுகாண நாம் தட்டுகின்ற கதவுகள் நீதித்துறையின் கதவுகள்தான். நாடு சில வேளைகளில் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகளில் சிக்கித் தவிக்கும்போது, சிக்கல் நீங்க நாம் முழுதும் நம்பியிருப்பது நீதித்துறையை மட்டுமே. பணமும், பலமும் படைத்த கழுகுகளின் பிடியிலிருந்து வறியோரையும், எளியோரையும் காக்கும் கடமை இந் நீதித்துறையையே சார்ந்து நிற்கிறது.

இந்நிலையில் நீதித்துறையிலும் புரையோடத் துவங்கும் இத்தகைய புண்களுக்கு, வெறும் புனுகு தடவித் தன்னிறைவு அடையப் போகிறோமா அல்லது இதன் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறியும் வேலையைச் செய்ய முயலப் போகிறோமா? இந்த வினாவிற்கு விரைவாக விடையிறுப்பதற்கு முன்பாக தமிழர்களின் பண்டைய வாழ்வியலோடும், கலை, கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து நின்ற நீதியின்பால் சற்று கண்ணோட்டம் செலுத்துவது, சிதிலமடையத் தொடங்கும் சீர்க்கேட்டின் பரிமாணத்தை நன்குணர வாய்ப்பாகும் என எண்ணுகிறேன்.

தமிழனும் நீதியும்

தனது ஒரே மகன் வீதிவிடங்கன் வீதி உலா சென்றபோது, துள்ளி விளையாடிய பசுங்கன்றொன்றைப் பிழையாக தேர்க்காலிலிட, கன்றிழந்த தாய்ப் பசு, ஆராய்ச்சி மணி கொட்டி முறையிட, தமிழ் மன்னன் மனுநீதி அளித்த மனு நீதியின் விலை? தன் அரசின் ஒரே வாரிசான மகனின் உயிர். வேடன் ஒருவன் வேந்தனிடம் விண்ணப்பித்தான், அந்தப் புறா தன் தொழில்முறை உரிமை என்று. வேந்தனுக்கோ புறாவிற்கு அபயமும், வேடனுக்கு நீதியும் ஒருசேர வழங்கவேண்டிய நிலை. அதற்காக அவன் கொடுத்த விலை? அப்புறாவின் எடைக்கு ஈடான தன் தொடை ஊன். சிபி மன்னனின் இச்செயலைக் கருணையாய் பார்ப்போரும், அறமாய் பார்ப்போரும் உண்டு. அதனையே நீதியாய் பார்த்தலும் நன்று.

கருமான் கூற்றொற்றி, பிழைபடக் கொலையுண்ட கோவலனுக்காக வழக்குரைத்த கண்ணகிக்கு பாண்டியனின் நீதிமன்றில் கிடைத்த பரிசு? பாண்டியனின் உயிரோடு, “ஈருடல் ஓருயிராய்” விளங்கிய அவன் பத்தினியின் உயிரும். நீதியுரை வழங்குகையில் தனது இள அகவை ஓர் தடையாய் இருக்கலாகாதே என்ற ஏக்கத்தில் முதியோனாய் வேடமிட்டு நீதிகாத்த கரிகால் பெருவளத்தான் நீதி- தமிழ் நீதி. இந்த நீதி உரைக்கும் முத்தொள்ளாயிரத்தை முன்னூறு முறை கற்றாலும் கல்லாதார் தமிழுலகில் நில்லாத நாள் எந்நாள்? இவை மட்டுமா தமிழனின் நீதி. அவன் நீதி நீள்கடலில் இவையெல்லாம் ஒருசில நீர்த்துளிகள் மட்டுமே.

உலகில் உள்ள ஏனைய இனங்கள் எவற்றிற்கேனும், தமிழனைப்போல் மறத்திலும் அறம் வளர்த்து நீதி காத்த பெருமை உண்டா என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரிய வினா. தமிழ் மன்னர்களுக்கிடையில், பலகாலும் நீள்பகை நிலவியதுண்டு, எனினும் போர் முன்பாய், பிறநாட்டின் தூதுவனாய் வந்தோனை ஓர் துரும்பும் துன்புறுத்தா நீதி எவன் கற்றுத்தந்த நீதி? போரில் புறமுதுகிட்டோனை தாக்கா தகுநெறி, கைவாள் இழந்தவன் தனக்கு வாள் ஒன்றீந்து பின் அவனோடு பொருதும் மாண்பு. இந்தச் சரித்திரம் வேண்டுமானால் தமிழறியாத் தகைமையற்றோருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நம் சொந்த மண்ணில் வாழும் தமிழருக்கு அதிலும் நீதியின் நெறிநிற்க வேண்டியோருக்கு புரியாமல் போவதில் பெருமை என்ன கொள்ள முடியும்.

புதியதோர் நீதி செய்வோம்!

நீதி தேவதையின் கண்கள் கருந்துணியால் கட்டப்பட்டிருப்பது, அவள் வழக்காடுவோரின் நிலை நோக்காது, யாவர்க்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். இது தாங்கள் அணி அமைத்து, நீதி அழித்து, நிதி குவித்துக்கொள்ளும் வசதிக்காகத்தான் என்று எண்ணுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் சிலகாலம் தப்பிக்கலாம், தர்மத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க இயலாது.

நண்பர் ஒருவருடன் மேற்கூறிய செய்தியை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் கூறினார் இது ஊழலுக்கு மூன்றாம் தலைமுறையென்று. ஊழலுக்கும் தலைமுறையா? விளங்கவில்லையே என்றபோது அவர் விவரித்தார். ஊழல் என்றால் என்னவென்றே அறியாதார் முதலாம் தலைமுறை. வாதி அல்லது பிரதிவாதியிடம் பெறவேண்டியதை பெற்றுக் கொண்டு அப்படி பெறப்பட்டவர்க்கு சார்பாவது இரண்டாம் தலைமுறை. இருவரிடமுமே இயன்றதை கறந்து, இறுதியில் ஓர்புறம் சாய்தல் இது மூன்றாம் தலைமுறை என்றார். உங்கள் கூற்றுப்படியாயின் இது நான்காம் தலைமுறை என்றேன். ஆம் வாதி பிரதிவாதி இருவருடன் நில்லாது தொடர்புடைய அனைவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நீதி பரிபாலனத்தையே ஏதோ நகைச்சுவை நாடகம் போல் கேலிக்குரியதாக்கி அரங்கேற்றும் அவலம் நான்காம் தரமன்றி வேறென்ன? இந்த நான்காம் தலைமுறை பரிணமித்து வருவது ஏதோ ஒரு சில துறைகளில் மட்டுமல்ல. இந்தப் புற்றுநோய் எல்லா துறைகளையும் இலக்காக்கி வரும் இந்தத் தருணத்தில், விழிப்புடன் செயல்படுவது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஆய்வுக்காக எடுத்துக்கொன்டால், இந்தத் தீர்ப்புக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று சட்ட முகம். இதில் சட்ட வாயிலாக வழங்கப்பட்டுள்ள “பணி இடை நீக்கம்” மிகக் குறைவானதாகவே கொள்ளப்படவேண்டும். இன்னும் என்னவெல்லாம் வழங்கி இருக்கலாம் என்பது குறித்து நண்பர் வேடிக்கையாகக் கூறியவை கீழே கெடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட தண்டனை பெற்றவர்கள், “ஊசிமுனை நுழையும் ஒட்டகமாய்” சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து ஒருவேளை தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் தீர்ப்பின் இரண்டாவது முகமான “சமூக தீர்ப்பு” என்ற வலுவான தீர்ப்பின் பிடியிலிருந்து தப்பிக்க எந்தக் கொம்பனாலும் இயலாது. இந்த சமுக தீர்ப்பை வழங்கியது யார்? வேறு யார்? வாழ்வு நெறி வழங்கிய வள்ளுவனன்றி வேறு யார்?

