Friday, April 01, 2005

பெண்மை – மென்மை = பெண்ணியமா?

ஆதாம்-ஏவாள் தொடங்கி அன்னை பாத்திமா ஊடாக ஆதிபராசக்தி ஈறாய் அனைத்து மதங்களும் பெண்மையை போற்றித்தான் நிற்கின்றன. பெண்மையை போற்றாத உலக இலக்கியங்களை காண்பதே அரிதுதான். பெண்மையின் உயர் நிலையாம் தாய்மையிற் சிறந்ததோர் தகையன பிறிதொன்றுமிலை என அவைகள் அறுதியிட்டே உறுதியுடன் உரைக்கின்றன. நாட்டை “தாய்நாடு” என அழைத்து பெண்மையை போற்றுகின்றன. எளிமை, தூய்மை, மென்மை, மேன்மை, என இவற்றைத் தாங்கி நிற்கும் அஃறிணை பொருட்களை சுட்டும் பொழுது, பெண்பால் போல் உயர்திணையாய் ஏற்றி உரைப்பதுகூட பெண்மையை போற்றும் உயரிய நெறிதான். ஆனால் எதார்த்த வாழ்வில் பெண்மை எவ்வாறு உள்ளது? எவ்வாறு போற்றப் படுகிறது?

மக்கள் வாழ்வில் அறிவியலும், நாகரீக இயலும் விண்முட்ட வளர்ந்து நிற்பதாக மார்தட்டிக் கொள்ளும் இந் நாட்களிலும், மகளிர் படும் கொடுமைகளை எழுதப்புகின், அதன் அளவீட்டில் போட்டியிட இயலாமல் இமயம் கூட சற்று தாழ்ந்து விடலாம். மத, இன, மொழி வேறுபாட்டைக் கடந்து உலகம் முழுமைக்கும் பொது உரு பெற்றிருப்பவை பலவற்றிலும் இந்த “பெண்ணடிமை” அதித பங்கைப் பெற்றிருக்கிறது. எனினும், யுக யுகமாய் கேட்பாரற்று உழன்ற இப் பெண்ணடிமை, இன்று, வீழ்ச்சியுறும் கால ஒளி தோன்றத் தொடங்கிவிட்டது. “பெண்விடுதலை” மிகச் சமீப காலமாக புரட்சியும், எழுச்சியும் பெற்று வெற்றி நடைப் பயிலுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நாம் இற்றை நாட்களில் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாட தலைப்பட்டிருப்பது.

அண்மை சர்வதேச மகளிர் தினத்தன்று எழுதப்பட்ட , அன்புச் சோதரியர் அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் “பெண்கள் தின வாழ்த்துக்கள்” எனும் வலைப்பூக் கட்டுரை நன்றாக மணம் பரப்புகிறது. “ஓர்ச்சார்பு நிலை" நின்று, ஒட்டுமொத்த ஆணிணமே பெண்களுக்கு எதிரானது என்ற மாயையில் மூழ்கி விடாமல், மாறி வரும் சூழலையும் வகைப் பிரித்து, பெண்களைப் உயர்வாய் போற்றும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டதோடு , மனம் மாறிய அத்தகைய ஆண்களுக்கு பாராட்டையும் வழங்கியுள்ளமை மிகவும் போற்றற்பாலது.

பெண்கள் சுதந்திரமும், சமத்துவமும், பெண்ணியத்தின் இரு கண்கள். மனித சமுதாயம் இனியும் பெண்களை அல்லது பெண்ணியத்தை புறக்கனித்துவிட்டு தன் முழு பலத்தோடு முன் நடந்துவிட இயலாது. இன்றைய இந்த நிலை பெண்களுக்கு மிக எளிதாகக் கிட்டிவிட வில்லை. அவர்களின் வியத்தகு தனி மனித சாதனைகளும் அமைப்பு ரீதியிலான போராட்டங்களுமே இந் நிலையை தோற்றுவித்திருக்கிறது. ஆனால் சமீப காலங்களில், சிலரின் பெண்ணிய சிந்தனைகள் பல தெளிவற்ற போக்கை ஏற்படுத்தி வருகிறது. பெண்ணியத்தை இவர்களெல்லாம் எங்கே இட்டுச்செல்ல விழைகிறார்கள்? என்ற மிகப் பெரிய வினாவை எழுப்பி நிற்கிறது. மிக மிக முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற போர்வையில் இவர்கள் பரப்பும் கருத்துக்கள், நம் வாழ்வில் இரு பாலரும் சமநிலையில் இணைந்து ஆற்ற வேண்டிய சில பல உயரிய கடமைகளில் இருந்து வழுவ, நவீன பெண்ணியம் வழி வகுத்துவிடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி நாளிதழ் இணைய தளத்தில் தாயம்மாள் அறவாணன் என்ற ஒரு சகோதரியர் “பெண்ணடிமை தீருமட்டும்” என்ற ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். அந்த கட்டுரை ஏற்புடைக் கருத்துக்கள் ஒரு புறமும், பலமான விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் மறு புறமும் என இரு வேறுபட்ட முனைகளைத் தொட்டு நிற் பதால், அதன் முக்கிய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கட்டுரையின் ஒரு பகுதி இது.

“சில நாள்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாநகரில் உள்ள ஐ.நா. அமைப்பில் பணியாற்றும் ஓர் உயரதிகாரி இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அப்போது அவர் கேட்ட கேள்வி நெஞ்சையே குறுக்காக வெட்டிப் போடுவது போல் இருந்தது. கேள்வி இதுதான்: ‘என்ன? சுதந்திரம் வாங்கிப் பல ஆண்டுகள் ஆகியும் வெள்ளைக்கார மோகம் உங்களை விட்டுப் போகவே இல்லையே!’ என்று நிறுத்தாமல் தொடர்ந்தார். ‘இன்னும் வெள்ளை நிறப் பெண்களையே சோப்பு முதல் சீப்பு வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புகிறீர்கள்! உங்களிடமிருந்து வெள்ளைக்கார அடிமைத்தனமும் போகவில்லை, பெண் அடிமைத்தனமும் போகவில்லை’ என்று சொன்ன அவர் வாயில் கல்கண்டை அள்ளிக் கொட்டலாம் போல இருந்தது”.

ஆம் இன்றும் நிலவும் இவ்விழி நிலை சுடத்தானே செய்கிறது. இதில் உள்ள உண்மையை எல்லோரும் எந்த வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ள இயலும். அதே கட்டுரையின் பிரிதொரு கருத்தை கீழே காணுங்கள்.

“பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல் மட்டுமன்றி அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதற்கு ஒரே வழி சிலகாலம் அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலைகளில் பெண்களை மட்டுமே அமர்த்துதல் வேண்டும். தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத்தளையிலிருந்து அவளுக்கு முழுச் சுதந்திரம் கிட்ட வேண்டும்.”

மேற்கண்ட குழப்பங்கள் நிறைந்த கருத்தை எங்ஙனம் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலும். இக்கருத்தில் “பெண்களின் அறியாமைக் கண்கள் திறக்கப்படுதல்” என்ற சொற்றொடரில் உள்ள நோக்கை ஏற்பதில் எந்த சிக்கலுமில்லை. அதேபோல் “தந்தையை, கணவரை, மகனைச் சார்ந்திருக்கும் பொருளாதார அடிமைத் தளையிலிருந்து முழச் சுதந்திரம் கிட்ட வேண்டும்” என்பதிலும் தவறில்லை, ஆனால் இடையே வரும் சொற்களை ஊன்றி கவணியுங்கள். “அவர்கள் அடுக்களை, வீடு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு முதலான சம்பளம் இல்லா அடிமை வேலைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும்” - இந்த கருத்து முழமையாக ஏற்கக் கூடியதுதானா?

மகளிர் மேம்பாட்டிற்காய் உழைக்கும் அமைப்புகள்கூட இக்கருத்தை முழமையாய் ஏற்குமா என்பது ஐயமே. காரணம் வீடு, குழந்தை வளர்ப்பு முதலிய செயல்கள் சம்பளமற்ற வேலையாகக்கூட கணிக்கப்படலாம் ஆனால் அவைகளை அடிமை வேலைகள் என எவ்வாறு கணிக்க இயலும். உலகமே வியந்து நோக்கும் இந்திய நாட்டின் “குடும்ப வாழ்க்கை” கட்டுக்கோப்பு அடித்தளத்தின் ஆணி வேரையே அசைக்கக் கூடியதல்லவா இக்கருத்து. இவற்றின் மூலம் பெண்களுக்கு கொடுக்கும் அறிவுரை என்ன? குழந்தைகள் பெற்றால்தானே “குழந்தை வளர்ப்பு” எனும் அடிமை தொழில் எனவே குழந்தையே இனி பெறல் வேண்டா! திருமணம் எனும் சடங்கால்தானே அடுக்களை, வீடு, விருந்தோம்பல் எனும் தொடர் அடிமை தொழில்கள் எனவே திருமணமே வேண்டுவதில்லை.
இவைகளா “பெண்கள் சுதந்திரம்” எனும் உயரிய நெறியின் செறிவு ?

இன்று “பெண்ணடிமைப் போக்கை” இரு நிலைகளில் புரிந்துகொள்ள வேண்டுமென எண்ணுகிறேன். பெண்களின் தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை, அவர்களின் சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை.

தனிப்பட்ட குடும்ப சூழலில் நிலவும் தன்மை:

மனிதகுல வளர்ச்சியில், தனிமனிதனாய் சுற்றித்திரிந்தவன், குடும்பமாய் மாறியதும், பல குடும்பங்கள் இணைந்து ஓர் சமூகமாய் உருப் பெற்றதும் - நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பரிணாம வளர்ச்சியில் பெண்ணடிமை என்று? எவ்வாறு? வந்து ஒட்டிக்கொண்டது என்பது ஆழ்ந்த ஆய்விற்குரியது. இந்த சீர்கேட்டின் தோற்றுவாய் ஆண்களின் ஆணாதிக்க மனப்போக்கே என வாதிடுவதில் உண்மையுண்டு. ஆனால் பெண்ணடிமையை வளர்த்ததில், வளர்ப்பதில் பெண்களுக்கும் பெரும் பங்குண்டு என்பது இன்றளவும் மறுக்க இயலா உண்மைகள். திருமண வாழ்வு முறையில் நிலவும் வரதட்சினை கொடுமையில் ஆண்களின் பங்கும் பெண்களின் பங்கும் என்ன என்பதை நாம் நன்கு அறிவோம். ஒரே குடும்ப சூழலில் ஒரு பெண், தன் மகள்பால் ஒரு நிலையும் மருமகள்பால் நேர் எதிர் நிலையும் எடுத்து பெண்னே பெண்ணுக்கு எதிராய் செயல்படும் போக்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இன்னும் ஏற்பட்டு விடவில்லை. இதில் பெண்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகம் தேவைப் படுகிறது. பெண்களின் இந்த மனப்போக்கை மாற்ற அவர்களின் மேன்மைக்காக பாடுபடும் அமைப்புகள் இன்னும் தீவிரமாக சிந்திப்பது அவசியம்.

குடும்ப சூழலில் பெண்கள் ஆண்களால் (என்ன உறவுமுறையாயினும்) போற்றப்படுவது இன்று ஓரளவு வளர்ந்து வருகிறது. எதார்த்த நிலையில் இதனை மறுக்க இயலாது. அப்படி ஆண்களால் போற்றப்படுவது ஒன்றும் மனப்பூர்வமான ஒன்றல்ல, பெண்கள் குடும்பத்திற்குள் கொண்டுவரும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டே போற்றப்படுகிறார்கள் என்கின்ற வாதமும் இல்லாமல் இல்லை. இதனை துல்லியமாக சதவீத வகைப் பிரிக்க எடைத் தட்டுக்கள் எவையும் இல்லை. என்றாலும் உள்ளார்த்தமாக போற்றுபவர்களும் உள் அர்த்தமாக போற்றுபவர்களும் எவ்வாறேனும் பெண்களை போற்றுவதற்கு தொடங்கியமை போற்றுதலுக்கு உகந்ததே. எவ்வாறு கணிப்பினும், தனிப்பட்ட குடும்ப சூழலில் பெண்களுக்கான சுதந்திரமும், சமத்துவம் நல்ல மாற்றமும், வளர்ச்சியும் பெற்று வருகிறது என்பது உண்மை நிலையாகும்.

சமூக வாழ்க்கையில் நிலவும் தன்மை:

சமூக வாழ்க்கையில் பெண்களின் நிலை, ஏனைய மேலை நாட்டோடு ஒப்பிடுகையில் நம் இந்திய நாட்டில் மிக மோசமாகத்தான் இருக்கிறது. இதற்குரிய காரணிகளை ஆராய்ந்தால் இதில் ஆண்களின் மனப்போக்கு மிக கணிசமான பங்கு வகிக்கிறது. தங்கள் இல்லங்களில் பெண்களை மதித்து நடப்பவர்கள்கூட வெளி இடங்களில் மற்றும் அவர்கள் ஆளுகைக்குரிய பணியிடங்களில் பெண்களை கேலிக்குரிய வகையில் கண்ணியக்குறைவாக நடத்துவது தொடர்ந்து கொண்டு வருகிறது. நவீன பெண்களின் நடை உடை பாவனைகள் தங்களை இவ்வாறு நடந்துகொள்ள செய்கின்றன என்ற அவர்களின் சமாளிப்புகள் சரியான காரணமாக தெரியவில்லை. அவர்கள் சிந்தனை தெளிவின்மையையே இவைகள் காட்டுகின்றன.

பெண்களுக்கான அமைப்புகளிலும் பலவேறு தன்மைய அமைப்புகள் நிலவுகின்றன. மேல்தட்டு பெண்கள் வெறும் பொழுதுபோக்காய் பயன்படுத்தும் பெண்ணிய அமைப்புக்கள். இத்தகைய அமைப்புகளின் குறியீடுகளாய், திரு பாக்யம் ராமசாமி அவர்களின் “அப்புசாமி சீதாபாட்டி” கதைகளில் வருவதுபோல் பளபளக்கும் பட்டாடைகளும் உதட்டுச் சாயங்களும் முகத்தில் அணியும் கருப்பு கண்ணாடிகளும் காட்சியளிக்கின்றன. இவைகளால் பெரிதாக எந்த சமுதாய பயன்களையும் பெற்றுவிட இயலாது.

அடுத்து சமூகப் பணிகளில் மட்டும் முழமையாக ஈடுபடும் பெண்கள் அமைப்புகள். இத்தகைய அமைப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு. அவர்கள் பெரிய கல்வியறிவு பின்புலமோ, நவ நாகரீக பாவனைகளோ அற்ற நிலையிலும் தங்களது சீரிய செயல்களின் மூலம் பலரின் புருவங்களை உயர்த்தி அமைப்பின் மதிப்பீட்டை உயர்த்தி இpருக்கிறார்கள். எனவேதான் திரு வாஜ்பாய் அவர்கள் பிரதம அமைச்சாராக இருந்தபோது பொது மேடையில் திருமதி சின்னத்தாய் அவர்களின் பாதங்களை குனிந்து வணங்கினார். அப்பொழுது அங்கு நிமிர்ந்து நின்றது நமது பண்பாடு மட்டுமல்ல பெண்களின் உயர்வும்தான். சமீபத்திய சுனாமி துயர்துடைப்பு பணிகளிலும் திருமதி சின்னத்தாய் அவர்களின் அமைப்பு ஆற்றிய பணி போற்றுதலுக்கு உரியதாகும். இத்தகைய அமைப்புகளால் பெண்கள் சுதந்திரம் உரிமை இவைகளில் பெரிதாக எதையும் பெற்றுவிட முடியாது எனினும் பெண்களின் சமூக மதீப்பீட்டை நிச்சயம் உயர்த்த முடியும்.

மூன்றாவதாக முழுமையும் பெண்களின் உரிமை சுதந்திரம் இவைகளுக்காக இயங்கும் இயக்கங்கள் சார்ந்த அமைப்புகள். இவைகள் உலகம் தழுவியும், நல்ல சட்ட பாதுகாப்புகளோடும், உரிமைகளோடும் நடைபெறுகின்றன. பெண்ணியத்தை நிறுவுவதில் இவைகளின் பணிகள் மிகவும் கடினமானதும் தொடர்தன்மை கொண்டதுமாகும். இவர்கள் வகுக்கும் நெறிமுறைகளும், உரிய முறையான போராட்டங்களுமே பெண்ணியத்திற்கான கட்டுமானங்கள்.

பெண்ணியத்திற்கான அமைப்பு வகையை சாராத மற்றுமொரு பெண்கள் சார்ந்த அமைப்பு முறை நிலவுகிறது. இவைகள் இயக்கங்களில் இணைந்து செயல்படும் பெண்கள் அமைப்பு முறைகள். இதற்கான சிறந்த உதாரணம் ஈழத்தின் விடுதலைப் புலிகளின் அமைப்புகளில் பங்குபெறும் பெண்கள் அமைப்பு. இதில் பெண்கள் ஆற்றும் சாதனை, மற்ற எல்லாத்துறைகளிலும் பெண்கள் தனியாகவும் கூட்டாகவும் ஆற்றிய சாதனையை காட்டிலும் மிகவும் வேறுபட்டதும், கடினமானதும், சிக்கலானதும், எல்லாவற்றிலும் மேலாக தன் உயிரையே பணயமாக்க கூடியதானவுமாகும். இது ஒன்றே, வேறு எந்த அளவுகோலும் தேவையற்ற வகையில் “ஆணுக்கு பெண் சமமே” என உலகம் தீர்மானிக்க போதுமானதாகும்.

இக்கட்டுரைக்கு தொடர்பு இருக்கிறதோ என்னவோ கடமையாக கருதி இதனை கூற விழைகிறேன். விடுதலை புலிகளின் அமைப்பில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்பெறும் பாங்கு உலகம் முழுமையும் ஒருசேர போற்ற வேண்டியதாக நான் உளமாற நம்புகிறேன். இதில் கருத்து வேறுபட காரணமிருப்பதாக உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையே கருதுவதாயின், வல்லுனர் குழு சார்ந்த ஒரு கள ஆய்வினை செய்து முடிவுகளை உலகுக்கு கொண்டு வரலாம். அவை பெண்ணினத்திற்கு வலு சேர்ப்பதாக நிச்சயம் இருக்கும்.

இக்கட்டுரையின் விழைவு

பெண்கள் சமத்துவம், சுதந்திரம் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாய வளர்சிக்கும் தேவையானது. அத்தகைய பெண்ணிய கருத்துருவாக்கத்தில், குறுகிய கால பயன்களை மட்டும் இலக்காக கொண்ட தெளிவற்ற சிந்தனையை தவிர்த்து, பெண்களின் தனி வாழ்விலும் சமுதாய பொது வாழ்விலும் நீண்ட கால பயன்களை உருவாக்க வல்ல கருத்துகளையே முன்னடத்திச் செல்ல வேண்டும் என்பதோடு, அவற்றை அடைவதில் அனைவரும் தெளிந்த, முறையான நெறி நின்று தன் பங்களிப்பை வழங்க வேண்டுமென்பதுமே இக்கட்டுரையின் விழைவு.

Sunday, March 27, 2005

வலைஞர்களே! பயனமெங்கே?

வல்லான்மை மிக்க வலைப்பதிவு வலைஞர்களே!

