Monday, March 07, 2005

உயர்நெறிப் பணியிதை..

இந்நாடன்றி எந்நாட் டிடையும் உலவும் ஓர்கதை,
“வாழ்வு என்பது மீழா துயர்யாழ் மீட்டிடும் இசை”.
வாளாதிருக்க வகைபுரி இம்மொழி - வீண்மொழி - விடமொழி.
மனிதா! மனிதா! எப்படி சிக்கினாய் இப்பெரு வலையில்?

“சுழலும் உலக நாடக மேடையில் -
அனைவரும் நாமோர் நாடகப் பாத்திரம்”,
இன்பமும் துன்பமும் வாழ்க்கைக் காட்சிகள்.
“இயக்குதல் விதியே” என்பர் மதியிலர்.

இன்பம் ஓர்முறை இதமாய்ச் சிரிக்கும்,
துயரப் பெரும்புயல் சுழன்றே அடிக்கும் – எனினும்!
பயனுறு வாழ்வு மனிதனின் கரங்களில் - இனிமுதலேனும்
“வாழ்வே மாயம்” தத்துவம் துறப்போம்.

ரோஜா படுக்கைகள் தானே மலரா!
பயண இலக்கை படைப்பவன் மனிதனே!
நாம்தான் பெற்றோம் நாமே ஆளுவோம் - என்பதே இன்று
வீரம் விரவிய வினோத விளையாட்டு.

இயற்கையின் சீற்றம் இசைத்திடும் இசையில்
திசையெலாம் இன்று அச்சமும் திகிலுமே!
மனிதன் பாதையை மறைத்திடும் தடைமலை
தகர்த்திட இன்று தனித்தோள் பயன்படா.

புரையுடை கண்கள், ஒழுகிடும் மூக்கு, ஒலியிடும் மார்பு, உணரா நாசி.
ஆகா! ஆகா!! மாய வியாதிகள் மலை மலை போலும்.
இயற்கையை மனிதன் இலேசாய் சீண்ட,
ஓசோன் படல ஓட்டைகள் நீண்டது.. விளைவு?

சண்டமாருதம், மண்பதைச்சரிவு, குமுறும் எரிமலை, கொன்றிடும் நீள்கடல்.
விண், மண், நீர், நிலம் அடங்கலும் விபத்தாய்! – போதுமோ இவை?
நெஞ்ச வஞ்சமும் நீண்டிடும் போரும் .. வதைக்கவோ மானுடம்?
வெண்புறாவே நீ எங்கே பறந்தாய்! இன்றேன் மறைந்தாய்!!

இலையிலா மரங்கள்; மரமிலா காடுகள்;
நீரிலா ஆறுகள்; நிலத்திடை நிறைந்தன.
நீல வானமும் - கரும்புகை பகைவனால் – கறுத்தது.
பறவைகள் படுதுயர்.. பதைப்போர் எவருளர்?

அவலங்கள் அனைத்தினை அகற்றிடும் ஒளடதம் -
அறிவுத் தீச்சுடர், திறவுகோல் கல்வியே!
உலக அமைதியா? உள்ளத் தமைதியா?
அமுத ஊற்றென அளிப்பது கல்வியே!

உனக்காய் நானும், எனக்காய் நீயும்,
உழைப்போம் எனுமோர் உயர்நிலை வாழ்வை
அள்ளித் தருவது அமுத நற் கல்வியே!
போதிப்போரே!.. போதிப்போரே!! புரைதீர் நல்லீர்!


ஆசிரியப் பணி ஆற்றிடும் பெரியீர்!
உயர்வகை சிலைதமை செதுக்கிடல் உம்பணி!
உள்ளத் தமைத்திதை உதவிட வாரீர்!
உயர்நெறிப் பணியிதை புரிந்திட வாரீர்!!

( இச்சிறு கவிதை - ஆசிரியப் பணி ஆற்றிடும் அனைவர்க்கும் சமர்ப்பணம் )

ஆங்கில ஆக்கம் : தஸ்னீம் மு. அகமது
தமிழாக்கம் : மன்னை மாதேவன்

1 comment:

Anonymous said...

சோதனை பின்னூட்டம்