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் - 116

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு - 467


ஊழல் புரிபவர்கள், வள்ளுவனின் நல்வாழ்வு நெறிக்காண இவ்விரு பாடல்களையும் உள்ளம் கொள்ளாது, உதட்டளவில் உச்சரித்ததின் பயன்தான் சமுதாயம் அவர்களுக்கு வழங்கும் இந்தச் சமுதாய தீர்ப்பு.

அந்தக் கால அரசர்கள் வருகைக்குமுன் காவலர்கள் கூறும் கட்டியம்போல், “ஊழல் புரிந்து தண்டனை பெற்றாரே அவரே இவர்” என, ஊழலுக்காக (சட்ட) தண்டனை பெற்றவர்கள் செல்லுமிடமெல்லாம், ஏளனமும், எள்ளிநகையாடலும் புரியும் சமூகத்தின் சுட்டிலிருந்தும், குட்டிலிருந்தும் இவர்களால் எப்படி தப்பிக்க இயலும்? ஊரை அடித்து தம் உலையில் போடுவோரால், ஊர் வாயையெல்லாம் ஒருசேர மூடி உரையிட முடியாதே! இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சமுதாய தண்டனை கால, இட அளவுகளுக்கு அப்பாற்பட்டது. தலைமுறை தண்டனையிது. இது சில வேளைகளில் சற்று கடுமையானதாகவே அமைந்துவிடுவதும் உண்டு. சில புல்லுருவிகள் செய்யும் தவறுக்கு, ஒருபாவமும் அறியாத அவர்தம் மனைவிää மக்கள்ää உற்றார், உறவினர்களும் விலையைக் கொடுக்கும்படி அமைந்துவிடும் பொழுது, இந்தத் தண்டனை சற்று கடுமையாக தெரிந்தாலும், பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றிச் செயல்படும் இத்தகைய ஊழலர்களுக்கு இது மிகக் தேவையான ஒன்றாகத்தான் ஏற்கவேண்டியுள்ளது.

இவர்கள் சமுதாயத்தைக் குறைகூறுவதை விடுத்து, இந்நிலையை வருவித்துகொண்டது எதனால் என தமக்குத்தாமே எண்ணுவார்களானால் ஒருவேளை தெளிவு பிறக்க வாய்ப்புண்டு. மேற்கூறிய தனிச் செய்தி குறித்து நம் வேதனையை இத்துடன் நிறுத்தி, நீதித்துறையில் ஊழலின் பொதுத்தன்மை குறித்து சற்றே சிந்தனை செலுத்துவோம்.

நீதித்துறையில் ஊழலென்பது சில காலங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தலைநகர் டில்லியில் ஓர் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நடத்தியோர் “அனைத்துலக தெள்ளத்தெளிவு- இந்தியா” (Transparency International - India ) என்ற அமைப்பினர். இக்கூட்டத்தின் ஆய்வுத் தலைப்பே “இந்திய நீதி முறைமையில் நிலவும் தாமதமும் முறைகேடுகளும் அதற்கான தீர்வுகளும்”. இக்கூட்டத்தை தலைமை ஏற்றவர் முன்னால் தலைமை நீதிபதியும் அன்னாள் தேசிய மனித உரிமை கழகத்தின் தலைவருமான திரு ஜே.எஸ்.வர்மா அவர்கள், பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள் திரு பி.பி.ஜீவன்ரெட்டி(சட்ட ஆணைக்குழு தலைவர்), திரு சோளி ஜே. சோராப்ஜீ (தலைமைச் சட்ட அதிகாரி) மற்றும் பல மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

இக்கூட்டத்தில் நீதிதுறையில் ஏற்படும் தாமதம் மற்றும் முறைகேடுகளுக்கான காரணங்கள் நன்கு ஆராயப்பட்டு அவைகளை களைவதற்கான பல்வேறு தீர்வுகளும் ஆலோசனைகளாக வழங்கப்பட்டது. முறைகேடுகளின் தோற்றுவாய் என அறியப்பட்டவைகளில் சில முக்கியமானவற்றின் பட்டியலை காண்போம்.

1. அரசியல் மற்றும் அதிகார தலையீடு.

2. நீதித்துறை நேரடியாகவோ மறைபொருளாகவோ மக்களுக்கு விடையளிக்க வேண்டாத நிலை (Non Accountability).

3. “நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரம் வாயிலாக கிடைக்கும் அபரிமித பாதுகாப்பு.

4. நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு.

5. வழக்கறிஞர்களின் ஒழுங்கீனம் மற்றும் ஒத்துழைப்பின்மை.

6. வழக்கு முடிந்தும் தீர்ப்பு நீண்ட நாள் ஒத்திவைப்பு.

7. நீதிபதிகளிடம் சட்ட நுணுக்க வல்லாண்மை குறைவு.

8. புலனாய்வில் காவல்துறை குறைபாடுகள்.

9. மக்களின் பழக்க வழக்கங்கள் அறியாத மாநிலங்களுக்கு நீதிபதிகளின் திடீர் மாற்றல்கள்.

10. நீதிபதிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிலவும் சிக்கல்கள்.

முக்கிய தீர்வு ஆலோசனைகள்:


1. நீதிபதிகளின் தேர்வு முழுமையும் நீதித்துறையாலேயே நிறைவு செய்வது.

2. நீதிபதிகளின் ஊதியமும் பதவி உயர்வையும் அதிகமாக்கி, முறைகேட்டு ஆசையை (Temtation) குறைப்பது. (ஆகா… எத்தனை புத்தர்கள் வேண்டுவதோ…இவர்களின் ஆசைக்கு வேலியிட..)

3. மிகுந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகளின் தேர்வு.

4. வழக்குகளுக்கான கால நிர்ணயம்.

5. நீதிபதிகளுக்கான பணி ஒழுங்குமுறை (Code of Conduct) வடிவமைப்பு.

6. பணி ஓய்வின் பின் எந்த அரசு அலுவலும் ஏற்க தடை. (ஆகா…வசதி வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் உதறிவிட முடியுமா என்ன?...)

இவை அனைத்தும் நீதிபதிகள் அடங்கிய குழுவால் மறுஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பாராளுமன்றம், நீதித்துறை, வழக்கறிஞர் மன்றம் (Bar Council) மற்றும் பொது மக்கள் மன்றம் முதலியவற்றில் அளிக்கப்படும் என அறிவித்தார்கள். அவ்வாறு அளிக்கப்பட்டு, உரியவர்களால் உரிய நடவடிக்கைகள் எவையேனும் உரிய தருணத்தில் எடுக்கப்பட்டிருக்குமானால் மேற்கூறிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை அல்லவா?