உங்கள் இதயங்களை சற்று நேரம் எனக்கு கடனாகத் தாருங்கள். நம் எழுத்துக்களால் இந்த உலகையே மாற்ற விரும்பும் நாம் நம்மைப் பற்றியும் சிறது சிந்திக்க உங்கள் இதமான இதயங்கள் எனக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது. நம்புங்கள், சற்றைக்கெல்லாம் அவைகளை மீண்டும் உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்.

வலைஞர்களான நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பலப்பல எண்ண மலர்கள் வண்ண மலர்களாய், வாச மலர்களாய் மலர்ந்திருக்கின்றன. நாளும் நாளும் புதிது புதிதாய் மலர்ந்தும் வருகின்றன. தொகை தொகையாய் பவனி வரும் அந்த எழுத்து மலர்கள் ஒவ்வொன்றையும் வகைப் பிரித்தால், அதில்தான் எத்துனை எழுச்சிக் கருத்துக்கள், புரட்சிக் கருவூலங்கள், கால காலமாக மனத்தில் எழுதப்பட்டிருக்கும் மறுக்களை, ஒருநொடியில் மாற்றிவிட முடிந்த சிந்தனைச் சிதறல்கள்? இதுகாறும் நமக்கு எட்டா கனியாய் நின்ற எத்துனைச் செய்திகள்,
மறைக்கப்பட்ட வரலாறுகள், மறுதளிக்கப்பட்ட தீர்ப்புகள், இன்று ஆதாரப்பூர்வ ஆவணங்களாய், அறிவார்ந்த களஞ்சியங்களாய் நம் கரங்களில் தவழ்கின்றன. இந்தக் கனிகளை மந்திரத்தில் பறித்தவர் எவர். உழைப்பில்லா ஊதியங்களா இவைகள்? எப்படி சாத்தியமானது இது?

வலைத்தளம், கருத்துகளுக்கு கட்டுகளை இடும் கயவர்கள் இல்லாத வானவெளி. சுத்தமான காற்றை சுவாசிக்க நமக்கு கிடைத்த ஓசோன் படராத பூமி. இந்த எல்லையில்லா பரந்த வெளியில், எவர் துணையுமின்றி, நாம் “எண்ணிய எண்ணியாங்கு” இயம்பிட இயலும். இங்கு மட்டுமே சுதந்திரம் நம் பிறப்புரிமை. ஆனால் போராடி பெறாத எந்த சுதந்திரத்தின் மதிப்பும் எளிதில் உணரப்படுவதில்லை என்பார்கள். நாமும் வலைத்தளம் நமக்கு அளிக்கின்ற இந்த சுதந்திரத்தின் முழு புரிதலுமின்றி நம் பயணத்தை தொடங்கி விடுவோமோ என ஐயம் எழுகிறது. ஏகாந்த நேரத்தில் ஏன் இந்தக் கவலை என்றுதானே கேட்கிறீர்கள்?

வலைத் தளத்திலும் சில வல்லூறுகள் வட்டமிட தொடங்குகின்றன. வலைத்தளத் தோட்டத்தில் மலர்களுக்கு நடுவில் களைகளும் காலூன்ற துடிக்கின்றன. அவைகள் எந்த உருவில் வர துடிக்கின்றன என்பதற்கு உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவைகள் இங்கும் எழுத்துக்களுக்கு சாதி நிறம் பூசத் துடிக்கின்றன. நல்ல வேளை இது ஒரு தொடக்கம்தான். இதுவே சரியான சமயம். இன்று நாமே சிந்தித்து நம்மில் நிலவும் சிலபல குறைகளை நீக்கிக்கொள்ள தலைப்படாவிடில், நாளை காலம் கடந்த ஞானம் வெறும் கண்துடைப்பாய் மாறிவிடும்.

வலைபதிவாளர் என ஓரினமாய் நிற்கும் நம்மில் இவர் இன்னார் என இனம் பிரிக்க தலைப்பட்டு விட்டால் இறுதியில் என்ன மிஞ்சும். வெறும் குப்பை கூலங்கள்தான் மிஞ்சும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. இவை குறித்து இந்த தருணத்தில் கருத்தொருமித்த முடிவுகள் எடுக்கப்படவில்லையானால் எதிர் வரும் காலத்தில், வலைத்தளம் என்பது ஒர் இயக்கம் என்ற உயரிய நிலை மாறி வெற்றோசை கூட்டம் என்ற நிலை தோன்றிவிடும். நாம் இயக்கமாக ஏன் மாற வேண்டும் கூட்டமாகவே இன்னும் சுதந்திரத்துடன் இருந்துவிட்டு போவோமே என எண்ணுவோர் சற்று சிந்திக்க வேண்டும்.
இயக்கம் என்பது பல மூலகங்கள் சேர்ந்தாலும், அவை இரசாயன மாற்றம் அடைந்து, ஒவ்வொன்றும் தன் தனித்தன்மை மறைந்து ஒரு கூட்டுப்பொருளாய்(COMPOUND) உருவாவதை பேன்றது, வலுவானது, எளிதில் பிரிக்க இயலாதது, பயன்மிக்கது. மாறாக கூட்டமென்பது பல பொருள்களின் கலவை(MIXTURE) மட்டுமே. என்னதான் சேர்ந்திருந்தாலும் ‘தாமரை இலை தண்ணீர்’ போல் ஒட்டுதலற்ற நெறி சார்ந்தது. இதில் எதை நாம் விரும்புவது? எதை தேர்வு செய்வது?

உலகில் தோன்றிய இயக்கங்கள்தான் சாதனை களங்கள். முற்போக்கு சிந்தனையும், அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் தரத்தக்க தொடர் முயற்சியும் கூடிய தளங்கள். அங்கு ஒருவித போராட்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும். அதன் எல்லாப் பணிகளும் ஒரு நோக்கம் சார்ந்த நகர்வாய் இருக்கும். சரி இயக்கமாக மாற வேண்டும் என்றால் எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் ஒத்து போதல் என்பதா பொருள்? அல்ல அது தெளிவற்ற போலி.

கருத்துக்களுடான மோதல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அது தடுக்க தேவையில்லாத ஒன்றும் கூட. மோதல் என்பதுதான் இயங்கிக் கொண்டிருப்பதற்கான உயிரோட்ட சான்று. எனவே சில தர்க்க வாதங்களில் பின்னூட்ட போர்கள் அனல் பறக்கும் போர்க்களமாக மாறி விடுவதில் தவறில்லை. அப்பொழுதுதான் வாசகர்களிடம் ஒரு எரிமலையை தோற்றுவிக்க முடியும். எழுத்தில் ஒரு தட்டை தன்மைகள் மாறி உயிரோட்டம் நிலவும்.

இந்த மோதல் எங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது? எங்கு கருத்து மோதல் தனி மனித மோதலாய் மாறுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு அடிப்படைப் பண்பாடுகளும் நாகரீகங்களும் காற்றில் பறக்கவிடப் படுகிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. எங்கு பிறர் சுதந்திரத்திற்கு விலங்கிட முயல்கிறதோ அங்கு கண்டிக்கத் தக்கதாய் மாறுகிறது. என் சுதந்திரம் என்பது ‘என் கைவீச்சு பிறர் மூக்கை உரசாதவரை’ என்ற தெளிவு பிறந்துவிட்டால் எந்த மாச்சர்யங்களுக்கும் இடமில்லை.

நவீன இயற்பியலின் நாயகர்களாக திகைபவர்களில் ஒருவரான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் அவர்கள், முப்பது வருடங்களுக்கு முன் அறிவியல் முரண்பாடு நிறைந்த கருப்புவளை (BLACK-HOLE) குறித்த ஆய்வறிக்கையை உலகுக்கு வழங்கினார். அவர் இன்று தன்னால் முன்மொழியப்பட்ட கருத்துகள் தவறானது என முப்பது வருடங்களுக்கு பின் ஏற்று புதிய கருத்துக்களை உலகுக்கு வழங்குகிறார். கருத்து மாற்றங்கள் விஞ்ஞானத்தில் சாத்தியமாவதுபோல் மெய்ஞானத்திலும் சாத்தியமானதே.

இந்த தெளிவைப் நாம் பெற்றால் நம்மிடையே நடைபெறும் கருத்து மோதல்கள் குறிபிட்ட அந்த கருத்தோட்டத்தில் ஒரு தெளிவு பிறப்பதற்கான வழி முறைகளாக மாறிவிடும். அப்பொழுது இது பிறரால் போற்றப்படுவதோடு மட்டுமல்லாமல் சமுதாய பயன்மிக்கதாயும் மாறிவிடும். இன்னும் சில விவாதங்கள் உண்டு. அவைகள் கோழியா முட்டையா போன்ற விவாதங்கள். அவைகள் என்றும் நிலைத்திருப்பன. ஏதோ இன்றே அவை அனைத்திற்கான தீர்வையும் நாம் கண்டுவிட இயலும் என்பதைப் போன்ற மாயையில் சிக்கி கால விரயம் நட்பு விரயத்திற்கு இடமளிக்காமல், இவற்றில் நாம் விரும்பும் கருத்துக்கு வலுவுட்டத்தக்க செய்தியை மட்டும் பதிவு செய்துவிட்டு நாசுக்காக விலகிவிடுவதே நலமானது. இது தப்பித்தலா? தெளிவா? நாம் இதில் சற்று விவாதித்து தெளிவோமே!.

இதன் தொடர் சிந்தனையை நாளை தொடர்வோமா?

Monday, March 21, 2005

வாருங்கள் மருமகனே!

வாருங்கள் மருமகனே! வாழ்த்தி வரவேற்கிறேன்!

ஈழத்தின் சுழற்பந்து எம் வீட்டு மதிமலரை மணந்தது. முரளியாரே! இனி நீர், ஆடு களத்தில் மட்டும் பந்தை வீசிக் கொண்டிருக்க மட்டீர்கள். கிடைத்திருப்பது மலர் அல்லவா? அதிலும் வெறும் மலரா? மதி நிறைந்த மலரல்லவா? வாழ்க்கை களத்தில் நறுமணமும் வீசிக் கொண்டிருப்பீர்கள்.

வாழிய நலனே!

தமது குடும்ப நண்பர்கள் என்பதால் இணைத்து வைத்த சகோதரர் சந்திரசேகர் (திரைப்பட நடிகர்) சிறந்த செயல் புரிந்துள்ளார். எம் பாராட்டுகளும் நன்றிகளும். பாராட்டு சரி நன்றி எதற்கு? அவர் இணைத்து வைத்துள்ளது இரண்டு குடும்பங்களாக மட்டும் நான் காண வில்லை. உறவால், உணர்வால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றிய எம் இரு நாட்டை இணைத்துள்ளார். ஈழநாடு, தமிழ்நாடு. எனவேதான் நன்றிகள்.

தமிழர்தம் உயர்வுக்கு பாரதியும், அவன் தாசன் பா தாசன் - பாரதிதாசனும் கண்ட கனவுகளின் மிச்சத்தையும் சொச்சத்தையும் இன்று நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். என்ன கனவு அது? உலகெலாம் பரவி நிற்கும் தமிழர்தம் தொப்புள் கொடி உறவுகள் மீண்டும் மீண்டும் இரண்டறக் கலந்து நாட்டு கொடியோடு போட்டியிட்டுப் பறக்க வேண்டும்.

தமிழன் தனியாளாய் எந்த தளத்திலும் நிற்கா நிலை வேண்டும்.

இத்தருணத்தில் ஒரு சிறு கேள்வியும் ஏனோ என் சிந்தையை தொலைக்கிறதே ஏன்?

நம் நாட்டில் நடந்த இத்திருமணத்தில் நமது இந்திய வீரர்கள் கலந்துகொள்ள வில்லையே ஏன்? சீப்புகள் ஒழிந்துவிடுவதால் திருமணங்கள் நிற்பதில்லைதான். இருப்பினும் கலந்துகொள்ளா காரணம் என்ன?

எனக்கு விடை பிடி படவில்லை. தெரிந்த வகையில் சமாதானம் செய்து கொள்கிறேன். போட்டிகள் நடப்பதால் அவகாசம் கிடைக்கவில்லையோ?

காரணம் எதுவெனினும் முக்கிய சிலரேனும் கலந்து கொண்டிருப்பின் அது நம்மை போற்றியதாகவும் ஆகும். நம் வீரர்களும் சமுதாய குடிமக்களே என்பதை நிறுவியதாகவும் ஆகும். எனக்கு என்னவோ அவர்கள் வானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது. எதிர் வரும் காலங்களிலாவது அவர்கள் பூமியிலும் வாழ பழகட்டும்.

நண்பர்களே! இது தனியான என்னுடைய வாழ்த்தல்ல, நம் அனைவரின் வாழ்த்துக்கள்தானே!


அன்புடன்
மன்னை மாதேவன்

Thursday, March 17, 2005

அள்ளித் தெளித்த கோலங்கள்..

யார் கூறியது ஒட்டகங்கள் சகாராவை தாண்டாதென? கவிஞர் நா.காமராசன் அவர்களின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு “சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்”. நாங்கள் சகாராவை தாண்டிய ஒட்டகங்கள். வெளி நாட்டு வேலையால் பெரும் பொருள் என்ற கானல் நீருக்காக அலையும் எம் போன்றோரை காலம் தன் ஓடத்தில் கட்டாயமாக ஏற்றி (ஒட்டகங்களாக) கடல்களுக்கு அப்பால் கடத்தித் தானே விடுகிறது.

நாங்கள் எங்கள் உணவை அசை போடுவதைவிட உணர்வை அசை போட்டுத்தானே வாழ்ந்து கொண்டு வருகிறோம். சரி சரி பை நிறைகிறதல்லவா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. கேட்டுவிட்டு போங்கள். அது உங்கள் உரிமை. நாங்களும் தற்காப்புக்காக “இக்கரைக்கு அக்கரைப் பச்சை” என கூறலாம்தான். ஆனாலும் முடிய வில்லையே. எங்களில் பலருக்கு அக்கரை என்பதாக ஒன்று இருப்பதாகவே தெரிய வில்லையே! என்ன செய்ய? இன்னும் ஓரிரு வருடம்தான் அப்புறம் ஓடி வந்து நம் மண்ணில் விழுந்துவிட மாட்டேனா? இந்த வினா-விடை விளையாட்டு எங்களின் சுயம்புகள். எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள நாங்களே விதைத்து, வளர்த்து, அறுவடைச் செய்துகொள்வது. ஆனால் கண்டுமுதல் மட்டும் காவிரி போல் என்றும் வறட்சிதான்.

நல்லவேளை ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என எம்மை வாழ்த்திய எம் தாத்தாக்கள் காலத்தில் செயற்கைக்கோள்களும் அவற்றின் வாயிலாக சென்றடைய முடிந்த இயற்கைக் கோள்களும் இல்லாமல் போய் விட்டது!...இருந்திருக்கும் பட்சத்தில் “திங்கள் பறந்து திரவியம் தேடு”, “செவ்வாய் செலவில் செல்வம் சேர்”, “புதனைத் தோண்டி புதையலை நாடு” என்று அடுக்குத் தொடரில் அவர்கள் பாட்டுக்கு (பாட்டுக்கும்!) சொல்லிவிட்டு சென்றிருப்பார்கள். இந்நேரம் அங்கிருந்தும் எங்கள் உயிர்க் காற்று புலம்பலாய், புயலாய், ஏன் பூகம்பமாய் கூட வந்து கொண்டிருக்கும்.

வீட்டில் வாழா விட்டில்களின் ஆதங்கங்கள் கூட ஆடம்பர மாகத்தான் இருக்கும். “என்று தணியும்” எங்கள் தாய் மண்ணின் தாகம்? இது வீட்டுப் பற்றால் விளையும் நாட்டுப் பற்று. போதும் போதும். விடை கிடைக்கா வினாக்களில் இருந்து விடை பெற்றுக் கொள்கிறேன்! விசயத்துக்கு வருகிறேன்.

இலவச பூமியின் இதமான காலைப் பொழுது. நண்பர் தில்லை முகத்தில் வடியும் வியர்வையோடு அலுவலகத்தில் நுழைகிறார். பரபரப்பு அவர் நடையிலேயே நடனமிடுகிறது. தில்லை என்பது அவர் இயற் பெயரல்ல. அவர் அவதரித்த அம்பதியே அவருக்காய் அவதானித்த பெயர். பொதுவாக வெளிநாட்டில் (கூட்டில்) வாழும் பறவைகளுக்கு, தவிர்க்க இயலா காரணங்களால்கூட அலுவலகம் சற்று தாமதமாய் வருவது மறுக்கப்பட்ட கனிகள்தான்.

உள்ளுர் சந்தையில் விலை போகாத எங்கள் கல்வி மாடுகள், இங்கு நல்ல விலை பெற்று, எங்கள் வயிற்றை மட்டுமல்ல கூடவே மதிப்பையும் மரியாதையையும் சேர்த்தே நிரப்பி வருகிறது. எங்கள் திறமை, அலுவலகத்தில் முக்கியத்துவம் என்ற தூண்டிலை எங்கள்மீது ஆரம்பத்தில் போடும். மாட்டியவர்களின் முதுகுகள் முறிவுகளாகி சில நேரம் அதுவே முடிவுகளாகவும் ஆகிவிடும். இந்த தொடர் ஓட்டத்தை நிறுத்த, வயிற்றை இழக்கவா? இல்லை வாழ்வையே இழக்கவா? இதில் எதை இழக்க?

அன்று அவர் ஆற்ற வேண்டிய மலையளவு பணிகள் குவிந்து கிடக்கிறது. எனவேதான் இந்தப் பரபரப்பு. நண்பரின் பரபரப்புக்கு காரணம் கேட்டேன். சென்னையில் வசிக்கும் தன் செல்வப் புதல்வன் பள்ளி இறுதி வகுப்புக்கான தேர்வுகள் எழுதி வரும் இந்த நாளில் அன்றாடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவனுக்கு ஊக்கமளித்து வருவதாகவும், இன்று அப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்கையில் அவரது துணைவியார் “ஆற்றாது விட்ட கண்ணீர்” அவரை அக்கினியில் இடுவதாயும் கூறினார்.

நேரடியாக அவர் துணைவியார் கண்ணீருக்கான காரணம் கேட்பது பண்பாகாது என்றக் காரணத்தால், காரணம் அறிய சுற்றி வளைத்தேன்.

‘ஏன் நீங்கள் உங்கள் மகனிடம் பேச வில்லையா?’ - இது நான்.

‘அவன் வீட்டில் இருந்தால் அல்லவா அவனிடம் பேச - இது அவர்

‘தேர்வு நேரத்தில் கூட வீட்டில் இல்லாமல் அப்படி எங்கே சென்றான் அவன்?...நான்.