ஊழலின் தன்மைகள் பற்றியும், அவற்றால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்தும், மலையளவாய் பேசியும் எழுதியும் வருகிறோம். விளைந்த பயன் கடுகளவேனும் தேறுமா என்பது ஐயமே! எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது “ஓரிரு எண்ணங்கள்” பகுதியில் ஒன்றைக் கூறினார். “பலர் தாங்கள் ‘கையூட்டு கொடுக்காதார் சங்கம்’ தொடங்கி நடத்திக்கொண்டு வருவதாக என்னிடம் வந்து கூறினார்கள். நான் நினைத்துக்கொண்டேன், இதனால் மட்டும் என்ன பெரிய பலன் கிடைத்துவிடபோகிறது மாறாக ‘கையூட்டு பெறாதார் சங்கம்’ தொடங்கப்பட்டால் அல்லவா ஊழல் குறைய வகையேற்படும் என்று”. இக்கூற்று முற்றிலும் உண்மையல்லவா?

எனவே நாட்டின்கண் நாட்டமுடைய அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இந்த ஊழலை களைவதர்க்கான வழிவகைகளில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதொன்றே இச்சிறு கட்டுரையின் நோக்காக விழைகிறேன்.

குறிப்பு:
மேற்கண்ட கட்டுரையின் எல்லை இத்துடன் முடிவுற்றது. ஊழலை ஒழிப்பதற்கான இலவச ஆலோசனையாக எனது நண்பர் கூறிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்படுகிறது. நகையணியில் நாட்டமுடையோர் முன்னேறுக. மேலும் நீங்களும் நீதி அரசர்களாகி விரும்பிய தண்டனை வழங்கி மகிழ்வதிலும் எந்த தடையுமில்லை.

1. தேச விடுதலைக்காகää வ.உ.சி சிறையில் இழுத்த செக்கை இவர்களைக் கொண்டு இழுக்க வைக்கலாம் என்றவர். உடனே எண்ணத்தை மாற்றிக்கொண்டுää அந்தப் புனிதர் கைபட்ட செக்கின் புனிதம் கெட வேண்டாம். அதைவிட கடினமான வேறு செக்கைக் கொடுத்து இழுக்க வைக்கலாம் என்றார்.

2. “நான் கையூட்டு பெற்றதற்காக தண்டிக்க பட்ட ஆசாமி” என்ற பெயர் பலகையைää அவர்களின் மீதமுள்ள பணிக்காலம் முழுமையும், கழுத்தில் தொங்கவிட்டுக;காண்டே பணியாற்ற வேண்டும் என பணிக்கலாம்.

3. ஊழல் புரியும் அதிகாரிகளை அழைத்து வந்து “ரமணா” திரைப்படத்தை நூறுமுறை கட்டாயமாக பார்க்க வைக்கலாம்.

4. “லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” திரைப்படத்தைப்போல்ää ஊழலால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டிற்கு ஊழல் புரிந்தவர் சென்றுää அவர்கள் வீட்டு திண்ணையில் உறங்கிää அவர்களால் வெறுக்கப்படும் வேலையாளாகப் பணியாற்ற தீர்ப்பளிக்கலாம்.

5. அவரவர் செய்த ஊழலை, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, ஏற்ற தண்டனையை ஆலோசனையாக வழுங்குவோருக்குப் பரிசு திட்டம் அறிவிக்கலாம்.

6. இறுதியாக நண்பர், பழைய காலங்களில் “கழுவாய் ஏற்றுவது” என்பார்களே, அப்படி என்றால் என்ன? என்ற வினாவோடு முடித்துக்கொண்டார்.

Saturday, February 19, 2005

வெந்த புண்ணில் வேல் - கோபியார் இலங்கை வருகை !

-மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுசெயலாளர் திரு.கோபி அன்னன் அவர்களின் இலங்கை வருகை, தமிழர்களின் இதயத்தில் வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்கியதாக அமைந்துவிட்டது. துயருற்றவருக்கு அளிக்கின்ற ஆறுதல் வார்த்தைகளில் கூட
“ஓர் கண்ணில் வெண்ணை பிறிதொன்றில் சுண்ணாம்பு” என்னும் ஓரகம் காட்டிவிட முடியும் என்பதை நிருபித்திருக்கிறது. சமீப காலமாக ஐக்கிய நாட்டுச் சபையின் பயன்பாடு மட்டும்தான் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என எண்ணியிருந்தோருக்கு, அதன் பண்பாட்டிலும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறது. மேலும் தமிழர்களின் வாழ்வு நிலைக்கு இலங்கை அரசு தரும் மதிப்பீடுகளை, தாயக தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒருமுறை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

கோபி அன்னன் அவரது வருகை தொடர்புடைய நிலையினை நாம் மூன்று அங்கங்களாக உற்று நோக்கவேண்டும்.

1. ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்.
2. சந்திரிகா அம்மையாரும் அவரது சிங்கள இனவாத அரசும்.
3. தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்.

ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்:

கோபியாருக்கு எந்த இறை அசரீரி வந்து துயருறும் தமிழர்கள் அனைவரும் “தவிர்க்கப்பட வேண்டிய கனிகள்” என்று ஆணையிட்டது? “சாத்தான்கள் ஓதிய வேத”த்திற்கு “அவரும்” செவிசாய்த்து விட்டார் என்பது வெறுக்கத்தக்க, வேதனைத்தரும் செயல். இங்கு “அவரும்” என இச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது பொருளற்றதல்ல. யார் இந்த கோபியார்? அவர் ஒரு தனிமனிதரல்ல-அவர் விரும்பிய வண்ணம் செயல்பட-ஓர் பேரமைப்பின் தலைமையின் குறியீடு. அவ்வமைப்பும் எத்தகையது. நாடு என்ற எல்லைகளை மட்டுமல்ல இன, மொழி மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்த ஒரு பொது அமைப்பு.

ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுமைத் தத்துத்வதை உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் அது தோற்றுவிக்கப்பட்ட காலச் சூழலை எண்ணிப்பார்க்க வேண்டும். இருபெரும் உலகமகா யுத்தங்கள் கற்பித்த பாடத்தின் வெளிப்பாடுதான் ஐக்கிய நாட்டுச் சபை. இன்றளவும் அம்வமைப்பு தன் நோக்காக (அதிகாரபூர்வகமாக) வறையறுத்துள்ளதில் முக்கிய அங்கமாய் விளங்குவது மனிதனின் தன்மானமும், சம உரிமையும், உலக சமாதானமும். அந்த தன்மானமும், சமத்துவமும் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுவதில் ஒட்டுமொத்த தமிழர்களும் மனம் குமுறாமல் வேறு என்ன செய்வது?


கோபியார் தமிழ் மக்களுக்கு என்ன சமாதானம் அளித்திருக்கிறார்? தான் தமிழர் பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் செல்வதையே விரும்பியதாகவும் ஆனால் ஒரு நாட்டின் விருந்தினர் என்ற வகையில் பயணத் திட்டங்கள் அரசே வகுக்க வேண்டியுள்ளதால் அது தன்னால் இயலவில்லை, எனினும் மற்றொருமுறை தமிழர் பகுதிக்கு வருவேன் என்பதும்தான்.