அவர் கூறியவை இவைதான். பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறும் இந்த நாட்களிலேயே..அரசு மற்றும் சில தனியார்; கல்வி நிறுவனத்திற்கான நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுவதால் - (நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்குவது அது ஒரு துணைக் கதை) - அவற்றை பெறுவதற்கும் அவற்றை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவே அவன் சென்றிருப்பதாகவும் கூறிய அவரது துணைவியார் தேர்வு நாட்களில் அவன் கவனம் இப்படி சிதறுவதற்காகவே கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

“இதுக்குபோயி அலட்டிக்கலாமா” என்று நான் கூட பாடியிருப்பேன் தான், அவர் இந்தச் சிங்காரச் சிறைதனில் சிறகடிக்கும் காரணம் அறியாமல் இருந்திருந்தால். ஏதோ சென்னைக் கோட்டை சல்லிசாய் விற்பனைக்கு வருகையில், எப்படியாவது அதை வளைத்து போட்டுவிட அடங்காத ஆசைகொண்டு இந்த புண்ணிய பூமியின் புதையலுக்காய் வந்தவரல்ல அவர். (ஒருவேளை அப்படி விலைக்கு வந்தால் நம் அரசியல் வா(ந்)திகளுக்கு மிஞ்சியல்லவா தானமும் தர்மமும்.) எங்கோ தொலைத்த வாழ்க்கையின் எச்ச சொச்சங்களாவது மிச்ச நாட்களில் நிற்காதா என்ற ஏக்க பயணமே அவருடையது.

அவர்களது வானத்தில் மின்னும் ஒரே நட்சத்திரமும், கண்ணுக்கு தெரியாத கலங்கரை விளக்கும் - “யாதுமாகி நின்றாய் என் அப்பனே” என்று அவர்களுக்கு யாதுமாகி நிற்பதும் அந்த ஒன்றுதான். எல்லாமே அவர்களது ஒரே செல்வப் புதல்வன் தான். அவன் கல்விதான் அவர்களது வண்ணக் கனவு. எனவேதான் இம்மாத அவர் வரவின் பெரும் பகுதியைத் தொலைபேசித் துறைக்கு வரவு வைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூறுங்கள்ää அவர்கள் கண்ணீர் கதை கூறுமா இல்லையா?

எனக்கு பொறி தட்டியது. தேர்வு நடைபெறும் இப்பொழுதே இவற்றையெல்லாம் வழங்க வேண்டிய அவ்வளவு அவசரமென்ன? மாணவர்களின் நலனில் அக்கரையின்மையா? அரசும் அதிகாரிகளும் திட்டமிடலில் உள்ள குழறுபடிகளா? அல்லது கால அவகாச மின்மையா? உண்மையில் கால அவகாச மின்மை என்றால் எந்த அளவு கால அவகாசமின்மை? தேர்வு முடிந்த மறுநாளேகூட வழங்க முடியாத அளவுக்கு இந்த இரண்டொரு நாட்கள் அவ்வளவு முக்கியமானவைகளா?

சென்ற ஆண்டு பொறியியல் கல்வி தொடங்க தனியார், அரசு என மாறி மாறி அறிக்கை யுத்தமும் நீதிமன்ற யுத்தமும் செய்து ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு மேல் மாணவர்களின் நாட்களை வாயில் போட்டு விழுங்கியவர்களுக்கு இந்த இரண்டொரு நாட்களா இயலாத ஒன்று? சரி இந்த ஆண்டு மட்டும் இந்த தனியார், அரசு கல்லூரி கண்ணாமூச்சு விளையாட்டு இருக்காதா என்ன? ஏற்கனவே தொடங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அண்மையில் பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்க்கான தேர்வு குறித்த கலந்துரையாடலை சகோதரியர் பாரதி பாஸ்கர் அவர்கள் நிகழ்த்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்திருந்த மனோதத்துவ மருத்துவர் மற்றும் மாணவர் தேர்வு முறை குறித்த நூல் ஒன்றை எழுதியுள்ள சிந்தனையாளர் ஆகியவர்கள் வழங்கியச் செய்திகள் நம் கல்வி முறையில் நிலவும் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தேர்வு காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் மருத்துவர். மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் நம் தேர்வு முறைக்கே அதற்கான தகுதி யின்மையை விளக்கினார் சிந்தனைவாதி. அவர் பார்வையில் “தேர்வு” என்ற சொல்லும் அதன் வர்க்க வார்த்தையான “தோல்வி” என்ற சொல்லும் குறைப் பிரசவங்கள் என நிறுவினார்.

கல்வி கற்கும் மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதில் அவர்களின் ஆண்டு முழுமைக்கான அறிவுசால் ஆய்வு இல்லாமல், நம் தேர்வு முறைகள், ஆண்டின் இறுதி நாட்களைச் வெறுமனே சார்ந்து நிற்கின்றன. உதாரணமாக நல்ல திறனுள்ள ஒரு மாணவன் தேர்வு காலத்தில் உடல் நலக்குறைவில் தேர்வு எழுதும் வாய்ப்பை இழக்கிறான். அவனை எப்படி தோல்வி மாணவன் என கணக்கிடுவது? மாறாக, கல்வியில் மிக மிக பின் தங்கிய மாணவன் ஒருவன் குறுட்டான் போக்கான வாய்ப்புகளில் (அதிர்ஷ்ட வசமாக அவன் படித்திருந்த மிகக் குறுகிய பாடப் பகுதிகளிலிருந்து தேர்வு வினாக்கள் வந்தமையால்) பெரும் வெற்றி பெறுகிறான். அவனது உண்மைத் தகுதியை அவன் பெற்ற மதிப்பெண் வெற்றி உறுதி செய்யுமா?

திறனை நிறுவுகின்ற முறையான்மை சார்ந்த ஒன்றில் அதை எடைபோடும் எடைத்தட்டிலேயே உள்ள இவைபோன்ற ஊனங்கள் ஏற்புடையதுதானா? கல்வித் துறைசார் ஆன்றோர்கள் சிந்தனைக்கும் ஆக்கத்திற்கும் உரிய இதனை அவர்களின் ஆய்விற்கே விட்டு விடுகிறேன். தகுதியை உறுதி செய்கின்ற சிறந்த மாற்று வழிகள் உருவாக்கப் படுமானால் அவைகள், “வரப்புயர” என்பதற்கொப்ப நேரடியாக மாணவர் தொடங்கி நாடு வரை பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அதிகாரிகளுக்கு எனது இதமான வேண்டுகோள் இதுதான். தேர்வு நேரத்தில் மாணவர்களின் கவணம் திசை திரும்பவும், மாணவர்களின் மற்றும் அவர்கள் பெற்றோர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க கூடியதுமான இந்த கால குளறுபடிகளை நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாம் அல்லவா? அது ஒன்றே உங்கள் சமுதாயப் பார்வைக்கு சான்றாகும் அல்லவா? இனியேனும் இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

Saturday, March 12, 2005

தாழ்மையானதோர் வேண்டுகோள்!

அன்புமிகு வலைப்பூ சோதர சோதரிகளே!

அண்மையில் வலைப்பூ வாயிலாக நாம் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற வினாவுடன் கூடிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு நீண்ட கட்டுரையை எழுதி வலைப்பூவில் உள்ளிட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் நான் சற்றும் எண்ணிப்பாராத வகையில் இப்படி ஒரு உள்ளீட்டை எழுத வேண்டி வரும் என எதிர்பார்க்கவில்லை. வலைப்பூக்களின் பயன் இதுவென நாம் எண்ணியிருந்தவைகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்ளவும், அதனுடன் சேர்த்து நம் உள்ளத்தையும் சற்று உயர்த்திக்கொள்ளவும் இவ் உள்ளீட்டை இட விழைகிறேன்.

18-03-2005 குங்குமம் வார இதழில் மெகா ஜனங்களே என்ற விவேக் அவர்கள் எழுதியிருக்கும் தொடரைப் படித்தேன். அதைப் படித்தவுடன் என் இதயத்தில் வேதனைச் சுழி மையமிட்டு விட்டது. பார் போற்றும் புலவன் பாரதி தொடங்கி, புலமைப்பித்தன் இடைநின்று, சமீபத்தில் சாலை விபத்தில் திடீரென மரணமெய்திய சு.சமுத்திரம் ஈறாக இலக்கியவாதிகளின் வாழ்வில் ஏற்பட்ட துயர்மிகு நிலையை படிக்கின்ற போது விவேக் அவர்களின் வேதனையில் சாரமிருக்கிறது என உணர முடிந்தது. சம காலத்தில் வாழும் புலவர்களை, சிந்தனைவாதிகளை, இலக்கியவாதிகளை போற்றுவதிலும் அவர்கள் துயருறும் காலத்தில் உதவிக் கரம் நீட்டுவதிலும் நாம் சற்று குறைபாட்டோடுதான் நடந்து கொள்கிறோம். ஆனால் அப்படிப்பட்டவர்களின் மறைவுக்கு பின்னால் அவர்களை வானளாவ போற்றுவதில் மட்டும் எந்த குறையும் வைப்பதில்லை. தமிழர்களாகிய நம்மைப் பற்றிய இந்த உண்மை சற்று சுடத்தான் செய்கிறது. இந்த கறையை சற்றேனும் கழுவ முனைவதில் நாம் அனைவரும் சற்று மேம்பட்டு நிற்க விரும்பியே உங்களிடத்தில் என் பணிவான அன்புநிறை இவ் வேண்டுகோளை வைக்கிறேன். இது பிழை என எண்ணுவோர் உளமாற என்னை மன்னிக்கவும்.

“வார்த்தை சித்தர்” என்று எல்லோராலும் போற்றப்பட்ட வலம்புரிஜான் இன்று உடல் நோயால் மட்டுமின்றி பொருளாதார குறைபாடு எனும் பெரு நோயாலும் தாக்குண்டுத் தவிக்கிறார். கவிஞர் திரு வைரமுத்து அவர்களும் விவேக் அவர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் உதவியிருக்கலாம், வெளி உலகுக்கு தெரிய வரவில்லை. வலம்புரியாரின் அரசியல் வாழ்விலும் மற்ற பிறவிலும் முரண்பாடு காண்போர்கூட அவரது அறிவுசார்ந்த ஆற்றலை, அவர் ஆற்றிய உரைகளின் இலக்கியச் செறிவை மறுக்க மாட்டார்கள். அவர் அரசியல் வாழ்வு பிழைப்பட்டது என முழுதாய் முடிவுக்கு வரவும் தயக்கமாக உள்ளது. அப்படி முழுதும் பிழையெனில் இன்று பொருளாதாரத் துயரில் ஏன் அவர் உழலவேண்டும்? ஒருவேளை இற்றை நாள் அரசியல் வாதிகளின் ஒரே திறமையான அரசியலின் வாயிலாக மிகுந்த பொருளை ஈட்டி தன்னை வளமாக்கிக் கொள்ளும் அந்த திறமையில் அவர் குறைப்பட்டுத்தான் இருந்தாரோ? அவ்வாறாயின் அதுவே அவரது நிறையாகி விடும். எதுவாயினும் விவாதத்திற்கு இது பொழுதல்ல


அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவென அந்த குங்கும் இதழ் விவேக் தொடரில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று(12-03-2005) அதில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவரது மருமகன் அவர்கள் அவரது தற்போதைய நிலையை கூறினார்கள். அது இன்னும் துயரமாக இருந்தது. அவர்களிடமிருந்து கீழ்கண்ட முகவரியைப் பெற்றேன். எனவே அன்பர்களே! இயன்றோர் கீழ்கண்ட விபரங்களை பயன்படுத்தி, இயன்ற சிறிய அளவிலேனும் அவரது “இடுக்கண் கலைய” முயல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, அத்தகைய நல்லோர் அனைவர்க்கும் தமிழ் சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தொலைபேசி எண்: 0091-044-26494234
முகவரி:
வலம்புரிஜான்
12 விஜிஎன் அவன்யூ
குமணன் சாவடி
சென்னை – 600 056

Monday, March 07, 2005

உயர்நெறிப் பணியிதை..

இந்நாடன்றி எந்நாட் டிடையும் உலவும் ஓர்கதை,
“வாழ்வு என்பது மீழா துயர்யாழ் மீட்டிடும் இசை”.
வாளாதிருக்க வகைபுரி இம்மொழி - வீண்மொழி - விடமொழி.
மனிதா! மனிதா! எப்படி சிக்கினாய் இப்பெரு வலையில்?

“சுழலும் உலக நாடக மேடையில் -
அனைவரும் நாமோர் நாடகப் பாத்திரம்”,
இன்பமும் துன்பமும் வாழ்க்கைக் காட்சிகள்.
“இயக்குதல் விதியே” என்பர் மதியிலர்.

இன்பம் ஓர்முறை இதமாய்ச் சிரிக்கும்,
துயரப் பெரும்புயல் சுழன்றே அடிக்கும் – எனினும்!
பயனுறு வாழ்வு மனிதனின் கரங்களில் - இனிமுதலேனும்
“வாழ்வே மாயம்” தத்துவம் துறப்போம்.

ரோஜா படுக்கைகள் தானே மலரா!
பயண இலக்கை படைப்பவன் மனிதனே!
நாம்தான் பெற்றோம் நாமே ஆளுவோம் - என்பதே இன்று
வீரம் விரவிய வினோத விளையாட்டு.

இயற்கையின் சீற்றம் இசைத்திடும் இசையில்
திசையெலாம் இன்று அச்சமும் திகிலுமே!
மனிதன் பாதையை மறைத்திடும் தடைமலை
தகர்த்திட இன்று தனித்தோள் பயன்படா.

புரையுடை கண்கள், ஒழுகிடும் மூக்கு, ஒலியிடும் மார்பு, உணரா நாசி.
ஆகா! ஆகா!! மாய வியாதிகள் மலை மலை போலும்.
இயற்கையை மனிதன் இலேசாய் சீண்ட,
ஓசோன் படல ஓட்டைகள் நீண்டது.. விளைவு?

சண்டமாருதம், மண்பதைச்சரிவு, குமுறும் எரிமலை, கொன்றிடும் நீள்கடல்.
விண், மண், நீர், நிலம் அடங்கலும் விபத்தாய்! – போதுமோ இவை?
நெஞ்ச வஞ்சமும் நீண்டிடும் போரும் .. வதைக்கவோ மானுடம்?
வெண்புறாவே நீ எங்கே பறந்தாய்! இன்றேன் மறைந்தாய்!!

இலையிலா மரங்கள்; மரமிலா காடுகள்;
நீரிலா ஆறுகள்; நிலத்திடை நிறைந்தன.
நீல வானமும் - கரும்புகை பகைவனால் – கறுத்தது.
பறவைகள் படுதுயர்.. பதைப்போர் எவருளர்?

அவலங்கள் அனைத்தினை அகற்றிடும் ஒளடதம் -
அறிவுத் தீச்சுடர், திறவுகோல் கல்வியே!
உலக அமைதியா? உள்ளத் தமைதியா?
அமுத ஊற்றென அளிப்பது கல்வியே!

உனக்காய் நானும், எனக்காய் நீயும்,
உழைப்போம் எனுமோர் உயர்நிலை வாழ்வை
அள்ளித் தருவது அமுத நற் கல்வியே!
போதிப்போரே!.. போதிப்போரே!! புரைதீர் நல்லீர்!


ஆசிரியப் பணி ஆற்றிடும் பெரியீர்!
உயர்வகை சிலைதமை செதுக்கிடல் உம்பணி!
உள்ளத் தமைத்திதை உதவிட வாரீர்!
உயர்நெறிப் பணியிதை புரிந்திட வாரீர்!!

( இச்சிறு கவிதை - ஆசிரியப் பணி ஆற்றிடும் அனைவர்க்கும் சமர்ப்பணம் )

ஆங்கில ஆக்கம் : தஸ்னீம் மு. அகமது
தமிழாக்கம் : மன்னை மாதேவன்

Wednesday, March 02, 2005

முன்மொழிந்தோரை வாழ்த்தி, வழிமொழிவோம்!

இன்று தமிழர்கள் மத்தியில் ஓரு சூடான விவாதம் தோன்றியிருக்கிறது அல்லது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இது தாய் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகின் மூலை முடுக்குகளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் ஓர் தாக்க அலையை ஏற்படுத்தி வருகிறது.

'தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில்தான் வைக்கப்பட வேண்டுமா? அல்லது ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் வைப்பதற்கும் அனுமதிக்கலாமா?' தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உணர்வுடைய தமிழர்களின் நீண்ட நாள் கனவு, ஓரளவு நிறைவேறியுள்ள நிலையில் இதுபோன்ற விவாதங்கள் எந்தத் தமிழர்களாலும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

இவ்விவாதத்தின் இருபுறமுள்ள வாத பிரதிவாதங்களை சீர்தூக்கி, ஆய்ந்து தெளிவடைவதோடு, தெளிந்த முடிவை நடைமுறைப்படுத்த தலைப்படுவதும் தமிழர் ஒவ்வொருவரின் கடமையாகி நிற்கிறது. எனவே இவ்வாய்வுக்கு துணைநிற்கும் வகையில் இக்கட்டுரை புனையப்படுகிறது. திரு அக்னிப்புத்திரன் அவர்களும் பேராசிரியர் திரு சுப.வீரபாண்டியன் அவர்களும் தங்கள் கட்டுரையின் வாயிலாக பல தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே முழுமையும் தொடர்ச்சியும் கருதி, வாசகர்கள் அக்னிப்புத்திரனின் கட்டுரைகளான “கமலஹாசனுக்கு ஒரு வேண்டுகோள்”1 மற்றும் “தமிழ்தான் தமிழனுக்கு முகவரி”2 என்பனவற்றையும், சுப.வீரபாண்டியன் கட்டுரையான “தமிழ்ப் படம் - ஆங்கிலப் பெயர் அண்ணாவின் கொள்கையா?”3 என்ற கட்டுரையையும் முதலில் வாசித்து பின் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.

மேற்கூறிய திரைப்பட பெயர் குறித்த விவாதத்தில் ஒரு சிறிய ஆறுதல் அளிக்கும் அம்சம் தொக்கி நிற்கிறது. ஆங்கிலப் பெயர்களை வைத்துவிட்டுத்தான் போகட்டுமே என வாதிடப் புகுவோர்கூட “பிஃஎப்” போன்ற நா கூசும் நாற்றப் பெயர்களுக்கு பல்லக்கு தூக்கவில்லை. ஒருவேளை இதை இன்று ஆதரித்தால், எதிர்வரும் காலங்களில் ஆங்கிலத்தில் உள்ள இதனினும் கீழான, கேவலமான, இழிச் சொற்களை தேடித் துருவி கண்டுபிடித்து வைத்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு காரணமாக இருக்கலாம்.


அல்லது நமது மூதாதைத் தமிழரின் பண்பாட்டு, நாகரீக, கலைக் கலாச்சாரத்தின் மீது இன்றைய தலைமுறைத் தமிழர்களுக்கு உள்ள குறைந்தபட்ச அக்கரையாகக்கூட இருக்கலாம். எவ்வாறாயினும் இதுகுறித்து அக்னிப்புத்திரன் சுட்டியுள்ளதைப் போல் நாம் சற்று ஆறுதல் பெருமூச்சு விடத்தான் வேண்டும்.