தமிழர் பகுதிக்குச் செல்லாத அவர் செயலை அவர் வார்த்தைகளிலேயே ஆய்வுசெய்தால்…
மனிதாபிமான அடிப்படையில் செல்ல விரும்பினேன் என்கிறார். ஆக செல்லாதது மனிதாபிமானமற்ற செயல்.
சரி..அவர் எதனால் தமிழர் பகுதிக்கு செல்ல விரும்பினார்? அதுதான் முறையானது. எனவேதான் விரும்பினார். அவ்வாறாயின் தான் விரும்பிய, ஒரு முறையான செயலை நிறைவேற்றிக்கொள்ள, நாடுகடந்த அதிகாரம் படைத்த ஓர் அமைப்பின் தலைமைக்கு இயலவில்லை என்றால் என்ன பொருள்?
அந்த அமைப்பில் நிலவும் நடைமுறைச் சட்டதிட்ட சடங்குகளின் அவலம்தான் இதன் பொருள்.

மறுமுறை வருவேன் என்பது இதனிலும் வேதனைக்குரியது. ஒரு தெருவில் உள்ள இரு வீட்டில் துயரச் சம்பவங்கள் நிகழ்வுறுகின்றது. ஒரு இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறிய ஒருவர், ஒன்றுமே கூறாமல் சென்றுவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மற்ற இல்லத்திற்கு பிறிதொருமுறை வருகிறேன் என்பது எவ்வளவு உணர்வற்ற, அருவறுக்கத்தக்கது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வீட்டிற்கு பொருந்துகின்ற இதே நியதி எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

நடந்து முடிந்துவிட்ட ஒரு சாதாரண நிகழ்வுக்கு மிக வருத்தி பொருள் கொண்டு, இத்துனை அளவுக்கு விமர்சிக்க வேண்டுமா? என நம்மில் சிலர் எண்ணக்கூடும். அத்தகையவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் விமர்சிப்பது தனிப்பட்ட கோபி அன்னன் அவர்களை அல்ல. நாம் அவரது தனிமனித சிறப்புகளை அறியாதவர்களுமல்ல. தமிழர் பகுதிக்கு வரவில்லையே என்ற விவாதம், அவர் இலங்கைக்கு வந்து சென்றபின் தோன்றியிருக்குமானால், திரு கோபியாரின் சமாதானம் மிகச் சரியாக பொருந்தும், நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நடந்தது என்ன? அவர் மாமன்றத்தை விட்டு புறப்படும் முன்பாகவே இக்கோரிக்கை வேண்டுகோளாக வைக்கப்பட்டு, ஆய்வில் உள்ளதாகவும், அவர் வருவதற்கு விரும்புவதாகவும் கூறப்பட்ட பின்பாக தமிழர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நடைபெறுகிறது என்றால் என்னவென்றுரைப்பது?

சந்திரிகா அம்மையாரும், அவரது சிங்கள இனவாத அரசும்!

கோபி அன்னன் அவர்களை தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காததன் வாயிலாக, சந்திரிகா அம்மையார் அவரது நரித்தன அரசியலை மட்டுமா உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்?
இன்னும் பல முக்கிய செய்திகளையும் உணர்த்தியுள்ளார்.

உலகமே கண்ணீர் வடித்த சுனாமி துயருக்கு பின்னால் அம்மையார் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. துயர்துடைப்பு பணிகளில், எந்தவித இன வேறுபாடுகளுக்கும் அல்லது திசை வேறுபாடுகளுக்கும் இடமளிக்காது, விடுதலைப் புலிகளோடு அரசு இணைந்து செயல்படும் என்றும், விடுதலைப் புலிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது. விடுதலைப் புலிகளும் அரசு ஒத்துழைக்குமானால் இணைந்து செயல்பட இணக்கம் காட்டினர். இன்றளவும் அவ்வாறே செயல்பட்டும் வருகின்றனர். அம்மையார் ஏதோ புலிகளின் மீது பாசம்கொண்டு, நேசம்கொண்டு அல்லது தமிழ் மக்களின் மீதும் அவர்கள் படும் துயர்மீதும் கரிசனத்துடன் இந்த வேண்டுகோளை விட்டுவிடவில்லை. பிறகு என்ன காரணம்?.

விடுதலைப் புலிகள் அமைப்பானது, துயர் நிகழ்வுற்ற அடுத்த நொடிமுதல், உலகே வியக்கும்படி தங்கள் மீட்பு பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது. இவர்களது பணிகளின் துரிதத்தையும், நுட்பத்தையும் வெகுவாக பாராட்டி “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிக்கையின் செய்தியாளர் திரு. ஆர்தர் மாக்ஸ் அவர்கள் ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதுமளவுக்கு விடுதலைப் புலிகளின் செயல்பாடு அமைந்துவிட்ட பிறகு, அம்மையாரின் அரசுக்கு அவர்களின் உதவியின்றி வேறு வழியில்லை என்ற கையறு நிலையில்தான் வேண்டுகோள் விடப்பட்டதேயன்றி பிறிதொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளோடு புனரமைப்பு பணிகளில் இணைந்து செயல்படும் எனும் அறிக்கை ஓர்புறம், தமிழர்களை தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்குவது மறுபுறம் என நரித்தனத்தின் மொத்த வெளிப்பாட்டையும், நாகரீகமற்ற அரசியல் அழுக்குகளையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சாதாரண அனுதாப செய்தியைகூட (இதுபோன்ற கொடிய நிகழ்வுகளின் தாக்கத்திலும்) சிங்களர்களையும், தமிழர்களையும் சமமாக பாவித்து பகிர்ந்தளிக்க இயலாத இந்த சிங்கள அரசுதான், நாளை ஒருவேளை சமாதான நிலை ஏற்பட்டு, இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அரசு அமைந்தால் வடக்கையும், தெற்கையும் இரு கண்களாக பாவித்து நாட்டின் வளத்தையும் நலத்தையும் பகிர்ந்தளிக்கப் போகிறார்கள். என்னே இவர்தம் இழிநிலை?

அம்மையாரின் இவ்விருமுக வேடம், புலிகளை பொருத்தமட்டில் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதைக் காட்டிலும், ஒருவகையில் அவர்களுக்கு உதவவே செய்திருக்கிறது. அவர்களின் ஒழுங்குமிக்க உள் கட்டமைப்பிலும், நிர்வாக திறனிலும், உலக நாடுகள் புதிய பார்வையை செலுத்த தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடுதான் சுனாமி துயர்துடைப்பு பணிகளில் உதவிகள் புரியும் பல நாடுகளும், அம்மையார் அரசிற்கு பல அழுத்தத்தை கொடுக்க முனைந்திருப்பது.

தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்!