அக்னிப்புத்திரன் தன் இரண்டாம் கட்டுரையில் ஓர் நல்ல பண்பை, முன்மாதிரியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்துக்களுக்கு வந்த ஆதரவு மற்றும் பாராட்டு மின்னஞ்சல்களை பட்டியலிடாது, எதிர்க்குரல்களை மட்டுமே பட்டியலிட்டு விளக்கமளித்திருக்கிறார். நமது சட்டமன்றங்களும் பாராளுமன்றங்களும் ஆழமாக சிந்நிக்கவேண்டிய பண்பு இது. திரைப்படத்தின் நல்ல தமிழப் பெயருக்கு எதிர்வாதம் புரியும் பட்டியலில் பலவும், மூல விவாதத்தின் கருவின் பொது நோக்கை திசை திருப்பி சிதைத்துவிட முயலும் உருட்டு புரட்டு வாதங்களே. சில சில்லறை விசயங்களை தூக்கிப் பிடித்து, பொதுத்தன்மையை மறைத்து, தனி மனித விமர்சனங்களை முன்வைத்து, மூலத்தைக் கெடுக்க முயலும் முயற்சியே. இவை போன்றவை இன்று நேற்றல்ல கால காலமாக தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் ஏவப்படும் முனை முறிந்தோடும் அம்புகள்தான்.

எட்டப்பன் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது சரியே என்பார் ஒருவர். காந்தி அகிம்சாவாதி என்று யார் கூறியது?, அவர் தென்னாப்பிரிக்காவில் நான்கு கரப்பான் பூச்சிகளை கொன்றார் என்பார் ஒருவர். பெரியார் ஒன்றாம் வகுப்பு படிக்கையில் என்னோடு வந்து சாமி கும்பிட்டார் என்பார் ஒருவர். அவ்வளவு ஏன்? பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட வெறுப்பில்தான் அவர்களில் ஒரு சிறுவனுக்கு பூணூலிட்டார், அந்த வகையில் ஒரு தாழ்த்தப்பட்டவனை அழித்து விட்டார்தானே? இப்படியாக அவர்களின் விவாதங்கள் இருக்கும். இவற்றில் சிற்சில, சிலகாலம் மத்தாப்பாய் மின்னினாலும் ஒருக்காலும் எவையும் அகல் விளக்காய் ஒளிர்ந்ததில்லை.

உதாரணமாக, கமல் தனது படங்களுக்கு இதுவரை தமிழில்தான் பெயர் வைத்தார். இந்தமுறை மட்டும்தான் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார் என்று ஒரு வாதம். இதனை உணர்ந்துதான் அக்னிப்புத்திரன், சற்றும் சமுதாய கண்ணியமோ, அக்கறையோ இல்லாத சூர்யாவிற்கு வேண்டுகோளை வைக்காமல் கமலுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார். எனவே இவைபோன்ற சொத்தை வாதங்களை புறம்தள்ளி சற்றேனும் வலுவான தோற்றத்தை உருவாக்க முயலும் விவாதங்களுக்கு விடை காண விழைவது தாய்த் தமிழ் மீது நாட்டம் கொண்டோர் அனைவரின் கடமையாகும். அத்தகையவைகளைக் கீழே பட்டியலிட்டு ஒவ்வொன்றாக ஊன்றி நோக்குவோம்.

1) சினிமா வியாபாரம், அதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?
2) தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?
3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்தபட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?
4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்து கொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

1. திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டும்தானா?

திரைப்படத் துறையை வெறும் வியாபாரம் என்று கூறும் எவரும் அதை உயர்த்துவதற்கு மாறாக குறுகிய வட்டத்தில் அடைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் திரைப்படத் துறையின் பன்முகத் தன்மையை உலகமே ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. அதில் வியாபாரம் என்பது ஒரு முக்கிய கூறு அம்மட்டே. திரைப்படத் துறையை கலை என்பாரும், சமூகவியலை விரைவாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகம் என்பாரும், மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக் கூறு என்பாரும், பல்லோருக்கு வாழ்வளிக்கும் பொருளாதார மேம்பாட்டு மையம் என்பாரும், கூறும் அனைத்து கூற்றிலும் பொருளுண்டு.


விவாதத்திற்காக வியாபாரமாகக் கொண்டாலும், வியாபாரம் என்பது விற்பவர் ஒருவரோடு முடிந்து விடும் செயலல்ல. தனக்கு பல உரிமையை வருந்திக் கோரும் விற்பனையாளர், வாங்குபவருக்கு உரிய சில கடமைகளையும் ஆற்ற வேண்டிய கடப்பாடு உடையவராகிறார். உதாரணமாக, நாம் அரிசி வாங்க கடைக்கு செல்கிறோம். கடைக்காரர் நம் கண் முன்பாக பருப்பு மூட்டையில் கற்களைக் கலக்கிறார். பருப்பு அந்த நொடியில் நமக்கு சம்மந்தமில்லாததுதான். எனினும் நாம் வெறுமனே நின்றுவிட முடியுமா? முதலில் அவரிடம் இவ்வாறு கலப்படம் செய்யாதீர்கள் என்கிறோம். அவரும் தவறுணர்ந்து திருத்திக்கொள்ளும் பொழுது அக்கணமே பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விடுகிறது. அவர் உணர்ந்தும் உணராதாராய் முரண்டு பிடிக்கிறார். என் செய்வது? தீர்வு அமைப்பு இருப்பின் அதனிடம் முறையிடுகிறோம். தீர்வாயமே தீரா குழப்பத்தில் உள்ளது. பிறகென்ன செய்வது? அவ்வங்காடிப் பொருளை நுகர்வோர் எவரோ அவர்களிடம் செல்கிறோம். இன்னார் கலப்படம் செய்வதால் அவர் கடைப் பொருளை வாங்காதீர்கள் என்கிறோம். இதில் ஒருவரின் உரிமை மீறல் எங்கு வருகிறது.

திரைப்படம் வெறும் வியாபாரம் மட்டுமல்ல கலையும் கூட, எனவே கலையில் மற்றவர் தலையீடு அதன் ஆக்கத்தை கெடுக்கும் என சிலர் வாதிடுகிறார்கள். இதனை வெறும் வறட்டு வாதமாக வாதிடுவோர் நீங்கி, அப்படி உண்மையாக நம்புபவர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பல தமிழ்த் திரைப்படங்கள் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துக்களை, புதிய முயற்சிகளை முன்னெடுத்து சென்றிருக்கின்றன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அத்தகைய முயற்சிகளுக்கெல்லாம் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள், சமூகவாதிகள் என அனைவரும் பாராட்டி ஒத்துழைத்தார்களா? அல்லது உங்கள் அன்றாடப் பணிகளில் புகுந்து தொல்லை கொடுத்தார்களா? ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் கேலியும் கிண்டலுமாக இகழ்ந்த படங்களைக் கூட அவர்களில் பலருமே பாராட்டிய காலங்கள் உண்டா இல்லையா?

கலை என வாதிடுவோர் எது கலை என்பதில் தெளிவடைய வேண்டும்? சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் அழகிய சிலை ஒன்றை வடித்தான். மக்கள் அனைவரும் சுற்றி நின்று அவனை வெகுவாக பாரட்டினார்கள். ஒருவர் அவன் திறனை வியந்தார். மற்றவர் சிலையின் அழகை புகழ்ந்தார். பிறிதொருவர் அவன் கை உளியை போற்றிப் புகழ்ந்தார். அந்த சிற்பிக்கு தன்னியம் தலை தூக்கியது, தலையில் கனமேறியது. அவன் அந்த சிலையை தன் கையுளி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கத் தலைப்பட்டான். இன்னிலையில் சுற்றியுள்ளோர் இத்செயலை தடுக்க முயல்வதா அல்லது சிலைக்கு செந்தக்காரன்தானே எது வேண்டுவானாலும் செய்து கொள்ளட்டும் என வாழாவிருக்க வேண்டுமா? இதற்குரிய விடையில்


“கலைகள் யாவும் பொதுஉடமை” என்பதும் அதைப் படைப்பவனே கூட அதற்கு “முழு உரிமை” கொண்டாட இயலாது என்னும் கோட்பாடும் பொதிந்திருக்கிறது.

கட்டாயம் ஆங்கில பெயர்தான் வேண்டும் என்று எண்ணிய சூர்யாவின் கருத்திற்கு, குறைந்த பட்சம் அதே ஆங்கிலத்தில் கண்ணியமிக்க “குட்ஃபிரண்ட்” என்றோ, “டியர் ஃபிரண்ட்” என்றோ தோன்றாதது ஏன்? இதுதான் நீங்கள் வற்புறுத்த விழையும் கலையா? இதுதான் கலை என்றால், அந்தக் கலை தேவைதானா? இதனை விவாதித்த என் நண்பர் ஒருவர்,


மிக மிக கீழ்த்தரமான ஒரு நான்கெழுத்து ஆங்கிலச் சொல்லைக் கூறி இந்த தலைப்பில் நான் படம் எடுக்க முனைந்தாலும் நமது முதல்வரின் ஆதரவு கிடைக்குமா என உணர்ச்சியோடு வினா எழுப்பினார்.

சட்டத்தின் மீது அக்கறையைக் காட்டிய நம் முதல்வர், இப்படி கீழ்தர பெயர் சூட்ட முயலும் குண கேடர்களுக்கும், ஒர் எச்சரிக்கையோ அல்லது குறைந்த பட்சம் சிறு அறிவுரையோ வழங்கியிருப்பாரானால் அது பல நல்ல நிகழ்வுகளுக்கும் திருப்பங்களுக்கும் வழி வகுத்திருக்கும். திரைத்துறையில் உள்ள நல்ல சிந்தனையாளர்கள் எண்ணித் தெளிய வேண்டும்.

2. தமிழில் பெயர் வைத்து விட்டால் மட்டும் தமிழ் மொழி வளர்ந்து விடுமா?

நிச்சயமாக வளர்ந்து விடாதுதான். தமிழ் பாதுகாப்பு இயக்கப் பெருமக்கள் எவரேனும் திரைப்படத் துறை மட்டுமே தங்கள் இலக்கு என கூறினார்களா? இல்லையே. “ரோமாபுரி ஒரே நாளில் கட்டிமுடித்து”விடக் கூடியதல்ல. எதனில் ஒன்றிலாவது தொடங்கித்தான் ஆக வேண்டும். அந்த வகையில் சரியாக சொல்வதானால், உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியத் துறையைத்தான் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, பொங்கு தமிழ் வளர்ச்சி பயிலகம், தமிழ் இசை வளர்க்கும் முயற்சி என பல திட்டங்களையும் அவர்கள் கூறிய வண்ணம்தான் உள்ளார்கள். எவ்வாறாயினும் தனிப்பட்டவர்களோ அல்லது ஒரு சில அமைப்புகளோ மட்டும் நம் அன்னை தமிழ் வளர்ச்சியை முழுமைப்படுத்தி விட இயலாது. இன்று அரசு மட்டத்தில் பல்வேறு மொழி ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவைகள் மட்டுமே போதுமானது அல்ல. உலகந் தழுவிய சர்வகலாச்சாலைகள், மொழியியல் அமைப்புகள் தமிழ் ஆய்வில், வளர்ச்சியில் அக்கறைக்காட்ட ஆர்வமுடனிருக்கின்றன. நமக்கு நாமே உட்பகை வளர்க்கும் போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவைகளின் வளங்களை நம் தமிழுக்கு பயன்படுத்திக் கொள்ள இயலும். ஒன்றுக்கும் உதவாத வாதங்களில் நம் சக்திகளை இழந்து விட முனைவது புத்திசாலித்தனமாகாது. அவரவர் தமிழ் வளர்ச்சிக்கு தம்மிடம் உள்ள திட்டங்கள் எண்ணங்கள் எவையிருப்பினும் அதை பலருடன் பகிர்ந்து உதவ வேண்டுமேயன்றி இவைபோல் உதவா விவாதம் ஒரு நாளும் எவைக்கும் உதவா.

3) ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலச் சொற்கள் கலக்காமல்தான் பேச முடியுமா?

இங்கு ஒரு தமிழன் ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியுமா என வினா எழுப்புகிறான். ஆனால் உலகமோ இனி தமிழ் இன்றி வாழ முடியாது என முடிவெடுக்கிறது. வியப்பாக உள்ளதா? ஆனால் உண்மை. கணினி துறையில் இதுகாறும் தமிழ் எழுத்துரு(யூனிகோடு)வுக்கெனத் தனியிடம் அளிக்காத சர்வதேச தர நிர்ணய அமைப்பு இன்று அதனை வழங்கி தமிழுக்கு சிம்மாசனம் அளித்துப் போற்றுகிறது. காரணம் என்ன? ரோஜா படுக்கைகள் தானே மலரா. கணினித் துறையின் இணையத் தள உள்ளீடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில் நம் தமிழ்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே கணினித் துறையில் தமிழ் மொழியின் வளர்ச்சி மிக உன்னதமாக இருக்கும் என மொழி ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். இதிலெல்லாம் பெருமை கொள்ள வேண்டிய தமிழன் தன் பலம் அறியாதவனாய் வீண் வினா எழுப்பித் திரிகிறான்.

ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேச முடியுமா? இந்த மயக்க நிலை இன்று பரவலாக பலரிடம் காணப்படுகிறது. தனித் தமிழில் அல்லது தூய தமிழில் உரையாட இயலவில்லை என்பது அவரவர் சூழலையும், மொழித் திறனையும் பொறுத்தது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். நம்மில் பலர் பிற மொழி கலந்து உரையாடுவது, தமிழ் மொழியில் சொற்கள் வளம் இல்லாமையால் அல்ல தங்களால் இயலாமையால்தான். இதில் இலங்கை தமிழ் சோதரர்கள் நம்மை விட பன் மடங்கு உயர்ந்து நிற்கிறார்கள் என்பது நான் கண்ட அனுபவ உண்மை. அவர்கள் அன்றாடம் புதுப் புதுச் சொற்களை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள்.

அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கை அன்றைய காலத்தின் கட்டாயமாக இருந்தது. திரு வீரபாண்டியனாரின் மேற்கூறிய கட்டுரை, விளங்காதார் விளங்க ஓர் அரிய கண் திறப்பு. உறங்கிகள் இனியேனும் விழிக்கட்டும். ஒன்று நிச்சயம் இன்றும் நாம் ஆங்கில மொழிக்கு எதிரிகள் இல்லை. நம் மொழியின் வளர்ச்சிக்காக முயல்வதுவே நம் பெரு விருப்பு. மேலும் தெளிவு வேண்டுவோர், தென்செய்தி இதழில் பிரசுரமாகி உள்ள திரு ஜீவா அவர்களின் “மொழி அழிந்தால் இனம் அழியும்” என்ற கட்டுரையை4 வாசித்து தெளிய வேண்டுகிறேன்.

4) தமிழ் சினிமா பார்த்து விட்டுத்தான் தமிழன் நாகரிகம் அடைந்திருக்கிறான். இல்லாவிட்டால் பேண்ட் சட்டை அணிந்துகொள்ளத் தெரியாமல், கோவணம் கட்டிக் கொண்டு அடிமையாகத் திரிவான்.

போராயிரம் கண்டும் பொன்றா புகழ் மிகு தமிழை, தமிழனின் தொன்மை நாகரிகத்தை, பண்பாட்டை, தன்மானத்தை இதனிலும் கீழாய் இகழ யாராலும் இயலாது. இந்த கருத்துக்கு சொந்தகாரன் ஒன்றும் அறியா அரைவேக்காட்டாளனாய் இருக்கவேண்டும் அல்லது அக்னிப்புத்திரன் கூறியதைப் போல் “அசல்வித்தாய் இல்லாதவனாய்” இருக்க வேண்டும். இவனொத்தார்க்கு, கால எல்லை கடந்த தமிழின் இலக்கிய, இலக்கண, பண்பாட்டு, நாகரிக வரலாற்று சான்றுகளை காட்ட முனைவது வெறும் கால விரயமே. “கழுதை அறியுமோ கற்பூர வாசம்” என ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள். இவர்கள் வாதத்திற்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திரு பழ. நெடுமாறன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்காணலில் ஓர் செய்தியைச் சொன்னார். ஃபிரெஞ் மொழிக் கழகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தித் தாளில் இரண்டு ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தியமைக்காக அச் செய்தி நிறுவனத்தை மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்ததாக கூறினார். இங்கு “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என எவன் வேண்டுமானாலும் தமிழை, தமிழனை இகழ்ந்து பேசிவிட முடியும். அதற்கும் ஆலவட்டம் போட ஓர் கூட்டம் திரியும். என்ன நிலையிது?

திரைத்துறைசார் நெறியாளர்கள் சிந்தனைக்கு..

ஒட்டு மொத்த திரைத் துறையை வெறுக்க அல்லது ஒதுக்க யாரும் முனையவுமில்லை. அது தேவையுமில்லை. இன்று தோன்றியுள்ள மோதல் நிலை தற்காலிகமாகமானதே. தமிழக திரைத் துறையின் வரலாறு அறிந்தவர்கள் இதில் தெளிவாகவே உள்ளார்கள். ஆங்கிலேயர் கால அடக்குமுறை தளமாக அன்றைய தணிக்கை வாரியம் இயங்கிய காலத்திலேயே “தியாகபூமி”, “மாத்ருபூமி” போன்ற நாட்டுப்பற்று மிக்க படங்களை எடுத்தும், சுதந்திரத்திற்குப் பின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பல் ஓட்டிய தமிழன்” போன்ற உயரிய காவியங்கனை படமாக்கியும் சமுதாயத்தின்பால் தனக்குள்ள அக்கரையைத் திரைத்துறை நிருபித்து காட்டியிருக்கிறது.


அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு துறையின் அங்கமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை இன்றைய திரைத்துறை இளைய சமூகத்தினர் உணர்வார்களேயானால் திரைத்துறையில் பண்பாட்டுச் சிதைவுகள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

தமிழ்மெழியின் பாதுகாப்பு விழையும் யாரும், புதுமையே கூடாது என வாதிடும் வெறும் வறட்டு பழைமைவாதிகள் அல்ல. புதுமை எனும் பெயரால் அவலங்கள் அரங்கேறக் கூடாது என்பதில்தான் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. பல்வேறு காரணங்களால் நலிந்து வரும் திரைத்துறை, இதன் வாயிலாக மேலும் பாதிப்புக்கு வழி வகுத்துக் கொள்ளாது, சுமூகமான தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

அன்னிய நாட்டில் வாழும் தமிழர்கள் திரைத்துறையினரை விரும்பி அழைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்களே எதனால்? தாங்கள் வாழ்க்கை சூழுலில் தொலைத்து விட்ட தமிழர் நடை, உடை, பாவனை முதலியவற்றை உங்களின் வாயிலாக பார்த்து மகிழத்தான். நீங்கள் முழுமையாக மேலை நாகரீகத்தில் மூழ்கி விடுவீர்களானால், நாளடைவில் அவர்களிடமிருந்தும் அன்னியப்பட்டு போகும் அபாயமும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஜப்பானில் திரையிடப்பட்ட ரஜினியின் படங்களை ஆங்கிலப் பெயருக்கு மாற்றினால்தான் திரையிடுவோம் என ஜப்பான் மக்கள் ஆணையிடவில்லை. திரைத்துறை சற்று முயன்றால், சுண்டியிழுக்கும் தமிழ்ப் பெயர்கள் ஆயிரமாயிரமாய் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி உருவாக்கப்படும் சொற்றொடர்கள் இலக்கியத் தொடர்களாய் அனைவரின் பாராட்டுகளையும் தாய்த் தமிழ் நாட்டுக்கு சீதனமாய் வழங்கும் என்பதிலும் ஐய்யமில்லை.


இவ்விவாதத்தின் பின்னால் இயக்குநர் சேரன் அவர்கள் தன் படத்தின் பெயரை 'டூரிங் டாக்கீஸ்' என்பதை தமிழுக்கு மாற்றியதின் வாயிலாக பாராட்டுதலுக்குரிய சிறந்த முன்மாதிரியை செய்திருக்கிறார். இனியும் கால விரயமின்றி, பல்வேறு திரைத்துறை அமைப்புகளை சார்ந்த தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் சுமூக தீர்வுக்கான முன்னெடுப்பை தொடங்க வேண்டும். இதுவே அனைவர்க்கும் நலம் பயக்கும் உயரிய வழியாகும்.

(தட்ஸ்தமிழ் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டது)

Sunday, February 27, 2005

சாட்டைகள் மேலும் சொடுக்கப்படட்டும்!

- மன்னை மாதேவன்

பேருந்து எரிப்பு வழக்கில் நீதிபதி கனகராஜ் சொடுக்கிய சாட்டை அரசையும், காவல்துறையையும், தொடர்புடைய குற்றவாளிகளையும் எரிச்சலடைய வைத்ததோ என்னவோ, வேதனையில் துடித்த என் எழுதுகோலுக்கு சற்று ஆறுதல் ஒத்தடம் கொடுத்திருக்கிறது. ஆம் “தொலைந்தது கோப்பா, நிர்வாக கட்டுக்கோப்பா?” என்ற என் கட்டுரையில் என் ஆதங்கத்தை கொட்டியிருந்தேன். “பயிர் மேயும் வேலிகள் நீதித்துறையிலுமா?” என்ற என் கட்டுரையும் நீதித்துறையையே தொட்டுநின்றது.

இந்நிலையில், இப் பேருந்து எரிப்பு வழக்கில் இதுவரை வழங்கப்பட்டு வரும் இடைநிலைத் தீர்ப்புகள், நீதித்துறையின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழக்க அவசியமில்லை என்னும் செய்தியை விளம்பிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக நம் போன்ற மக்கள் மீதும் ஒரு குறை கூறப்படுவதுண்டு. எந்த வழக்கிலும் ஆரம்பத்தில் உணர்ச்சி வயப்பட்டு அதிக அக்கரைக் காட்டுவது, பின்னர் கால ஓட்டத்தில் அதனை மறந்து அடுத்த சமீபத்திய வழக்கில் ஈடுபாட்டை இடமாற்றிக் கொள்வது என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் அதிகபட்ச உண்மை இருக்கிறது. நகர்வாலா வழக்கில் தொடங்கி ஷர்ஸத்மேதா வழக்கு ஈறாக சமீபத்திய பல வழக்குகளிலும் நம் அணுகுமுறை இதுவாகத்தான் இருந்து வருகிறது. இது சில சமயங்களில் குற்றவாளிகள் பயனடைய வாய்ப்பளித்து விடுகிறது. எனவே கணினியில் உலவும் நாமாவது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இவ் வழக்கை தொடர்ந்து கண்காணித்து பிறருக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

Wednesday, February 23, 2005

வந்து கடைத் திறவுங்கள்

- மன்னை மாதேவன்

வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!
உண்மை மதமுரைக்கும் உயர்மாட்சி தெளிந்திலதால்
எல்லையின்றி ஏமாற, ஏகம்பேர் காத்திருப்போம்.
“பகல்நேர பக்தி”- இவ் வேடமிட்டு விடம் விதைக்க,
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

தூய பக்திசெய்து, துயர்நீங்கி இறையடைய - இயந்திர
வாழ்வெமக்கு! இயலவில்லை, பொழுதுமில்லை.
காவி உடையணிந்த கறைபடிந்த “இடைத்தரகர்”
ஆயிரமாய் தேவையிங்கே – அயராது
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

மற்றிங்கே பெருளீட்ட, மா முதல்கள் தேவையுற,
ஒற்றைச் சல்லியின்றி, உதட்டளவில் பக்திசெல்லி
ஊரை அடித்தும் உலை வாயில் இடுதற்கு - இம் மடத்
தொழிலன்றி மற்றெவைதான்? நீர் செய்ய?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எங்கள் தலைவரெலாம், உம்மிடத்தில் ஓடிவந்து,
மகிழ்ந்து, நெகிழ்ந்து, மண்டியிட்டுத் தெண்டனிட்டு – உமது
கடைச் சரக்கு, கடைய ரெமக் கிடைப்பதற்கு,
நல்ல விளம்பரத்தை நல்கிடுவர் இலவசமாய்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

“முறறும் துறப்பது” அக்காலம், “முத்தமளிப்பது” இக்காலம்.
கொஞ்சுமொழி வஞ்சியர்கள் மஞ்சமதில் கொட்டுமிழ் நீர்,
காட்டிக் கொடுக்காமல் உம் காவியுடை தான் மறைக்கும.
கட்டில் சுகமளிக்கும் உம் காட்டில் மழை பொழியும்!
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

கள்ள பணமதிலே கடவுளர்க்கும் ஓர் பங்கை,
அள்ளி வழங்கிடவே அழுக்கான ஓர் கூட்டம்.
கட்டளை இடு தலைவா! “அறக் கட்டளைகள்” அமைத்திங்கு,
வட்டியுடன் முதலடித்து, வகையாய் நாம் வாழ்ந்திடலாம்.
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

எனக்கு தெரிந்தொருவன், ஏழு கொலை செய்தனவன்.
நல்ல தொழிலாளி, நாணயஸ்தன் - வந்துமக்கு
துணையிருப்பன், வகையாய் எதிரழிப்பன் - உம்
வழியில் குறுக்கிடத்தான் இனி எவர் துணிவர்?
வாருங்கள் அய்யன்மீர்! வந்து கடைத் திறவுங்கள்!

அய்யகோ!
“இன்னது செய்கின்றோம்” – என்றரிந்தே செய்கின்றார்.
இவரிட மிருந்துநல் லிறையமுதை காப்பதற்கு
வந்துதிப்போர் எவருளரோ? – என
நொந்தே எழுதிவிட்டேன்.

உண்மை பக்திமார் உளமாற மன்னிப்பீர்!

Tuesday, February 22, 2005

தொலைந்தது கோப்பா? நிர்வாகக் கட்டுக்கோப்பா?

- மன்னை மாதேவன்

நான் இங்கு எழுத விழைவது அரசியல் விமர்சனமா? இல்லை. இன்றைய அரசியல் விமர்சனங்களே பலப்பல விமர்சனங்களுக்கு தளம் அமைத்து கொடுத்து விடுகிறது. காரணம் ஒரு அரசியல் கட்சியை சார்ந்து நின்று, பிறிதொன்றை விமர்சித்து, அதன் வழி உருவாக்கப்படும் கருத்தோட்டம், சமுதாயத்திற்கு பயன்படுவதைக் காட்டிலும், பங்காளி கட்சிகளுக்கான இலவச உதவியாக மாறிவிடுகிறது. கட்சிகள் விமர்சனங்களைக் கொண்டு தன்னை சீர்படுத்திக்கொள்ளும் காலங்கள் மலையேறிவிட்டன. விமர்சகர் தான் சார்ந்த கட்சி, இதே தவறை செய்யாது என உறுதியாய் நம்பிக்கை கொள்ள இயலாத அளவு அரசியல் தளம் தரம் தாழ்ந்து விட்டது. இந்த தத்துவங்களால் அரசியல் விமர்சனங்களே கூடாது என்பதல்ல என் முடிபு, மாறாக விமர்சிக்கும் தகுதியை விமர்சனங்களும் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். எனது இந்த விமர்சனம் மனித உணர்வுகள் சம்மந்தப்பட்டது.

தன் பிள்ளைகளை கல்விச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு, நீண்ட நெடிய கனவுகளோடு உலவும் சாதாரண பெற்றோர்கள் இதயத்தில் அக்கினியை எரிமலையாய் கொட்டும் சம்பவங்கள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. இதனை கண்டிக்காத எழுதுகோல்
பிறவற்றை எழுதி தன் பிறவிப் பயனை அடைந்துவிட போவதில்லை என்ற வேதனையில்தான் இதனை எழுதுகிறேன்.

நம் அரசியல் இழிவின் உச்ச கட்ட அவலம் சில ஆண்டின் முன் நடந்தேரியதை நாடு மறந்திருக்காது. அதன் மிச்ச சொச்சத்தையும் மீண்டும் அரங்கேற்ற துடிக்கும் நிலை எண்ணி நெஞ்சம் கொதிக்கிறது. அன்று அரசியல், அப்பாவியாய் கல்லூரியில் பயின்றுவந்த இன்னுயிர்ச் செல்வங்கள் மூவரை உயிரோடு பேருந்தில் வைத்து கொளுத்தி தனது அகோர பசியை தீர்த்துக்கொண்டது. அவர்கள் செய்த பாவம் என்ன? அற்ப பதர்கள் வாழும் அதே பூமியில் பிறந்ததையன்றி வேறு என்ன தவறை செய்துவிட்டார்கள். இதை செய்தவர்கள் அரசியல்வாதிகளா இல்லை கேடு கெட்ட தீவிரவாதிகளா? இரண்டுமில்லை நாற்றமெடுத்த வாந்திகள். அன்றுமுதல் தாழ்ந்தே இருக்க வேண்டிய நம் அரசியல்வாதிகளில், "அந்த நாயினும் கீழோன் நானில்லை” என நெஞ்சுயர்த்தி எவர் தனக்குத்தானே கூறிக்கொள்ள முடிந்தவர்களோ அவர்களை மட்டும் உண்மை அரசியலாளர்களாக உயர்ந்த அரசியலாளர்களாக நாம் உளமாற ஏற்போமாக. சரி இது நடந்த கொடுமைக்கு நீதியாகி விடுமா? ஆகா அதற்குத்தான் வழக்கு வந்ததே!

நீதி தேவதையின் சிரசில் மற்றுமொரு கிரீடத்தை ஏற்ற இந்த வழக்கும் தேவதையின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. அன்று நம்மை ஆண்ட ஆங்கிலேயருக்கு “பிரித்தாளும் சூழ்ச்சி” இன்று நம்மை ஆள்வோருக்கு “இயன்றவரை தாமதப்படுத்து சூழ்ச்சி”. வழக்குகளின் தீர்வுக்கான காலத்தை நிர்ணயிக்க எந்த காலதேவனை அழைப்பது? வழக்குகளையே வழக்காக்கி விடும் அதி நவீன மனிதர்களல்லவா நாம். மருத்துவக் கல்வி மாணவன் நாவுக்கரசனை நினைவிருக்கிறதா? இங்கு நினைவு படுத்தியமைக்காக அந்த அமைதி பிள்ளையின் பெற்றோரின் மன்னிப்பை கோருகிறேன்.

தருமபுரியில் தீயிடப்பட்ட மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை திரு வீராசாமி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடந்த முறைகளை பற்றியோ அல்லது ஏற்பட்ட கால தாமதம் குறித்தோ (அல்ல அல்ல ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் குறித்தோ) நான் எழுத எண்ணவில்லை. காரணம் இவைகளெல்லாம் வழக்குகளின் அனுமதிக்கபட்ட மரபுகளாகிவிட்டன. ஆனால் அதையும் தாண்டி இந்த வழக்கு அடிப்படையையே அசைத்து விட்டது. அரசின் பாதுகாப்பில், பொறுப்பில் இருந்த கோப்பு மாயமாய் மந்திரமாய் மறைந்தே விட்டதாம். பாவிகளே உங்கள் உண்மை நிறம்தான் என்ன? நீங்கள் கடமையே கண்ணாகிய அதிகாரிகளாக, அதிகார இமயத்தையே கையில் தாங்கிடும் அரசியல்வாதியாக, வேறு எவராகத்தான் இருந்துவிட்டு போங்களேன். அடிப்படையில் நீங்களும் மனிதரல்லவா? இந்த வழக்கின் கோப்பு தொலைந்து விட்டது என்று கூறிய அந்த ஒரு நொடியை எண்ணிப்பாருங்கள். கருகிய அந்த பிஞ்சுகளின் பெற்றாரின், உற்றார் உறவினர்களின் உயிர் துடிப்பைக்கூட உணர முடியாத இதயமற்ற இயந்திரங்களாக உங்களால் எப்படி மாறிவிட முடிகிறது?

நீங்கள் தொலைந்துவிட்டது என்று கூறியது வழக்குக்கான கோப்பையா? அல்லது மனித நாகரீகத்தின் முகவரியையே தொலைத்து விட்டடீர்களா? சற்று உங்கள் அதிகார தோலை உரித்து உதறிவிட்டு இந்த காட்சியை உங்கள் மனத்திரையில் இடுங்கள். எதிலும் தான் சம்மந்தபடாமல் மூன்றாமவராக பாவித்து காணுகின்றபொழுதுதான் பல பேருண்மைகளின் நிதர்சன தரிசனம் கிடைக்கும். கோப்பு தொலைந்தது என்று நாகூசாமல் பொய் கூறியவர்களே. உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சாம்ராஜ்யங்கள் முழமையையும் விற்று அதில் நீங்கள் சுய ஜீவனம் செய்யும்பொழுது, அதற்கான ஆவணங்களை தெலைத்துவிட்டு அப்படி தொலைப்பதுகூட உங்கள் உரிமையாக காட்டுங்கள். கவலையில்லை. அதில் முடக்கப்படுவது வெறும் பொருளியல் தத்துவம்தான். இவைகள் ஊனோடும் உயிரோடும் உறவானவை. நீங்கள் தொலைத்துவிட்டதாக கூறிய அந்த கோப்புகளில் இருந்தது வெறும் காகிதங்கள் இல்லை துடித்துடித்து இறந்த விலைமதிக்க முடியாத அந்த மூன்று உயிர்கள்.

நான் சற்று உணர்ச்சிகளுக்கு ஓய்வு கெடுத்துவிட்டு, தார்மீக நெறிகளுக்கும் தாழிட்டு விடுகிறேன். சம்மந்தப்பட்ட நீங்கள் யாராயினும், உங்களை விரல் நீட்டியே கேட்கிறேன். இப்பொழுதேனும் கூறுங்கள் உங்கள் கூற்று சரியனதுதானா? இப்படிப்பட்ட மனித பரிமாணங்கள் தொடர்புடைய ஒரு வழக்கின் ஆவணம் தொலைந்துவிட்டது என இந்த கணினியின் யுகத்தில் கூறி, நீதிமன்றத்தின் சாடலுக்கு பின் தொலைந்த கோப்புகள் வானிலிருந்து தேவதைகளால் பூமிக்கு கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றபொழுது, குடிமக்களாகிய எங்களைப்பற்றிய உங்கள் கணிப்புதான் என்ன? மன்னர்கள் நீங்கள் “வெள்ளை காக்கை” என கூறுமுன் “மல்லாக்க இரண்டு குப்புற இரண்டு” என நாங்கள் கூறினால் நல்ல குடிபடைகள் ஆவோமா? கூறுங்கள் அய்யா நாங்கள் திருத்திக்கொள்கிறோம் அல்லது திருந்திவிடுகிறோம். “நிர்வாகத்திறன்” இந்த சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமாவது பாவப்பட்ட குடிபடைகள் எங்களுக்கு விளக்குவீர்களா?

இறுதியாக ஒன்றை மட்டும் உங்கள் நிரந்தர நினைவுக்கு விடுகிறேன். நீங்கள் அனுபவிக்கும் எந்த வானளாவிய கோட்டைகளும் கொத்தளங்களும் மக்களுக்காக கட்டப்பட்டவை மட்டுமல்ல, மக்களாளேயே கட்டப்பட்டது. இந்த சாம்ராஜ்யங்கள் சரியும்போது எச்சங்களாக மானுடம் மட்டுமே நிற்கின்றன. மனிதம் மட்டும்தான் நிரந்தரம் என்பதைதான் சரித்திரங்கள் பறைசாற்றி நிற்கின்றன என்பதை இனியேனும் உணரமுற்படுங்கள்.

Monday, February 21, 2005

பயிர் மேயும் வேலிகள் - நீதித்துறையிலுமா?

- மன்னை மாதேவன்

ஓர் வேதனைச் செய்தி. தர்மபுரி முதன்மைச் சார்பு நீதிமன்றத் துணை நீதிபதி, அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன் “மூவர் கூட்டணி” அமைத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்ததால் “பணி இடை நீக்கம்” செய்யப்பட்டுள்ளார். தர்மபுரியில் வாழ்ந்த இவர் தர்மம் புரியாததால், தர்மம் இவருக்கு சிலவற்றைப் புரிய வைத்திருக்கிறது. புரையோடும் ஊழல் வேர்கள் புதிதாய்ப் புக எந்தத் துறைதான் இனி எஞ்சியிருக்கிறது எனும் வேதனை வினா நம் இதயத்தில் “சுனாமி” ஆகிறது. இதை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்று கூற இயலவில்லை. எங்ஙனம் இயலும்? தூய்மையும், நேர்மையும் கோலோச்ச வேண்டிய நீதித்துறையில், “வேலிகள் பயிர் மேயும்” வேதனையின், தொடக்கமா இது? நிச்சயமாக இல்லை. எங்கோ எவரோ எதிலோ தொடங்கிய தொடர்காட்சியில் ஒரு அங்கம்தான் இது. இருட்டில் அரங்கேறும் இதுபோன்ற காட்சிகள் மீது இப்பொழுதுதான் சற்று வெளிச்சக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

தனிமனிதர்களை விமர்சிக்கும் போக்கை நாம் தரம்கெட்டதாகவே கொள்ளலாம், அந்த தனிமனிதர்கள் செயல் சமுதாய சீர்கேடாய்த் தலைதூக்காத வரை. நீதிகாக்க, தமிழன் இதுவரை தந்திருக்கும் விலை எத்தகையது என்பது என் எண்ணத்தில் திரையாடுவதால்தான், இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன். “சீசரின் மனைவி சந்தேகங்களுக்கு” அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்னும் நெறிமுறை மற்றெந்த துறையினருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நீதித்துறைக்குக் கட்டாயம் பொருந்தியாக வேண்டும்.

இந்திய நாட்டின் அரசியல் சாசனக் கோட்பாட்டின்படி, நீதித்துறை நாட்டைத் தாங்கி நிற்கிற நான்கு தூண்களில் தலையாயது. ஏனைய தூண்களான சட்டமியற்றுத்துறை, நிர்வாகத்துறை, பத்திரிக்கைத்துறை முதலிய துறைகளில் நிலவும் தூய்மை பற்றி நாம் நன்கறிவோம். இந்தத் துறைகளில் அவ்வப்போது ஏற்படும், நாட்டையும் மக்களையும் பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வுகாண நாம் தட்டுகின்ற கதவுகள் நீதித்துறையின் கதவுகள்தான். நாடு சில வேளைகளில் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகளில் சிக்கித் தவிக்கும்போது, சிக்கல் நீங்க நாம் முழுதும் நம்பியிருப்பது நீதித்துறையை மட்டுமே. பணமும், பலமும் படைத்த கழுகுகளின் பிடியிலிருந்து வறியோரையும், எளியோரையும் காக்கும் கடமை இந் நீதித்துறையையே சார்ந்து நிற்கிறது.