இலங்கை மண்ணிலும் உலக அரங்கிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் ஒட்டுமொத்த தமிழினமும் மிக ஊன்றி கருத்தில் கொண்டு செயல்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
அம்மையார் அரசு மட்டுமல்ல, இனி வரும் எந்த இலங்கை அரசும், தமிழர்களை முழுமையாக புறம்தள்ளிவிட முடியாது. இதுகாறும் இலங்கை மண்ணில் இன்னலுற்று வரும் தமிழர்தம் வாழ்வு மீண்டும் தன் பழம் பெருமையோடு புகழ்மிகு வாழ்வாய் மலரும் காலம் கனிந்துவரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்கள் ஒன்றை மிக ஊன்றி சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

அன்றும், இன்றும் தமிழனிடம் எவையில்லை? ஒன்றே ஒன்றைத்தவிர? அன்பä அறம், மறம், பணிவு, துணிவு என அனைத்துமுண்டு. ஆனால் எல்லாக் காலங்களிலும் தமிழனின் ஒற்றுமை மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்து வருகிறது. அனைத்தும் இருந்தும் தமிழர்களாகிய நாம் “நெல்லிக்காயென” சிதறுன்டு அல்லலுறக் காரணத்தை ஈராயிரமாண்டுக்கு முன்பாகவே, “பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” என நம் பொய்யா மொழியார் புகன்றார். எனவே இனியேனும் அனைத்து வகை உட்பகைகளையும் ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழர்தம் நல்வாழ்வு உயர விழைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

திருவாளர் சோ அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் !

- மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

திரு சோ அவர்களே!
தாங்கள் தமிழக மக்களுக்கு முதலில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானீர்கள். அன்றைய நாட்களில் உங்கள் நடிப்பு வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நல்ல நகைச்சுவை நல்கியது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. உங்கள் அந்த திறமைக்கு பெரிதும் உதவியது உங்களது அசாதரணமான கண்கள் என்றால் அது மிகையாகாது. அதன்பின் நாடகத்துறையில் நுழைந்தீர்கள். உங்கள் நாடகங்கள், வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே என வரையறுத்து ஒதுக்கிவிட இயலாதவாறு தீவிர அரசியல் விமர்சன “புரட்சி நாடகங்கள்” என்னும் நலைக்கு உயர்ந்து, அத்துறையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அத்தகைய தாங்கள் நடிப்புத்துறையிலேயே நிலைகொண்டிருந்தால் இன்று அத்துறையில் இமாலய சாதனை படைத்திருப்பீர்கள் என்பதும் ஓரளவு அனுமானிக்க கூடியதே.

கலைத்துறை செய்த பாவமோ அல்லது தமிழக மக்களாகிய நாங்கள் செய்த பாவமோ தாங்கள் பத்திரிக்கை துறையில் கால் பதிக்க முடிவெடுத்து திடிரென நுழைந்தே நுழைந்து விட்டீர்கள். அதிலும் எப்படி நுழைந்தீர்கள்? புத்திரிக்கை தொடங்குவதற்கான ஆசையை அல்லது தேவையை வெளிப்படுத்தி இத்துறையில் எவ்வாறு வளரப்போகிறோமோ எனும் ஒரு மெல்லிய அச்ச உணர்வோடு பத்திரிக்கையை வாங்குவதற்கான பணிவான வேண்டுதல்கலோடு இப்படி ஏனைய சாதராணமானவர்கள் வழிமுறைகளில் தாங்கள் நுழையவில்லை. அனுமன் மலையை ஒரு கரத்தில் அனாயாசமாக சுமந்துகொண்டு பெருங்கடலை துட்சமாக தாண்டும் காட்சிபோல் மிகப் பெரிய உருவகத்தை உருவாக்கிக்கொண்டே தடாலடியாக நுழைந்தீர்கள். தங்கள் பத்திரிக்கை, அதுவரை தமிழக மக்களுக்கு அவ்வளவாக பரிச்சயப்படாத “புலனாய்வு இதழியல்” என்ற வகையிலும் இன்னும் ஓர் படி மேலே சென்றும், அதுவரை பல்லாண்டுகள் உழைத்து பத்திரிக்கை “ஜாம்பவான்கள்” என்று இடம் பிடித்திருந்தவர்கள் மத்தியில் உங்களை அமரவைத்ததோடு, அவர்களில் சிலரை அதிரவும் வைத்தது.

அன்று அனைத்து தமிழகத்தின் பத்திரிக்கையாளர்களும் தாங்கள் எந்த தளத்திலிருந்து அல்லது எதன் சார்பாக தங்கள் எழுத்துக்களை தருகிறோம் என நேரடியாகவோ அல்லது சற்று இலைமறை காயாகவோ தெளிவுபடுத்தியே தங்கள் பத்திரிக்கை பணியினை செய்தார்கள். ஆனால் தாங்களோ, ஏனைய பத்திரிக்கையாளர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டுள்ளதாகவும், தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உள்ளதாகவும், தாங்கள் எந்த சார்புநிலைக்கும் உட்படாததால், எவரையும் எதையும் துணிந்து விமர்சிக்கும் நோக்கும், போக்கும் உள்ளவராகவும் விளம்பரப்படுத்திக் கொண்டீர்கள். ஆரம்பநாட்களில் இந்த உங்கள் விளம்பரத்திற்கு சற்று வலுவும், பொருளும் இருக்கத்தான் செய்தது. எனவே நடுவு நிலைச் செய்திகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பலரும் உங்களை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தினர். உங்கள் எண்ணத் தராசு வள்ளுவன் கூறியபடி “சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல்” அமைந்து அதன் வாயிலாக நீதிதேவதை தமிழகத்தின் தெருக்களில் தாண்டவமாடுவாள் என எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

உங்கள் திறமையால் - (நன்றாக நினைவில் கொள்ளவும் நேர்மையால் அல்ல திறமையால்) – அவர்கள் எதிர்பார்ப்புகளை லாவகமாக கையாண்டு உங்கள் பத்திரிக்கை விற்பனையை கணிசமாக்கிக் கொண்டீர்கள். இந்திய அரசியல் சாசனம் எழுத்து சுதந்திரத்தை எல்லோர்க்கும் அடிப்படை உரிமையாக மிக தெளிவாக வழங்கி மகிழ்கிறது. அதன்பின்னும் உங்களைப் போன்றோர் ஏன் வீண் முகமூடி அணிந்து “உள்ளொன்று வைத்து புறம் ஒன்று” எழுத வேண்டும் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.

பாரதி போன்ற உயர்ந்தவர்களால் போற்றப்பட்ட பல சமுதாய பார்வைகளிலாகட்டும் (உம். “பெண்ணியம்”) அல்லது சமகால அரசியல் விமர்சனங்களிலாகட்டும் உங்கள் எழுத்துக்களில் மிளிர்வது உங்கள் விவாதத்திறமையும் அறிவு மேதமையுமே தவிர உண்மையான நேர்மை கிஞ்சித்துமில்லை. மற்ற சார்புநிலை எழுத்தர்கள் இத் திருப்பணியை செய்தால், அது அவர்களுக்கு உரிய கைக்கட்டு அல்லது இக்கட்டு என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் தாங்கள் மிகப் பெரிய நடுநிலையாளர் என்றும் பத்திரிக்கா தர்மத்தை காப்பாற்றவே அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும் ஒரு மாயை தோற்றுவிக்கபடுவதால்தான் உங்களை இந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டியதாகிறது.

இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கரமட விவகாரத்தை எடுத்துக்கொண்டாலே தங்கள் எழுதுகோலின் நடுவுநிலை எத்துனை கேலிக்கூத்து என்பது புலனாகும். நான் மடத்தின் உள் விவகாரங்களில் செல்ல விரும்பவில்லை. எவையெவை உண்மையென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால், இந்து மதத்தினுடைய ஏகபோக தத்துவ, ஆன்மீக மற்றும் அதிகார மையமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய மடம், இன்று இந்து மதத்தினுடைய ஆரம்ப அடிப்படை ஒழுக்க நெறியிலேயே ஓரளவுக்காவது பிறண்டுதான் செயல்பட்டிருக்க வேண்டும் என்று, விருப்பு வெறுப்பற்ற சாதரண மக்கள் எறத்தாழ முடிவுக்கே வந்துவிடும் அளவுக்கு மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்திருக்கிறதே! இது என்ன ஒரே ஒரு இரவிலா நடந்துவிட்டது?

இத்தகைய ஒரு மிகப்பெரிய ஸ்தாபனத்தினுடைய செயல்பாடுகளில் சிறு சறுக்கல் தெடங்கிய உடனேயே, அதனுடன் சற்றேனும் நெருக்கமுள்ள தங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடைய தார்மீக கடமை என்ன? இதுவரை இதுபற்றி எழுத உங்கள் எழுதகோல் தவறியதின் காரணம் என்ன? எனது கவனத்திற்கு வரவில்லை என கூற முற்படுவீர்களானால் - (தாங்கள் சார்ந்துள்ள அதே பத்திரிக்கைத் துறை சார்ந்த திருமதி அனுராதாரமணன் இம்மடத்தின்மீது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் குற்றம் சுமத்தியிருப்பதாக கூறுவதையும் கருத்தில்கொள்ளவேண்டும்) – தாங்கள் பத்திரிக்கை நடத்துவதற்கான அடிப்படை தகுதியையே இழந்தவராவீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துள்ள பலர் நிச்சயமாக இந்த கூற்றை ஏற்கவும் மாட்டார்கள். எனவே எஞ்சியிறுப்பது “தெரிந்தும் எழுதவில்லை” அல்லது “எழுத விரும்பவில்லை” என்பதுதான். அவ்வாறானால் அதற்குரிய காரணத்தை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களை சார்ந்ததாகிறது.

வேறு எந்த அமைப்பிலும் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட வாய்ப்பிருந்தாலோ தங்கள் எழுதுகோல் எந்த அளவுக்கு, அந்த அமைப்பின் மீது கேலிச் சித்திரமாக, கட்டுரையாக குறைந்தபட்சம் ஒரு கேள்வி-பதிலாக பாய்ந்திருக்கும் என்பதை உணர்ந்தவர்கள், உங்கள் இந்த நீண்ட கால இருட்டடிப்பில் உள்ள உங்கள் சார்புநிலையை எண்ணி வேதனைப்படாமல் அல்லது விமர்சிக்காமல் இருக்கவேண்டும் என தாங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். எனவே தங்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.

தாங்கள் உடனடியாக நீங்கள் விரும்புகின்ற அடிப்படை தளத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் சார்பாகத்தான் எழுதப்போவதாக அறிவித்துவிடுங்கள். அரசியல் கட்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் அவ்வளவேன்? இன அமைப்புகளுக்காககூட பத்திரிக்கைகள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு மட்டும் அந்த உரிமையை யாரும் மறுத்துவிட போவதில்லை. அவ்வாறின்றி இன்னும் உங்களை நடுநிலையாளராகவே காட்டிக்கொள்ள விரும்புவீர்களானால், சற்று வாதத்திறமையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆத்மார்த்தமாக உங்களை நீங்களே ஒரு “சுய சத்தியப்பரிசோதனைக்கு” உட்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சுய ஆய்வு ஒருவேளை இனியேனும் உண்மையான நடுநிலையாளராக செயல்பட துணைபுரியலாம். மேலும் “பலர் என்னை என் எழுத்துக்காக மட்டும் விமர்சிக்காமல் இன அடிப்படையிலேயே விமர்சிக்கிறார்கள்” என்ற தங்களின் மனக்குறை நீங்கவும் இச்சுய ஆய்வு பயன்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


Thursday, February 17, 2005

மானுடம் போற்றுவோம் !

- மன்னை மாதேவன்
இயற்கை நம் இதயத்தை எரியீட்டி கொண்டு தாக்கிவிட்டது. இதுநாள்வரை நம் எல்லோராலும் அன்புடன் “அம்மா” என்று அழைக்கப்பட்ட அலைகடல், நம்மீது நெறுப்பாற்றை வீசி விட்டது. நம் வாழ்நாளில் பாரத
பூமியிலும், இலங்கையிலும், அருகாமை நாடுகளிலும் இதுவரை கண்டிராத கோரத் தாண்டவத்தை நடத்திவிட்டு இப்பொழுது சற்று அமைதியும் அடைந்துவிட்டது. தம் வாழ்க்கையில் சேகரித்த அனைத்து செல்வங்களையும், நொடிப்பொழுதில் இழந்து கதறியதை காட்டிலும், தம் குலக்கொழுந்துகளை தம் கண்முன்பாகவே காலனுக்கு வாரிக் கொடுத்துவிட்டு துடித்தத் துடிப்பின் காட்சிகள், எவ்வளவுதான் முயன்றாலும் மறக்க இயலாமல் தவிக்கிறோம். நம் கண்கள் இனி இப்படி ஒரு காட்சியை காணாமல் அமைய இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழிகள் என்ன உள்ளது என மனம் குமைந்துகொண்டிருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, உலக உருண்டையின் பல மூலைகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுவருவது, இத்தனை சோகத்திலும் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் இயன்ற வகையில் உதவ முனைப்புடன் செயல்படுவதும் புண்பட்ட நம் இதயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் புனித பணிகளாக தெரிகிறது. இத்துயர் நிகழ்வு தொடர்பாக பல ஊடகங்கள் வாயிலாக நாம் பெற்ற செய்திகளின் சாரத்தை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இலண்டன் மாநகரில் ஒரு தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியை காட்டினார்கள். அங்கு கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், வீதிகளில் தம் கரங்களில் உண்டியல் ஏந்தி பலரிடமும் துணிவுடன், எந்த தயக்கமும் காட்டாமல் உதவி கோருவதும், அவர்களும் எந்தவித அலட்சியமும் காட்டாமல், மிகவும் கனிவுடன் பணமிடுவதும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாய் இருந்தது. இவற்றுக்கு மேலாக, பகல் முழுதும் அலைந்து திரிந்து திரட்டிய ஆடைகளை ஒழுங்குபடுத்தி, அவைகளை ஊர்திகளில் ஏற்றிச் செல்ல ஏதுவாக, இரவுமுழுதும் கண்துஞ்சாது, அட்டை பெட்டிகளில் இடுவது, காண மிகவும் நெகிழ்சியாக இருந்தது. இவர்களை, இச் செயலில் சரியாக ஈடுபடுத்திய அந்த நிறுவனத்திற்கு நம் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்தே ஆக வேண்டும். செய்ய வேண்டிய உதவியை, சரியான நேரத்தில், சரியாக செய்தார்கள் என்பதற்காக மட்டுமல்ல, இதில் நாம் கவனத்தில் கௌள வேண்டியது, கல்வி பயிலும் போதே அந்த சிறார்களின் இதயத்தில் இந்த ஈரக்கசிவை உருவாக்கி, துயருறும் பிறர்க்கு உதவும் மாண்பை வளர்த்தார்கள் என்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகையில் சமுதாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதையும் எண்ணி பாராட்ட கடமைப்பட்டவர்களாவோம்.