இந்நிலையில் நீதித்துறையிலும் புரையோடத் துவங்கும் இத்தகைய புண்களுக்கு, வெறும் புனுகு தடவித் தன்னிறைவு அடையப் போகிறோமா அல்லது இதன் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறியும் வேலையைச் செய்ய முயலப் போகிறோமா? இந்த வினாவிற்கு விரைவாக விடையிறுப்பதற்கு முன்பாக தமிழர்களின் பண்டைய வாழ்வியலோடும், கலை, கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும் இரண்டறக் கலந்து நின்ற நீதியின்பால் சற்று கண்ணோட்டம் செலுத்துவது, சிதிலமடையத் தொடங்கும் சீர்க்கேட்டின் பரிமாணத்தை நன்குணர வாய்ப்பாகும் என எண்ணுகிறேன்.

தமிழனும் நீதியும்

தனது ஒரே மகன் வீதிவிடங்கன் வீதி உலா சென்றபோது, துள்ளி விளையாடிய பசுங்கன்றொன்றைப் பிழையாக தேர்க்காலிலிட, கன்றிழந்த தாய்ப் பசு, ஆராய்ச்சி மணி கொட்டி முறையிட, தமிழ் மன்னன் மனுநீதி அளித்த மனு நீதியின் விலை? தன் அரசின் ஒரே வாரிசான மகனின் உயிர். வேடன் ஒருவன் வேந்தனிடம் விண்ணப்பித்தான், அந்தப் புறா தன் தொழில்முறை உரிமை என்று. வேந்தனுக்கோ புறாவிற்கு அபயமும், வேடனுக்கு நீதியும் ஒருசேர வழங்கவேண்டிய நிலை. அதற்காக அவன் கொடுத்த விலை? அப்புறாவின் எடைக்கு ஈடான தன் தொடை ஊன். சிபி மன்னனின் இச்செயலைக் கருணையாய் பார்ப்போரும், அறமாய் பார்ப்போரும் உண்டு. அதனையே நீதியாய் பார்த்தலும் நன்று.

கருமான் கூற்றொற்றி, பிழைபடக் கொலையுண்ட கோவலனுக்காக வழக்குரைத்த கண்ணகிக்கு பாண்டியனின் நீதிமன்றில் கிடைத்த பரிசு? பாண்டியனின் உயிரோடு, “ஈருடல் ஓருயிராய்” விளங்கிய அவன் பத்தினியின் உயிரும். நீதியுரை வழங்குகையில் தனது இள அகவை ஓர் தடையாய் இருக்கலாகாதே என்ற ஏக்கத்தில் முதியோனாய் வேடமிட்டு நீதிகாத்த கரிகால் பெருவளத்தான் நீதி- தமிழ் நீதி. இந்த நீதி உரைக்கும் முத்தொள்ளாயிரத்தை முன்னூறு முறை கற்றாலும் கல்லாதார் தமிழுலகில் நில்லாத நாள் எந்நாள்? இவை மட்டுமா தமிழனின் நீதி. அவன் நீதி நீள்கடலில் இவையெல்லாம் ஒருசில நீர்த்துளிகள் மட்டுமே.

உலகில் உள்ள ஏனைய இனங்கள் எவற்றிற்கேனும், தமிழனைப்போல் மறத்திலும் அறம் வளர்த்து நீதி காத்த பெருமை உண்டா என்பது ஆழ்ந்த ஆய்வுக்குரிய வினா. தமிழ் மன்னர்களுக்கிடையில், பலகாலும் நீள்பகை நிலவியதுண்டு, எனினும் போர் முன்பாய், பிறநாட்டின் தூதுவனாய் வந்தோனை ஓர் துரும்பும் துன்புறுத்தா நீதி எவன் கற்றுத்தந்த நீதி? போரில் புறமுதுகிட்டோனை தாக்கா தகுநெறி, கைவாள் இழந்தவன் தனக்கு வாள் ஒன்றீந்து பின் அவனோடு பொருதும் மாண்பு. இந்தச் சரித்திரம் வேண்டுமானால் தமிழறியாத் தகைமையற்றோருக்குத் தெரியாமல் போகலாம். ஆனால் நம் சொந்த மண்ணில் வாழும் தமிழருக்கு அதிலும் நீதியின் நெறிநிற்க வேண்டியோருக்கு புரியாமல் போவதில் பெருமை என்ன கொள்ள முடியும்.

புதியதோர் நீதி செய்வோம்!

நீதி தேவதையின் கண்கள் கருந்துணியால் கட்டப்பட்டிருப்பது, அவள் வழக்காடுவோரின் நிலை நோக்காது, யாவர்க்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். இது தாங்கள் அணி அமைத்து, நீதி அழித்து, நிதி குவித்துக்கொள்ளும் வசதிக்காகத்தான் என்று எண்ணுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து வேண்டுமானால் சிலகாலம் தப்பிக்கலாம், தர்மத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க இயலாது.

நண்பர் ஒருவருடன் மேற்கூறிய செய்தியை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் கூறினார் இது ஊழலுக்கு மூன்றாம் தலைமுறையென்று. ஊழலுக்கும் தலைமுறையா? விளங்கவில்லையே என்றபோது அவர் விவரித்தார். ஊழல் என்றால் என்னவென்றே அறியாதார் முதலாம் தலைமுறை. வாதி அல்லது பிரதிவாதியிடம் பெறவேண்டியதை பெற்றுக் கொண்டு அப்படி பெறப்பட்டவர்க்கு சார்பாவது இரண்டாம் தலைமுறை. இருவரிடமுமே இயன்றதை கறந்து, இறுதியில் ஓர்புறம் சாய்தல் இது மூன்றாம் தலைமுறை என்றார். உங்கள் கூற்றுப்படியாயின் இது நான்காம் தலைமுறை என்றேன். ஆம் வாதி பிரதிவாதி இருவருடன் நில்லாது தொடர்புடைய அனைவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு நீதி பரிபாலனத்தையே ஏதோ நகைச்சுவை நாடகம் போல் கேலிக்குரியதாக்கி அரங்கேற்றும் அவலம் நான்காம் தரமன்றி வேறென்ன? இந்த நான்காம் தலைமுறை பரிணமித்து வருவது ஏதோ ஒரு சில துறைகளில் மட்டுமல்ல. இந்தப் புற்றுநோய் எல்லா துறைகளையும் இலக்காக்கி வரும் இந்தத் தருணத்தில், விழிப்புடன் செயல்படுவது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை ஆய்வுக்காக எடுத்துக்கொன்டால், இந்தத் தீர்ப்புக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று சட்ட முகம். இதில் சட்ட வாயிலாக வழங்கப்பட்டுள்ள “பணி இடை நீக்கம்” மிகக் குறைவானதாகவே கொள்ளப்படவேண்டும். இன்னும் என்னவெல்லாம் வழங்கி இருக்கலாம் என்பது குறித்து நண்பர் வேடிக்கையாகக் கூறியவை கீழே கெடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட தண்டனை பெற்றவர்கள், “ஊசிமுனை நுழையும் ஒட்டகமாய்” சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து ஒருவேளை தப்பித்துக்கொள்ளலாம், ஆனால் தீர்ப்பின் இரண்டாவது முகமான “சமூக தீர்ப்பு” என்ற வலுவான தீர்ப்பின் பிடியிலிருந்து தப்பிக்க எந்தக் கொம்பனாலும் இயலாது. இந்த சமுக தீர்ப்பை வழங்கியது யார்? வேறு யார்? வாழ்வு நெறி வழங்கிய வள்ளுவனன்றி வேறு யார்?

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் - 116

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு - 467


ஊழல் புரிபவர்கள், வள்ளுவனின் நல்வாழ்வு நெறிக்காண இவ்விரு பாடல்களையும் உள்ளம் கொள்ளாது, உதட்டளவில் உச்சரித்ததின் பயன்தான் சமுதாயம் அவர்களுக்கு வழங்கும் இந்தச் சமுதாய தீர்ப்பு.

அந்தக் கால அரசர்கள் வருகைக்குமுன் காவலர்கள் கூறும் கட்டியம்போல், “ஊழல் புரிந்து தண்டனை பெற்றாரே அவரே இவர்” என, ஊழலுக்காக (சட்ட) தண்டனை பெற்றவர்கள் செல்லுமிடமெல்லாம், ஏளனமும், எள்ளிநகையாடலும் புரியும் சமூகத்தின் சுட்டிலிருந்தும், குட்டிலிருந்தும் இவர்களால் எப்படி தப்பிக்க இயலும்? ஊரை அடித்து தம் உலையில் போடுவோரால், ஊர் வாயையெல்லாம் ஒருசேர மூடி உரையிட முடியாதே! இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சமுதாய தண்டனை கால, இட அளவுகளுக்கு அப்பாற்பட்டது. தலைமுறை தண்டனையிது. இது சில வேளைகளில் சற்று கடுமையானதாகவே அமைந்துவிடுவதும் உண்டு. சில புல்லுருவிகள் செய்யும் தவறுக்கு, ஒருபாவமும் அறியாத அவர்தம் மனைவிää மக்கள்ää உற்றார், உறவினர்களும் விலையைக் கொடுக்கும்படி அமைந்துவிடும் பொழுது, இந்தத் தண்டனை சற்று கடுமையாக தெரிந்தாலும், பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றிச் செயல்படும் இத்தகைய ஊழலர்களுக்கு இது மிகக் தேவையான ஒன்றாகத்தான் ஏற்கவேண்டியுள்ளது.

இவர்கள் சமுதாயத்தைக் குறைகூறுவதை விடுத்து, இந்நிலையை வருவித்துகொண்டது எதனால் என தமக்குத்தாமே எண்ணுவார்களானால் ஒருவேளை தெளிவு பிறக்க வாய்ப்புண்டு. மேற்கூறிய தனிச் செய்தி குறித்து நம் வேதனையை இத்துடன் நிறுத்தி, நீதித்துறையில் ஊழலின் பொதுத்தன்மை குறித்து சற்றே சிந்தனை செலுத்துவோம்.

நீதித்துறையில் ஊழலென்பது சில காலங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தலைநகர் டில்லியில் ஓர் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நடத்தியோர் “அனைத்துலக தெள்ளத்தெளிவு- இந்தியா” (Transparency International - India ) என்ற அமைப்பினர். இக்கூட்டத்தின் ஆய்வுத் தலைப்பே “இந்திய நீதி முறைமையில் நிலவும் தாமதமும் முறைகேடுகளும் அதற்கான தீர்வுகளும்”. இக்கூட்டத்தை தலைமை ஏற்றவர் முன்னால் தலைமை நீதிபதியும் அன்னாள் தேசிய மனித உரிமை கழகத்தின் தலைவருமான திரு ஜே.எஸ்.வர்மா அவர்கள், பங்கேற்றவர்களில் முக்கியமானவர்கள் திரு பி.பி.ஜீவன்ரெட்டி(சட்ட ஆணைக்குழு தலைவர்), திரு சோளி ஜே. சோராப்ஜீ (தலைமைச் சட்ட அதிகாரி) மற்றும் பல மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

இக்கூட்டத்தில் நீதிதுறையில் ஏற்படும் தாமதம் மற்றும் முறைகேடுகளுக்கான காரணங்கள் நன்கு ஆராயப்பட்டு அவைகளை களைவதற்கான பல்வேறு தீர்வுகளும் ஆலோசனைகளாக வழங்கப்பட்டது. முறைகேடுகளின் தோற்றுவாய் என அறியப்பட்டவைகளில் சில முக்கியமானவற்றின் பட்டியலை காண்போம்.

1. அரசியல் மற்றும் அதிகார தலையீடு.

2. நீதித்துறை நேரடியாகவோ மறைபொருளாகவோ மக்களுக்கு விடையளிக்க வேண்டாத நிலை (Non Accountability).

3. “நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரம் வாயிலாக கிடைக்கும் அபரிமித பாதுகாப்பு.

4. நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவு.

5. வழக்கறிஞர்களின் ஒழுங்கீனம் மற்றும் ஒத்துழைப்பின்மை.

6. வழக்கு முடிந்தும் தீர்ப்பு நீண்ட நாள் ஒத்திவைப்பு.

7. நீதிபதிகளிடம் சட்ட நுணுக்க வல்லாண்மை குறைவு.

8. புலனாய்வில் காவல்துறை குறைபாடுகள்.

9. மக்களின் பழக்க வழக்கங்கள் அறியாத மாநிலங்களுக்கு நீதிபதிகளின் திடீர் மாற்றல்கள்.

10. நீதிபதிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிலவும் சிக்கல்கள்.

முக்கிய தீர்வு ஆலோசனைகள்:


1. நீதிபதிகளின் தேர்வு முழுமையும் நீதித்துறையாலேயே நிறைவு செய்வது.

2. நீதிபதிகளின் ஊதியமும் பதவி உயர்வையும் அதிகமாக்கி, முறைகேட்டு ஆசையை (Temtation) குறைப்பது. (ஆகா… எத்தனை புத்தர்கள் வேண்டுவதோ…இவர்களின் ஆசைக்கு வேலியிட..)

3. மிகுந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிபதிகளின் தேர்வு.

4. வழக்குகளுக்கான கால நிர்ணயம்.

5. நீதிபதிகளுக்கான பணி ஒழுங்குமுறை (Code of Conduct) வடிவமைப்பு.

6. பணி ஓய்வின் பின் எந்த அரசு அலுவலும் ஏற்க தடை. (ஆகா…வசதி வாய்ப்புகளை அவ்வளவு எளிதில் உதறிவிட முடியுமா என்ன?...)

இவை அனைத்தும் நீதிபதிகள் அடங்கிய குழுவால் மறுஆய்வு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக பாராளுமன்றம், நீதித்துறை, வழக்கறிஞர் மன்றம் (Bar Council) மற்றும் பொது மக்கள் மன்றம் முதலியவற்றில் அளிக்கப்படும் என அறிவித்தார்கள். அவ்வாறு அளிக்கப்பட்டு, உரியவர்களால் உரிய நடவடிக்கைகள் எவையேனும் உரிய தருணத்தில் எடுக்கப்பட்டிருக்குமானால் மேற்கூறிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை அல்லவா?

ஊழலின் தன்மைகள் பற்றியும், அவற்றால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் குறித்தும், மலையளவாய் பேசியும் எழுதியும் வருகிறோம். விளைந்த பயன் கடுகளவேனும் தேறுமா என்பது ஐயமே! எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தனது “ஓரிரு எண்ணங்கள்” பகுதியில் ஒன்றைக் கூறினார். “பலர் தாங்கள் ‘கையூட்டு கொடுக்காதார் சங்கம்’ தொடங்கி நடத்திக்கொண்டு வருவதாக என்னிடம் வந்து கூறினார்கள். நான் நினைத்துக்கொண்டேன், இதனால் மட்டும் என்ன பெரிய பலன் கிடைத்துவிடபோகிறது மாறாக ‘கையூட்டு பெறாதார் சங்கம்’ தொடங்கப்பட்டால் அல்லவா ஊழல் குறைய வகையேற்படும் என்று”. இக்கூற்று முற்றிலும் உண்மையல்லவா?

எனவே நாட்டின்கண் நாட்டமுடைய அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இந்த ஊழலை களைவதர்க்கான வழிவகைகளில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதொன்றே இச்சிறு கட்டுரையின் நோக்காக விழைகிறேன்.

குறிப்பு:
மேற்கண்ட கட்டுரையின் எல்லை இத்துடன் முடிவுற்றது. ஊழலை ஒழிப்பதற்கான இலவச ஆலோசனையாக எனது நண்பர் கூறிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்படுகிறது. நகையணியில் நாட்டமுடையோர் முன்னேறுக. மேலும் நீங்களும் நீதி அரசர்களாகி விரும்பிய தண்டனை வழங்கி மகிழ்வதிலும் எந்த தடையுமில்லை.

1. தேச விடுதலைக்காகää வ.உ.சி சிறையில் இழுத்த செக்கை இவர்களைக் கொண்டு இழுக்க வைக்கலாம் என்றவர். உடனே எண்ணத்தை மாற்றிக்கொண்டுää அந்தப் புனிதர் கைபட்ட செக்கின் புனிதம் கெட வேண்டாம். அதைவிட கடினமான வேறு செக்கைக் கொடுத்து இழுக்க வைக்கலாம் என்றார்.

2. “நான் கையூட்டு பெற்றதற்காக தண்டிக்க பட்ட ஆசாமி” என்ற பெயர் பலகையைää அவர்களின் மீதமுள்ள பணிக்காலம் முழுமையும், கழுத்தில் தொங்கவிட்டுக;காண்டே பணியாற்ற வேண்டும் என பணிக்கலாம்.

3. ஊழல் புரியும் அதிகாரிகளை அழைத்து வந்து “ரமணா” திரைப்படத்தை நூறுமுறை கட்டாயமாக பார்க்க வைக்கலாம்.

4. “லாரி டிரைவர் ராஜாக்கண்ணு” திரைப்படத்தைப்போல்ää ஊழலால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டிற்கு ஊழல் புரிந்தவர் சென்றுää அவர்கள் வீட்டு திண்ணையில் உறங்கிää அவர்களால் வெறுக்கப்படும் வேலையாளாகப் பணியாற்ற தீர்ப்பளிக்கலாம்.

5. அவரவர் செய்த ஊழலை, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, ஏற்ற தண்டனையை ஆலோசனையாக வழுங்குவோருக்குப் பரிசு திட்டம் அறிவிக்கலாம்.

6. இறுதியாக நண்பர், பழைய காலங்களில் “கழுவாய் ஏற்றுவது” என்பார்களே, அப்படி என்றால் என்ன? என்ற வினாவோடு முடித்துக்கொண்டார்.

Saturday, February 19, 2005

வெந்த புண்ணில் வேல் - கோபியார் இலங்கை வருகை !

-மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிகப்பெரிய பொது அமைப்பான ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுசெயலாளர் திரு.கோபி அன்னன் அவர்களின் இலங்கை வருகை, தமிழர்களின் இதயத்தில் வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்கியதாக அமைந்துவிட்டது. துயருற்றவருக்கு அளிக்கின்ற ஆறுதல் வார்த்தைகளில் கூட
“ஓர் கண்ணில் வெண்ணை பிறிதொன்றில் சுண்ணாம்பு” என்னும் ஓரகம் காட்டிவிட முடியும் என்பதை நிருபித்திருக்கிறது. சமீப காலமாக ஐக்கிய நாட்டுச் சபையின் பயன்பாடு மட்டும்தான் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது என எண்ணியிருந்தோருக்கு, அதன் பண்பாட்டிலும் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நிருபித்திருக்கிறது. மேலும் தமிழர்களின் வாழ்வு நிலைக்கு இலங்கை அரசு தரும் மதிப்பீடுகளை, தாயக தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒருமுறை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கிறது.

கோபி அன்னன் அவரது வருகை தொடர்புடைய நிலையினை நாம் மூன்று அங்கங்களாக உற்று நோக்கவேண்டும்.

1. ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்.
2. சந்திரிகா அம்மையாரும் அவரது சிங்கள இனவாத அரசும்.
3. தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்.

ஐக்கிய நாட்டுச் சபை மற்றும் அதன் பொதுச் செயலர்:

கோபியாருக்கு எந்த இறை அசரீரி வந்து துயருறும் தமிழர்கள் அனைவரும் “தவிர்க்கப்பட வேண்டிய கனிகள்” என்று ஆணையிட்டது? “சாத்தான்கள் ஓதிய வேத”த்திற்கு “அவரும்” செவிசாய்த்து விட்டார் என்பது வெறுக்கத்தக்க, வேதனைத்தரும் செயல். இங்கு “அவரும்” என இச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பது பொருளற்றதல்ல. யார் இந்த கோபியார்? அவர் ஒரு தனிமனிதரல்ல-அவர் விரும்பிய வண்ணம் செயல்பட-ஓர் பேரமைப்பின் தலைமையின் குறியீடு. அவ்வமைப்பும் எத்தகையது. நாடு என்ற எல்லைகளை மட்டுமல்ல இன, மொழி மற்றும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்த ஒரு பொது அமைப்பு.

ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுமைத் தத்துத்வதை உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் அது தோற்றுவிக்கப்பட்ட காலச் சூழலை எண்ணிப்பார்க்க வேண்டும். இருபெரும் உலகமகா யுத்தங்கள் கற்பித்த பாடத்தின் வெளிப்பாடுதான் ஐக்கிய நாட்டுச் சபை. இன்றளவும் அம்வமைப்பு தன் நோக்காக (அதிகாரபூர்வகமாக) வறையறுத்துள்ளதில் முக்கிய அங்கமாய் விளங்குவது மனிதனின் தன்மானமும், சம உரிமையும், உலக சமாதானமும். அந்த தன்மானமும், சமத்துவமும் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுவதில் ஒட்டுமொத்த தமிழர்களும் மனம் குமுறாமல் வேறு என்ன செய்வது?


கோபியார் தமிழ் மக்களுக்கு என்ன சமாதானம் அளித்திருக்கிறார்? தான் தமிழர் பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் செல்வதையே விரும்பியதாகவும் ஆனால் ஒரு நாட்டின் விருந்தினர் என்ற வகையில் பயணத் திட்டங்கள் அரசே வகுக்க வேண்டியுள்ளதால் அது தன்னால் இயலவில்லை, எனினும் மற்றொருமுறை தமிழர் பகுதிக்கு வருவேன் என்பதும்தான்.

தமிழர் பகுதிக்குச் செல்லாத அவர் செயலை அவர் வார்த்தைகளிலேயே ஆய்வுசெய்தால்…
மனிதாபிமான அடிப்படையில் செல்ல விரும்பினேன் என்கிறார். ஆக செல்லாதது மனிதாபிமானமற்ற செயல்.
சரி..அவர் எதனால் தமிழர் பகுதிக்கு செல்ல விரும்பினார்? அதுதான் முறையானது. எனவேதான் விரும்பினார். அவ்வாறாயின் தான் விரும்பிய, ஒரு முறையான செயலை நிறைவேற்றிக்கொள்ள, நாடுகடந்த அதிகாரம் படைத்த ஓர் அமைப்பின் தலைமைக்கு இயலவில்லை என்றால் என்ன பொருள்?
அந்த அமைப்பில் நிலவும் நடைமுறைச் சட்டதிட்ட சடங்குகளின் அவலம்தான் இதன் பொருள்.

மறுமுறை வருவேன் என்பது இதனிலும் வேதனைக்குரியது. ஒரு தெருவில் உள்ள இரு வீட்டில் துயரச் சம்பவங்கள் நிகழ்வுறுகின்றது. ஒரு இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறிய ஒருவர், ஒன்றுமே கூறாமல் சென்றுவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் மற்ற இல்லத்திற்கு பிறிதொருமுறை வருகிறேன் என்பது எவ்வளவு உணர்வற்ற, அருவறுக்கத்தக்கது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வீட்டிற்கு பொருந்துகின்ற இதே நியதி எந்த நாட்டிற்கும் பொருந்தும்.

நடந்து முடிந்துவிட்ட ஒரு சாதாரண நிகழ்வுக்கு மிக வருத்தி பொருள் கொண்டு, இத்துனை அளவுக்கு விமர்சிக்க வேண்டுமா? என நம்மில் சிலர் எண்ணக்கூடும். அத்தகையவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் விமர்சிப்பது தனிப்பட்ட கோபி அன்னன் அவர்களை அல்ல. நாம் அவரது தனிமனித சிறப்புகளை அறியாதவர்களுமல்ல. தமிழர் பகுதிக்கு வரவில்லையே என்ற விவாதம், அவர் இலங்கைக்கு வந்து சென்றபின் தோன்றியிருக்குமானால், திரு கோபியாரின் சமாதானம் மிகச் சரியாக பொருந்தும், நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நடந்தது என்ன? அவர் மாமன்றத்தை விட்டு புறப்படும் முன்பாகவே இக்கோரிக்கை வேண்டுகோளாக வைக்கப்பட்டு, ஆய்வில் உள்ளதாகவும், அவர் வருவதற்கு விரும்புவதாகவும் கூறப்பட்ட பின்பாக தமிழர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நடைபெறுகிறது என்றால் என்னவென்றுரைப்பது?

சந்திரிகா அம்மையாரும், அவரது சிங்கள இனவாத அரசும்!

கோபி அன்னன் அவர்களை தமிழர் பகுதிக்குள் அனுமதிக்காததன் வாயிலாக, சந்திரிகா அம்மையார் அவரது நரித்தன அரசியலை மட்டுமா உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்?
இன்னும் பல முக்கிய செய்திகளையும் உணர்த்தியுள்ளார்.

உலகமே கண்ணீர் வடித்த சுனாமி துயருக்கு பின்னால் அம்மையார் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. துயர்துடைப்பு பணிகளில், எந்தவித இன வேறுபாடுகளுக்கும் அல்லது திசை வேறுபாடுகளுக்கும் இடமளிக்காது, விடுதலைப் புலிகளோடு அரசு இணைந்து செயல்படும் என்றும், விடுதலைப் புலிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டது. விடுதலைப் புலிகளும் அரசு ஒத்துழைக்குமானால் இணைந்து செயல்பட இணக்கம் காட்டினர். இன்றளவும் அவ்வாறே செயல்பட்டும் வருகின்றனர். அம்மையார் ஏதோ புலிகளின் மீது பாசம்கொண்டு, நேசம்கொண்டு அல்லது தமிழ் மக்களின் மீதும் அவர்கள் படும் துயர்மீதும் கரிசனத்துடன் இந்த வேண்டுகோளை விட்டுவிடவில்லை. பிறகு என்ன காரணம்?.

விடுதலைப் புலிகள் அமைப்பானது, துயர் நிகழ்வுற்ற அடுத்த நொடிமுதல், உலகே வியக்கும்படி தங்கள் மீட்பு பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது. இவர்களது பணிகளின் துரிதத்தையும், நுட்பத்தையும் வெகுவாக பாராட்டி “வாஷிங்டன் டைம்ஸ்” பத்திரிக்கையின் செய்தியாளர் திரு. ஆர்தர் மாக்ஸ் அவர்கள் ஒரு மிகப்பெரிய கட்டுரை எழுதுமளவுக்கு விடுதலைப் புலிகளின் செயல்பாடு அமைந்துவிட்ட பிறகு, அம்மையாரின் அரசுக்கு அவர்களின் உதவியின்றி வேறு வழியில்லை என்ற கையறு நிலையில்தான் வேண்டுகோள் விடப்பட்டதேயன்றி பிறிதொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளோடு புனரமைப்பு பணிகளில் இணைந்து செயல்படும் எனும் அறிக்கை ஓர்புறம், தமிழர்களை தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்குவது மறுபுறம் என நரித்தனத்தின் மொத்த வெளிப்பாட்டையும், நாகரீகமற்ற அரசியல் அழுக்குகளையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சாதாரண அனுதாப செய்தியைகூட (இதுபோன்ற கொடிய நிகழ்வுகளின் தாக்கத்திலும்) சிங்களர்களையும், தமிழர்களையும் சமமாக பாவித்து பகிர்ந்தளிக்க இயலாத இந்த சிங்கள அரசுதான், நாளை ஒருவேளை சமாதான நிலை ஏற்பட்டு, இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓர் இடைக்கால அரசு அமைந்தால் வடக்கையும், தெற்கையும் இரு கண்களாக பாவித்து நாட்டின் வளத்தையும் நலத்தையும் பகிர்ந்தளிக்கப் போகிறார்கள். என்னே இவர்தம் இழிநிலை?

அம்மையாரின் இவ்விருமுக வேடம், புலிகளை பொருத்தமட்டில் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதைக் காட்டிலும், ஒருவகையில் அவர்களுக்கு உதவவே செய்திருக்கிறது. அவர்களின் ஒழுங்குமிக்க உள் கட்டமைப்பிலும், நிர்வாக திறனிலும், உலக நாடுகள் புதிய பார்வையை செலுத்த தொடங்கிவிட்டன. இதன் வெளிப்பாடுதான் சுனாமி துயர்துடைப்பு பணிகளில் உதவிகள் புரியும் பல நாடுகளும், அம்மையார் அரசிற்கு பல அழுத்தத்தை கொடுக்க முனைந்திருப்பது.

தமிழ் மக்கள் எண்ணமும் செயலும்!

இலங்கை மண்ணிலும் உலக அரங்கிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் ஒட்டுமொத்த தமிழினமும் மிக ஊன்றி கருத்தில் கொண்டு செயல்படவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
அம்மையார் அரசு மட்டுமல்ல, இனி வரும் எந்த இலங்கை அரசும், தமிழர்களை முழுமையாக புறம்தள்ளிவிட முடியாது. இதுகாறும் இலங்கை மண்ணில் இன்னலுற்று வரும் தமிழர்தம் வாழ்வு மீண்டும் தன் பழம் பெருமையோடு புகழ்மிகு வாழ்வாய் மலரும் காலம் கனிந்துவரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்கள் ஒன்றை மிக ஊன்றி சிந்தித்து தெளிவடைய வேண்டும்.

அன்றும், இன்றும் தமிழனிடம் எவையில்லை? ஒன்றே ஒன்றைத்தவிர? அன்பä அறம், மறம், பணிவு, துணிவு என அனைத்துமுண்டு. ஆனால் எல்லாக் காலங்களிலும் தமிழனின் ஒற்றுமை மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்து வருகிறது. அனைத்தும் இருந்தும் தமிழர்களாகிய நாம் “நெல்லிக்காயென” சிதறுன்டு அல்லலுறக் காரணத்தை ஈராயிரமாண்டுக்கு முன்பாகவே, “பல் குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” என நம் பொய்யா மொழியார் புகன்றார். எனவே இனியேனும் அனைத்து வகை உட்பகைகளையும் ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழர்தம் நல்வாழ்வு உயர விழைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

திருவாளர் சோ அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் !

- மன்னை மாதேவன்

“தட்ஸ்தமிழ்.காம்” இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது

திரு சோ அவர்களே!
தாங்கள் தமிழக மக்களுக்கு முதலில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானீர்கள். அன்றைய நாட்களில் உங்கள் நடிப்பு வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும்படியான நல்ல நகைச்சுவை நல்கியது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. உங்கள் அந்த திறமைக்கு பெரிதும் உதவியது உங்களது அசாதரணமான கண்கள் என்றால் அது மிகையாகாது. அதன்பின் நாடகத்துறையில் நுழைந்தீர்கள். உங்கள் நாடகங்கள், வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே என வரையறுத்து ஒதுக்கிவிட இயலாதவாறு தீவிர அரசியல் விமர்சன “புரட்சி நாடகங்கள்” என்னும் நலைக்கு உயர்ந்து, அத்துறையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அத்தகைய தாங்கள் நடிப்புத்துறையிலேயே நிலைகொண்டிருந்தால் இன்று அத்துறையில் இமாலய சாதனை படைத்திருப்பீர்கள் என்பதும் ஓரளவு அனுமானிக்க கூடியதே.

கலைத்துறை செய்த பாவமோ அல்லது தமிழக மக்களாகிய நாங்கள் செய்த பாவமோ தாங்கள் பத்திரிக்கை துறையில் கால் பதிக்க முடிவெடுத்து திடிரென நுழைந்தே நுழைந்து விட்டீர்கள். அதிலும் எப்படி நுழைந்தீர்கள்? புத்திரிக்கை தொடங்குவதற்கான ஆசையை அல்லது தேவையை வெளிப்படுத்தி இத்துறையில் எவ்வாறு வளரப்போகிறோமோ எனும் ஒரு மெல்லிய அச்ச உணர்வோடு பத்திரிக்கையை வாங்குவதற்கான பணிவான வேண்டுதல்கலோடு இப்படி ஏனைய சாதராணமானவர்கள் வழிமுறைகளில் தாங்கள் நுழையவில்லை. அனுமன் மலையை ஒரு கரத்தில் அனாயாசமாக சுமந்துகொண்டு பெருங்கடலை துட்சமாக தாண்டும் காட்சிபோல் மிகப் பெரிய உருவகத்தை உருவாக்கிக்கொண்டே தடாலடியாக நுழைந்தீர்கள். தங்கள் பத்திரிக்கை, அதுவரை தமிழக மக்களுக்கு அவ்வளவாக பரிச்சயப்படாத “புலனாய்வு இதழியல்” என்ற வகையிலும் இன்னும் ஓர் படி மேலே சென்றும், அதுவரை பல்லாண்டுகள் உழைத்து பத்திரிக்கை “ஜாம்பவான்கள்” என்று இடம் பிடித்திருந்தவர்கள் மத்தியில் உங்களை அமரவைத்ததோடு, அவர்களில் சிலரை அதிரவும் வைத்தது.

அன்று அனைத்து தமிழகத்தின் பத்திரிக்கையாளர்களும் தாங்கள் எந்த தளத்திலிருந்து அல்லது எதன் சார்பாக தங்கள் எழுத்துக்களை தருகிறோம் என நேரடியாகவோ அல்லது சற்று இலைமறை காயாகவோ தெளிவுபடுத்தியே தங்கள் பத்திரிக்கை பணியினை செய்தார்கள். ஆனால் தாங்களோ, ஏனைய பத்திரிக்கையாளர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டுள்ளதாகவும், தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உள்ளதாகவும், தாங்கள் எந்த சார்புநிலைக்கும் உட்படாததால், எவரையும் எதையும் துணிந்து விமர்சிக்கும் நோக்கும், போக்கும் உள்ளவராகவும் விளம்பரப்படுத்திக் கொண்டீர்கள். ஆரம்பநாட்களில் இந்த உங்கள் விளம்பரத்திற்கு சற்று வலுவும், பொருளும் இருக்கத்தான் செய்தது. எனவே நடுவு நிலைச் செய்திகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த பலரும் உங்களை உச்சாணிக் கொம்பில் கொண்டு நிறுத்தினர். உங்கள் எண்ணத் தராசு வள்ளுவன் கூறியபடி “சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல்” அமைந்து அதன் வாயிலாக நீதிதேவதை தமிழகத்தின் தெருக்களில் தாண்டவமாடுவாள் என எதிர்பார்த்தனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

உங்கள் திறமையால் - (நன்றாக நினைவில் கொள்ளவும் நேர்மையால் அல்ல திறமையால்) – அவர்கள் எதிர்பார்ப்புகளை லாவகமாக கையாண்டு உங்கள் பத்திரிக்கை விற்பனையை கணிசமாக்கிக் கொண்டீர்கள். இந்திய அரசியல் சாசனம் எழுத்து சுதந்திரத்தை எல்லோர்க்கும் அடிப்படை உரிமையாக மிக தெளிவாக வழங்கி மகிழ்கிறது. அதன்பின்னும் உங்களைப் போன்றோர் ஏன் வீண் முகமூடி அணிந்து “உள்ளொன்று வைத்து புறம் ஒன்று” எழுத வேண்டும் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.

பாரதி போன்ற உயர்ந்தவர்களால் போற்றப்பட்ட பல சமுதாய பார்வைகளிலாகட்டும் (உம். “பெண்ணியம்”) அல்லது சமகால அரசியல் விமர்சனங்களிலாகட்டும் உங்கள் எழுத்துக்களில் மிளிர்வது உங்கள் விவாதத்திறமையும் அறிவு மேதமையுமே தவிர உண்மையான நேர்மை கிஞ்சித்துமில்லை. மற்ற சார்புநிலை எழுத்தர்கள் இத் திருப்பணியை செய்தால், அது அவர்களுக்கு உரிய கைக்கட்டு அல்லது இக்கட்டு என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் தாங்கள் மிகப் பெரிய நடுநிலையாளர் என்றும் பத்திரிக்கா தர்மத்தை காப்பாற்றவே அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும் ஒரு மாயை தோற்றுவிக்கபடுவதால்தான் உங்களை இந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டியதாகிறது.

இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் காஞ்சி சங்கரமட விவகாரத்தை எடுத்துக்கொண்டாலே தங்கள் எழுதுகோலின் நடுவுநிலை எத்துனை கேலிக்கூத்து என்பது புலனாகும். நான் மடத்தின் உள் விவகாரங்களில் செல்ல விரும்பவில்லை. எவையெவை உண்மையென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். ஆனால், இந்து மதத்தினுடைய ஏகபோக தத்துவ, ஆன்மீக மற்றும் அதிகார மையமாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய மடம், இன்று இந்து மதத்தினுடைய ஆரம்ப அடிப்படை ஒழுக்க நெறியிலேயே ஓரளவுக்காவது பிறண்டுதான் செயல்பட்டிருக்க வேண்டும் என்று, விருப்பு வெறுப்பற்ற சாதரண மக்கள் எறத்தாழ முடிவுக்கே வந்துவிடும் அளவுக்கு மடத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்திருக்கிறதே! இது என்ன ஒரே ஒரு இரவிலா நடந்துவிட்டது?

இத்தகைய ஒரு மிகப்பெரிய ஸ்தாபனத்தினுடைய செயல்பாடுகளில் சிறு சறுக்கல் தெடங்கிய உடனேயே, அதனுடன் சற்றேனும் நெருக்கமுள்ள தங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடைய தார்மீக கடமை என்ன? இதுவரை இதுபற்றி எழுத உங்கள் எழுதகோல் தவறியதின் காரணம் என்ன? எனது கவனத்திற்கு வரவில்லை என கூற முற்படுவீர்களானால் - (தாங்கள் சார்ந்துள்ள அதே பத்திரிக்கைத் துறை சார்ந்த திருமதி அனுராதாரமணன் இம்மடத்தின்மீது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் குற்றம் சுமத்தியிருப்பதாக கூறுவதையும் கருத்தில்கொள்ளவேண்டும்) – தாங்கள் பத்திரிக்கை நடத்துவதற்கான அடிப்படை தகுதியையே இழந்தவராவீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துள்ள பலர் நிச்சயமாக இந்த கூற்றை ஏற்கவும் மாட்டார்கள். எனவே எஞ்சியிறுப்பது “தெரிந்தும் எழுதவில்லை” அல்லது “எழுத விரும்பவில்லை” என்பதுதான். அவ்வாறானால் அதற்குரிய காரணத்தை விளக்கவேண்டிய பொறுப்பு உங்களை சார்ந்ததாகிறது.

வேறு எந்த அமைப்பிலும் தவறு ஏற்பட்டாலோ அல்லது ஏற்பட வாய்ப்பிருந்தாலோ தங்கள் எழுதுகோல் எந்த அளவுக்கு, அந்த அமைப்பின் மீது கேலிச் சித்திரமாக, கட்டுரையாக குறைந்தபட்சம் ஒரு கேள்வி-பதிலாக பாய்ந்திருக்கும் என்பதை உணர்ந்தவர்கள், உங்கள் இந்த நீண்ட கால இருட்டடிப்பில் உள்ள உங்கள் சார்புநிலையை எண்ணி வேதனைப்படாமல் அல்லது விமர்சிக்காமல் இருக்கவேண்டும் என தாங்களே எதிர்பார்க்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். எனவே தங்களுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.