வெக்டோன் தெலைக்காட்சி…அதில் ஒரு காட்சி. அந்த காட்சி வந்துசெல்வது அரை நொடிக்கும் குறைவான கால அளவினதே, ஆனால் அக்காட்சி உலகுக்கு பறைசாற்றும் செய்தியின் சாரம், ஆகா! எத்துனை துயர்வரினும், இடர்வரினும், இன்னும் மானுடம் மட்டும் முழுமையாக செத்தொழிந்துவிடவில்லை என்பதுதான். அக் காட்சியை, எவரேனும் ஓர் ஓவியர் கண்டிருப்பாரானால், அவரது தூரிகை இந்நேரம் “மோனலிசாவிற்கு” இணையான மற்றுமொரு ஓவியத்தை படைத்திருக்கும். அப்படி என்னதான் அந்த காட்சி? இலங்கைக்கே உரித்தான இயற்கை சூழ்ந்த ஓரிடம். அருகில் உள்ளது ஒரு சிற்றாறு. அந்த ஆற்றிலிருந்து தண்ணீர் மனித உயிர்களை விழுங்க அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. எல்லோரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதி வேகத்துடன் சிதறி ஓடுகிறார்கள். அந்த அலைகளில் இருந்து ஒரு சிறிய மீன் கரையில் தூக்கி எறியப்படுகிறது. அம் மீனுக்கும் ஏற்படபோகும் அவலங்கள் தெரியுமோ என்னவோ..அதுவும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறது. இக்காட்சி உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருக்கிற அந்த மனிதரின்..அல்ல அல்ல மாமனிதரின் கண்களில் படுகிறது. ஓடிக்கொண்டிருந்தவர், திரும்பிவந்து குனிந்து, அந்த மீனை கரங்களால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டு பின் முன்னிலும் வேகமாக ஓடுகிறார். இதிலென்ன அப்படி பெரிய சிறப்பு இருக்கிறது என எண்ண விழைபவர்கள், தயவுசெய்து உங்கள் இதயத்தை கழட்டி உடனடியாக சலவைக்கு அனுப்பிவிடுவது நல்லது. காரணம்.. தனது உயிருக்கே போராடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திலும், ஒரு சிறிய மீனின் உயிர் துடிப்பை ஒருவரால் உணர முடிகிறதென்றால், அவர் சாதரண மனிதராக இருக்க இயலாது. “வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடினேன்” என்ற வள்ளல் பெருமான்தான் அவர் வடிவம் கொண்டார் என நான் உளமாற நம்புகிறேன். இதில் இதயத்தை இன்னும் நெருடிக் கொண்டிருக்கின்ற மன உலச்சல், அந்த மாமனிதரின் உயிரை சுமக்கின்ற பேற்றை, இன்னும் இந்த உலகு பெற்றிருக்கிறதா என்பதுதான். அவர் இன்னும் கோடி காலம் வாழ வேண்டும் என அவர் திசை நோக்கி தொழுகிறேன்.

இவையெல்லாம் இந்த மண்ணில் மனித நேயம் புல்லாய், பூண்டாய் மறையாமல் இன்னும் நின்று நிலவுவதில் உள்ள பொருளை உணர்த்தி நின்றாலும் காட்சிகளும் செய்திகளும் இத்துடன் நின்றுவிட வில்லை. நாணயத்தின் மறுபக்கத்தைப்போல், நாம் அனைவருமே நாணமுறச் செய்யும் பிற செய்திகளும் இருக்கத்தானே செய்கிறது.

சற்று நாட்களுக்;கு முன்பாக ஒரு செய்தியை படித்தேன். இலங்கையில் இருந்து அனைத்தையும் இழந்து, தமிழக மக்களாகிய நாம் ஒன்றும் அன்னியர் அல்லவே, ஏதோ ஒரு வகையில் உறவுகள்தானே என்ற அதிதமான நம்பிக்கையோடு, நிர்கதியாய் இங்கு வந்தவர்கள், இன்று அவர்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றத்தைக் கண்டு, இனியேனும் நம் மண்ணில் சென்று அமைதியாக வாழ வழி ஏற்படாதா என்ற ஏக்கத்தோடும், ஆவலோடும் மீண்டும் இலங்கை செல்ல முயல்கிறார்கள். அவர்கள் அப்படிச் செல்வதானால், அரசாங்கத்திற்கு மனு செய்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதிபெற்று பின் முறையாக செல்ல வேண்டும். “அரசாங்கமும் மனுவும்” – நாம் அறியாததல்ல. “உங்கள் மனு பரிசீலனையில் உள்ளது” என்னும் அரசாங்க தாக்கீது சிலவேளைகளில் நம் தலைமுறைக்குள் வந்துவிடலாம். இந்த கால தாமத அச்சத்தாலோ அல்லது அறியாமையாலோää விரைவாக சென்றுவிடலாம் என குறுக்கு வழிகளை தேடுகிறார்கள். இது ஒன்று போதாதா சில புண்ணியவான்கள் இடைத்தரகர்களாக, ஏஜண்டுகள் என்ற பெயரில் முளைப்பதற்கு. இந்த ஏஜண்டுகள் அவர்களிடம் உள்ள கைப்பொருளையெல்லாம் கறந்தபின்னும், குறைந்தபட்சம் அவர்களை அவர்கள் நாட்டுக்காவது அனுப்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அவர்களிடையே உள்ள தெழில் போட்டியில், காவல்துறையிடம் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்து விடுவதும் அல்லது முழமையாக ஏமாற்றிவிடுவதும், மீண்டும் அவர்கள் கூண்டில் அடைப்பட்ட கிளிகளாக அகதிகள் முகாமில் முடங்கிவிடுவதும், என்ன கொடுமையிது?. துயரக் கடலிலேயே வாழும் இந்த மக்களிடமும் எத்தி பிழைக்கும் அந்த புல்லுருவிகள் உண்மையில் மனிதர்களா? இதயமென்றால் என்னவென்றே தெரியாத விலங்கினங்களா என எண்ணத்தோன்றுகிறது அல்லவா? அவசரப்பட்டு விடாதீர்கள்..இவர்களையும் விஞ்சுகிறது அடுத்த செய்தி.

வேளாங்கண்ணி… காவல்துறை என்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்கிறது. இவர்கள் செய்த காரியமென்ன? மனித இனமே வெட்க்கித் தலைகுனிய வேண்டிய செயல். தன்னை நாடி வந்தோர் குறைகளை எல்லாம் போக்கி அருள்பாலித்து வரும் அந்த “அன்னைக்கு” முன்பாகவே ஆயிரமாயிர உயிர்களை தன் கொடிய வாயில் போட்டுக்கொண்ட அந்த கடல் அரக்கியை காட்டிலும், இவர்கள் செயல் கொடிது, கொடிது கொடிதினும் கொடிது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தோரும், உயிர் நீத்தோரும் அணிந்திருந்த “அந்த சில தங்க நகைகளுக்காக” அவர்கள் அங்கங்களை அறுத்தார்களாம் இப்பாவிகள். அய்யகோ! இவர்களெல்லாம் ஒரு அன்னையின் வயிற்றினின்று உதித்தவர்கள்தானாää மனித இனத்திலாவது சேர்ந்தவர்களா அல்லது சாக்கடைப் புழுக்களா?