தாங்கள் உடனடியாக நீங்கள் விரும்புகின்ற அடிப்படை தளத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் சார்பாகத்தான் எழுதப்போவதாக அறிவித்துவிடுங்கள். அரசியல் கட்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் அவ்வளவேன்? இன அமைப்புகளுக்காககூட பத்திரிக்கைகள் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு மட்டும் அந்த உரிமையை யாரும் மறுத்துவிட போவதில்லை. அவ்வாறின்றி இன்னும் உங்களை நடுநிலையாளராகவே காட்டிக்கொள்ள விரும்புவீர்களானால், சற்று வாதத்திறமையை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆத்மார்த்தமாக உங்களை நீங்களே ஒரு “சுய சத்தியப்பரிசோதனைக்கு” உட்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சுய ஆய்வு ஒருவேளை இனியேனும் உண்மையான நடுநிலையாளராக செயல்பட துணைபுரியலாம். மேலும் “பலர் என்னை என் எழுத்துக்காக மட்டும் விமர்சிக்காமல் இன அடிப்படையிலேயே விமர்சிக்கிறார்கள்” என்ற தங்களின் மனக்குறை நீங்கவும் இச்சுய ஆய்வு பயன்படலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


Thursday, February 17, 2005

மானுடம் போற்றுவோம் !

- மன்னை மாதேவன்
இயற்கை நம் இதயத்தை எரியீட்டி கொண்டு தாக்கிவிட்டது. இதுநாள்வரை நம் எல்லோராலும் அன்புடன் “அம்மா” என்று அழைக்கப்பட்ட அலைகடல், நம்மீது நெறுப்பாற்றை வீசி விட்டது. நம் வாழ்நாளில் பாரத
பூமியிலும், இலங்கையிலும், அருகாமை நாடுகளிலும் இதுவரை கண்டிராத கோரத் தாண்டவத்தை நடத்திவிட்டு இப்பொழுது சற்று அமைதியும் அடைந்துவிட்டது. தம் வாழ்க்கையில் சேகரித்த அனைத்து செல்வங்களையும், நொடிப்பொழுதில் இழந்து கதறியதை காட்டிலும், தம் குலக்கொழுந்துகளை தம் கண்முன்பாகவே காலனுக்கு வாரிக் கொடுத்துவிட்டு துடித்தத் துடிப்பின் காட்சிகள், எவ்வளவுதான் முயன்றாலும் மறக்க இயலாமல் தவிக்கிறோம். நம் கண்கள் இனி இப்படி ஒரு காட்சியை காணாமல் அமைய இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழிகள் என்ன உள்ளது என மனம் குமைந்துகொண்டிருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து, உலக உருண்டையின் பல மூலைகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுவருவது, இத்தனை சோகத்திலும் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் இயன்ற வகையில் உதவ முனைப்புடன் செயல்படுவதும் புண்பட்ட நம் இதயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் புனித பணிகளாக தெரிகிறது. இத்துயர் நிகழ்வு தொடர்பாக பல ஊடகங்கள் வாயிலாக நாம் பெற்ற செய்திகளின் சாரத்தை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இலண்டன் மாநகரில் ஒரு தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியை காட்டினார்கள். அங்கு கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், வீதிகளில் தம் கரங்களில் உண்டியல் ஏந்தி பலரிடமும் துணிவுடன், எந்த தயக்கமும் காட்டாமல் உதவி கோருவதும், அவர்களும் எந்தவித அலட்சியமும் காட்டாமல், மிகவும் கனிவுடன் பணமிடுவதும் மிகவும் போற்றுதலுக்கு உரியதாய் இருந்தது. இவற்றுக்கு மேலாக, பகல் முழுதும் அலைந்து திரிந்து திரட்டிய ஆடைகளை ஒழுங்குபடுத்தி, அவைகளை ஊர்திகளில் ஏற்றிச் செல்ல ஏதுவாக, இரவுமுழுதும் கண்துஞ்சாது, அட்டை பெட்டிகளில் இடுவது, காண மிகவும் நெகிழ்சியாக இருந்தது. இவர்களை, இச் செயலில் சரியாக ஈடுபடுத்திய அந்த நிறுவனத்திற்கு நம் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்தே ஆக வேண்டும். செய்ய வேண்டிய உதவியை, சரியான நேரத்தில், சரியாக செய்தார்கள் என்பதற்காக மட்டுமல்ல, இதில் நாம் கவனத்தில் கௌள வேண்டியது, கல்வி பயிலும் போதே அந்த சிறார்களின் இதயத்தில் இந்த ஈரக்கசிவை உருவாக்கி, துயருறும் பிறர்க்கு உதவும் மாண்பை வளர்த்தார்கள் என்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகையில் சமுதாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதையும் எண்ணி பாராட்ட கடமைப்பட்டவர்களாவோம்.

வெக்டோன் தெலைக்காட்சி…அதில் ஒரு காட்சி. அந்த காட்சி வந்துசெல்வது அரை நொடிக்கும் குறைவான கால அளவினதே, ஆனால் அக்காட்சி உலகுக்கு பறைசாற்றும் செய்தியின் சாரம், ஆகா! எத்துனை துயர்வரினும், இடர்வரினும், இன்னும் மானுடம் மட்டும் முழுமையாக செத்தொழிந்துவிடவில்லை என்பதுதான். அக் காட்சியை, எவரேனும் ஓர் ஓவியர் கண்டிருப்பாரானால், அவரது தூரிகை இந்நேரம் “மோனலிசாவிற்கு” இணையான மற்றுமொரு ஓவியத்தை படைத்திருக்கும். அப்படி என்னதான் அந்த காட்சி? இலங்கைக்கே உரித்தான இயற்கை சூழ்ந்த ஓரிடம். அருகில் உள்ளது ஒரு சிற்றாறு. அந்த ஆற்றிலிருந்து தண்ணீர் மனித உயிர்களை விழுங்க அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது. எல்லோரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அதி வேகத்துடன் சிதறி ஓடுகிறார்கள். அந்த அலைகளில் இருந்து ஒரு சிறிய மீன் கரையில் தூக்கி எறியப்படுகிறது. அம் மீனுக்கும் ஏற்படபோகும் அவலங்கள் தெரியுமோ என்னவோ..அதுவும் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறது. இக்காட்சி உயிருக்கு அஞ்சி ஓடிக்கொண்டிருக்கிற அந்த மனிதரின்..அல்ல அல்ல மாமனிதரின் கண்களில் படுகிறது. ஓடிக்கொண்டிருந்தவர், திரும்பிவந்து குனிந்து, அந்த மீனை கரங்களால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டு பின் முன்னிலும் வேகமாக ஓடுகிறார். இதிலென்ன அப்படி பெரிய சிறப்பு இருக்கிறது என எண்ண விழைபவர்கள், தயவுசெய்து உங்கள் இதயத்தை கழட்டி உடனடியாக சலவைக்கு அனுப்பிவிடுவது நல்லது. காரணம்.. தனது உயிருக்கே போராடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திலும், ஒரு சிறிய மீனின் உயிர் துடிப்பை ஒருவரால் உணர முடிகிறதென்றால், அவர் சாதரண மனிதராக இருக்க இயலாது. “வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடினேன்” என்ற வள்ளல் பெருமான்தான் அவர் வடிவம் கொண்டார் என நான் உளமாற நம்புகிறேன். இதில் இதயத்தை இன்னும் நெருடிக் கொண்டிருக்கின்ற மன உலச்சல், அந்த மாமனிதரின் உயிரை சுமக்கின்ற பேற்றை, இன்னும் இந்த உலகு பெற்றிருக்கிறதா என்பதுதான். அவர் இன்னும் கோடி காலம் வாழ வேண்டும் என அவர் திசை நோக்கி தொழுகிறேன்.

இவையெல்லாம் இந்த மண்ணில் மனித நேயம் புல்லாய், பூண்டாய் மறையாமல் இன்னும் நின்று நிலவுவதில் உள்ள பொருளை உணர்த்தி நின்றாலும் காட்சிகளும் செய்திகளும் இத்துடன் நின்றுவிட வில்லை. நாணயத்தின் மறுபக்கத்தைப்போல், நாம் அனைவருமே நாணமுறச் செய்யும் பிற செய்திகளும் இருக்கத்தானே செய்கிறது.

சற்று நாட்களுக்;கு முன்பாக ஒரு செய்தியை படித்தேன். இலங்கையில் இருந்து அனைத்தையும் இழந்து, தமிழக மக்களாகிய நாம் ஒன்றும் அன்னியர் அல்லவே, ஏதோ ஒரு வகையில் உறவுகள்தானே என்ற அதிதமான நம்பிக்கையோடு, நிர்கதியாய் இங்கு வந்தவர்கள், இன்று அவர்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றத்தைக் கண்டு, இனியேனும் நம் மண்ணில் சென்று அமைதியாக வாழ வழி ஏற்படாதா என்ற ஏக்கத்தோடும், ஆவலோடும் மீண்டும் இலங்கை செல்ல முயல்கிறார்கள். அவர்கள் அப்படிச் செல்வதானால், அரசாங்கத்திற்கு மனு செய்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதிபெற்று பின் முறையாக செல்ல வேண்டும். “அரசாங்கமும் மனுவும்” – நாம் அறியாததல்ல. “உங்கள் மனு பரிசீலனையில் உள்ளது” என்னும் அரசாங்க தாக்கீது சிலவேளைகளில் நம் தலைமுறைக்குள் வந்துவிடலாம். இந்த கால தாமத அச்சத்தாலோ அல்லது அறியாமையாலோää விரைவாக சென்றுவிடலாம் என குறுக்கு வழிகளை தேடுகிறார்கள். இது ஒன்று போதாதா சில புண்ணியவான்கள் இடைத்தரகர்களாக, ஏஜண்டுகள் என்ற பெயரில் முளைப்பதற்கு. இந்த ஏஜண்டுகள் அவர்களிடம் உள்ள கைப்பொருளையெல்லாம் கறந்தபின்னும், குறைந்தபட்சம் அவர்களை அவர்கள் நாட்டுக்காவது அனுப்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை. அவர்களிடையே உள்ள தெழில் போட்டியில், காவல்துறையிடம் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்து விடுவதும் அல்லது முழமையாக ஏமாற்றிவிடுவதும், மீண்டும் அவர்கள் கூண்டில் அடைப்பட்ட கிளிகளாக அகதிகள் முகாமில் முடங்கிவிடுவதும், என்ன கொடுமையிது?. துயரக் கடலிலேயே வாழும் இந்த மக்களிடமும் எத்தி பிழைக்கும் அந்த புல்லுருவிகள் உண்மையில் மனிதர்களா? இதயமென்றால் என்னவென்றே தெரியாத விலங்கினங்களா என எண்ணத்தோன்றுகிறது அல்லவா? அவசரப்பட்டு விடாதீர்கள்..இவர்களையும் விஞ்சுகிறது அடுத்த செய்தி.

வேளாங்கண்ணி… காவல்துறை என்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்கிறது. இவர்கள் செய்த காரியமென்ன? மனித இனமே வெட்க்கித் தலைகுனிய வேண்டிய செயல். தன்னை நாடி வந்தோர் குறைகளை எல்லாம் போக்கி அருள்பாலித்து வரும் அந்த “அன்னைக்கு” முன்பாகவே ஆயிரமாயிர உயிர்களை தன் கொடிய வாயில் போட்டுக்கொண்ட அந்த கடல் அரக்கியை காட்டிலும், இவர்கள் செயல் கொடிது, கொடிது கொடிதினும் கொடிது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தோரும், உயிர் நீத்தோரும் அணிந்திருந்த “அந்த சில தங்க நகைகளுக்காக” அவர்கள் அங்கங்களை அறுத்தார்களாம் இப்பாவிகள். அய்யகோ! இவர்களெல்லாம் ஒரு அன்னையின் வயிற்றினின்று உதித்தவர்கள்தானாää மனித இனத்திலாவது சேர்ந்தவர்களா அல்லது சாக்கடைப் புழுக்களா?

இராமகிருஷ்ண பரமஹம்சருடைய கதைகளில் ஒன்று. ஒரு இல்லத்திற்குள் திருடுவதற்கு இரவில் வந்த திருடன், பொழுது புலர்ந்தும் எந்த பொருளையும் எடுத்து செல்லாது, அந்த வீட்டிலேயே எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். எல்லோரும் அவனைப் பிடித்து, அப்படி என்னதான் தேடுகிறாய் என வினவுகிறார்கள். அதற்கு அவன் கூறிய மறுமொழி, நான் இந்த வீட்டினுள் நுழைந்த போது கால் இடறி என் பெருவிரல் நகம் பெயர்ந்து எங்கோ விழுந்து விட்டது. இரவில் நகத்தை வீட்டினுள் போட்டால் அந்த வீட்டின் செல்வங்கள் எல்லாம் அழிந்து வறுமை வந்து விடுமென என் தந்தை எனக்குச் சொல்லியிருக்கிறார். இந்த வீடு செல்வ செழிப்பால் இருந்ததால்தான் எனக்கு இங்கு திருட வேண்டுமென எண்ணமே வந்தது. எனவே இந்த வீட்டிற்கு வறுமை வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் நகத்தைத் தேடிக்கொண்டிருந்து விட்டேன் என்றானாம். திருடன் என்றாலும் அவன் நல்ல எண்ணத்தை மெச்சி அவனை எவரும் துன்புறுத்தாது அனுப்பியதாக கதை. இக்கதையிலிருந்து அன்றைய வாழ்வுமுறையில், குறைந்தபட்சமாகவேனும் சில நியதிகள் நின்று, சமுதாயத்தை காப்பாற்றின என்பதை நாம் காண முடியும். ஆனால் இன்று என்ன நிலை?

சமுதாயம் சில பல நேரங்களில், பெருளாதாரக் குற்றங்கள் புரிபவர்களுக்காக, பரிந்து பேசுவதுண்டு. வறுமை, வளர்ப்புமுறையில் உள்ள குறைபாடு இப்படி பலப்பல கூறுவதுண்டு. ஆனால் உயிருக்கு பேராடுவர்களை பெருட்படுத்தாது வெறும் பெருளுக்காக உறுப்பை அறுக்கும் இவர்களின் கீழ்தர செயலுக்கு சமாதானம் எதுவும் கூற முற்படுவதற்கு பதிலாக இப்படி சமுதாயம் சிதிலமடைவதற்கான காரணங்களை ஆராய முற்படுவது பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இவர்களைப் போன்றோர்களின் மனம் கல்லாய், இரும்பாய் மாறிவிட்டதன் காரணம் என்ன? முன்பெல்லாம் மிகக் கொடியவர்களின் காதுகளில் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நீதிநெறிக் கருத்துக்கள் புகுந்து உரியத் தருணத்தில் பயன்பட்டன. ஆனால் இன்று இத்தகைய குற்றவாளிகளின் காதுகளில் நன்னெறிச் செய்திகள் புகுவதற்கு எந்தவித சந்தர்ப்பமும் இருக்கிறதா? இப்பணியைச் செய்து கொண்டிருந்த மத ஸ்தாபனங்களெல்லாம் அறக்கட்டளை அமைத்து அரசாட்சி புரிவதிலேயே தங்கள் கவனத்தைத் திருப்பி விட்டன. நீதிநெறிக் கூட்டங்கள் புராண, இதிகாச கதா காலட்சேபங்கள், தமிழ் சொற்பொழிவுகள் இவையெல்லாம் மிகவும் அருகிவிட்டதோடு, நடைபெறும் விவாத மேடைகள், பட்டிமன்றங்கள் போன்றவைகளில் இச்செய்திகள் இடம்பெறுகின்றனவா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அல்லது தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்ற மக்களை எளிதாகச் சென்றடைகின்ற ஊடகங்களிலாவது இத்தகைய மனித மேம்பாட்டுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறதாவென்றால், இல்லையென்றே கூறி விடலாம். இவற்றினுடைய வெளிப்பாடுதான் நாம் சந்திக்கின்ற இந்த அவலங்கள்.

இத்தகைய பொருளாதாரக் குற்றவாளிகள், அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சிறைக் கூடத்தைச் சென்று மீழ்கிறார்கள். எனவே குறைந்தபட்சமாக, அங்காவது நன்னெறியாளர்களைக் கொண்டு சிலபல நற்செய்திளைப் அவர்களுக்கு புகட்டுவதின் வாயிலாக இதுபோன்ற மிகத் துயர நேரங்களிலாவது அவர்கள் அணுகுமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என முயற்சிக்கலாமோ என எண்ணுகிறேன்.
எனவே, இவை குறித்து நாம் ஒவ்வொறுவரும் இதய சுத்தியுடன் சிந்திக்க வேண்டுவதோடு, அச்சிந்தனை
நம் “மனிதநேயம்” மேன்மையுற துணைபுரிய வேண்டும் என்பதே என் அவாவாகும்.


**********************

Friday, February 11, 2005

எழுதுகோல்!

- மன்னை மாதேவன்

அமுதம் சொரியும் எழுதுகோல்.
அழுக்கை நிறைக்கும் எழுதுகோல்.
அள்ளிக் கொடுக்கும் எழுதுகோல்.
அனைத்தும் பறிக்கும் எழுதுகோல்.

இன்பம் பயக்கும் எழுதுகோல்.
இதயம் கிழிக்கும் எழுதுகோல்.
உணர்வை உமிழும் எழுதுகோல்.
உண்மை மறைக்கும் எழுதுகோல்.

உதிரம் வடிக்கும் எழுதுகோல்.
உயிரைக் குடிக்கும் எழுதுகோல்.
உழைப்பை உயர்த்தும் எழுதுகோல்.
உழையா நெறிக்கும் எழுதுகோல்.

எண்ணம் தூண்டும் எழுதுகோல்.
எழுத்தை சிதைக்கும் எழுதுகோல்.
ஏழ்மை அகற்றும் எழுதுகோல்.
எதற்கும் உதவா எழுதுகோல்.

கல்லில் வடிக்கும் எழுதுகோல்.
கனவாய் மறையும் எழுதுகோல்.
காவியம் படைக்கும் எழுதுகோல்.
காகிதம் நிறைக்கும் எழுதுகோல்.

துள்ளி குதிக்கும் எழுதுகோல்.
துவண்டு மருளும் எழுதுகோல்.
நாவாய் சுழலும் எழுதுகோல்.
நாயாய் குரைக்கும் எழுதுகோல்.

எழுதும் மக்காள்! வாருங்கள்
எதுதான் வேண்டும் கூறுங்கள்!

உம்மிட மிருப்பது இதிலெதுவோ?
உணர்வாய் ஆய்ந்து தெளியுங்கள்.
பயனாய் எழுதா எழுதுகோலை
பைய தூர கடத்துங்கள்.

உலக உருண்டை பொதுமைக்கும்;
உயர்வை அளிக்கும் கோலெதுவோ!
உவப்பாய் அதனைக் கைகொண்டு,

புதிய எண்ணம், எழுச்சியுடன்
புனித பயணம் தொடருங்கள்.