இராமகிருஷ்ண பரமஹம்சருடைய கதைகளில் ஒன்று. ஒரு இல்லத்திற்குள் திருடுவதற்கு இரவில் வந்த திருடன், பொழுது புலர்ந்தும் எந்த பொருளையும் எடுத்து செல்லாது, அந்த வீட்டிலேயே எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். எல்லோரும் அவனைப் பிடித்து, அப்படி என்னதான் தேடுகிறாய் என வினவுகிறார்கள். அதற்கு அவன் கூறிய மறுமொழி, நான் இந்த வீட்டினுள் நுழைந்த போது கால் இடறி என் பெருவிரல் நகம் பெயர்ந்து எங்கோ விழுந்து விட்டது. இரவில் நகத்தை வீட்டினுள் போட்டால் அந்த வீட்டின் செல்வங்கள் எல்லாம் அழிந்து வறுமை வந்து விடுமென என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இந்த வீடு செல்வ செழிப்பால் இருந்ததால்தான் எனக்கு இங்கு திருட வேண்டுமென எண்ணமே வந்தது. எனவே இந்த வீட்டிற்கு வறுமை வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் நகத்தைத் தேடிக்கொண்டிருந்து விட்டேன் என்றானாம். திருடன் என்றாலும் அவன் நல்ல எண்ணத்தை மெச்சி அவனை எவரும் துன்புறுத்தாது அனுப்பியதாக கதை. இக்கதையிலிருந்து அன்றைய வாழ்வுமுறையில், குறைந்தபட்சமாகவேனும் சில நியதிகள் நின்று, சமுதாயத்தை காப்பாற்றின என்பதை நாம் காண முடியும். ஆனால் இன்று என்ன நிலை?

சமுதாயம் சில பல நேரங்களில், பெருளாதாரக் குற்றங்கள் புரிபவர்களுக்காக, பரிந்து பேசுவதுண்டு. வறுமை, வளர்ப்புமுறையில் உள்ள குறைபாடு இப்படி பலப்பல கூறுவதுண்டு. ஆனால் உயிருக்கு பேராடுவர்களை பெருட்படுத்தாது வெறும் பெருளுக்காக உறுப்பை அறுக்கும் இவர்களின் கீழ்தர செயலுக்கு சமாதானம் எதுவும் கூற முற்படுவதற்கு பதிலாக இப்படி சமுதாயம் சிதிலமடைவதற்கான காரணங்களை ஆராய முற்படுவது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இவர்களைப் போன்றோர்களின் மனம் கல்லாய், இரும்பாய் மாறிவிட்டதன் காரணம் என்ன? முன்பெல்லாம் மிகக் கொடியவர்களின் காதுகளில் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நீதிநெறிக் கருத்துக்கள் புகுந்து உரியத் தருணத்தில் பயன்பட்டன. ஆனால் இன்று இத்தகைய குற்றவாளிகளின் காதுகளில் நன்னெறிச் செய்திகள் புகுவதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இருக்கிறதா? இப்பணியைச் செய்து கொண்டிருந்த மத ஸ்தாபனங்களெல்லாம் அறக்கட்டளை அமைத்து அரசாட்சி புரிவதிலேயே தங்கள் கவனத்தைத் திருப்பி விட்டன. நீதிநெறிக் கூட்டங்கள் புராண, இதிகாச கதா காலட்சேபங்கள், தமிழ் சொற்பொழிவுகள் இவையெல்லாம் மிகவும் அருகிவிட்டதோடு, நடைபெறும் விவாத மேடைகள், பட்டிமன்றங்கள் போன்றவைகளில் இச்செய்திகள் இடம்பெறுகின்றனவா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அல்லது தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்ற மக்களை எளிதாகச் சென்றடைகின்ற ஊடகங்களிலாவது இத்தகைய மனித மேம்பாட்டுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறதாவென்றால், இல்லையென்றே கூறி விடலாம். இவற்றினுடைய வெளிப்பாடுதான் நாம் சந்திக்கின்ற இந்த அவலங்கள்.

இத்தகைய பொருளாதாரக் குற்றவாளிகள், அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சிறைக் கூடத்தைச் சென்று மீழ்கிறார்கள். எனவே குறைந்தபட்சமாக, அங்காவது நன்னெறியாளர்களைக் கொண்டு சிலபல நற்செய்திளைப் அவர்களுக்கு புகட்டுவதின் வாயிலாக இதுபோன்ற மிகத் துயர நேரங்களிலாவது அவர்கள் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என முயற்சிக்கலாமோ என எண்ணுகிறேன்.
எனவே, இவை குறித்து நாம் ஒவ்வொறுவரும் இதய சுத்தியுடன் சிந்திக்க வேண்டுவதோடு, அச்சிந்தனை
நம் “மனிதநேயம்” மேன்மையுற துணைபுரிய வேண்டும் என்பதே என் அவாவாகும்.


**********************

Friday, February 11, 2005

எழுதுகோல்!

- மன்னை மாதேவன்

அமுதம் சொரியும் எழுதுகோல்.
அழுக்கை நிறைக்கும் எழுதுகோல்.
அள்ளிக் கொடுக்கும் எழுதுகோல்.
அனைத்தும் பறிக்கும் எழுதுகோல்.

இன்பம் பயக்கும் எழுதுகோல்.
இதயம் கிழிக்கும் எழுதுகோல்.
உணர்வை உமிழும் எழுதுகோல்.
உண்மை மறைக்கும் எழுதுகோல்.

உதிரம் வடிக்கும் எழுதுகோல்.
உயிரைக் குடிக்கும் எழுதுகோல்.
உழைப்பை உயர்த்தும் எழுதுகோல்.
உழையா நெறிக்கும் எழுதுகோல்.

எண்ணம் தூண்டும் எழுதுகோல்.
எழுத்தை சிதைக்கும் எழுதுகோல்.
ஏழ்மை அகற்றும் எழுதுகோல்.
எதற்கும் உதவா எழுதுகோல்.

கல்லில் வடிக்கும் எழுதுகோல்.
கனவாய் மறையும் எழுதுகோல்.
காவியம் படைக்கும் எழுதுகோல்.
காகிதம் நிறைக்கும் எழுதுகோல்.

துள்ளி குதிக்கும் எழுதுகோல்.
துவண்டு மருளும் எழுதுகோல்.
நாவாய் சுழலும் எழுதுகோல்.
நாயாய் குரைக்கும் எழுதுகோல்.

எழுதும் மக்காள்! வாருங்கள்
எதுதான் வேண்டும் கூறுங்கள்!

உம்மிட மிருப்பது இதிலெதுவோ?
உணர்வாய் ஆய்ந்து தெளியுங்கள்.
பயனாய் எழுதா எழுதுகோலை
பைய தூர கடத்துங்கள்.

உலக உருண்டை பொதுமைக்கும்;
உயர்வை அளிக்கும் கோலெதுவோ!
உவப்பாய் அதனைக் கைகொண்டு,

புதிய எண்ணம், எழுச்சியுடன்
புனித பயணம் தொடருங்கள்.